"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்." - பழைய மொழி.
நேர்மையாய் இருக்கும் அதிகாரிகளைத் தான் தமிழக அரசு, இன்று "கொல்கிறது" ..........
'இன்றைய அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா,' என்ற மக்களின் எண்ணப்போக்கும் காரணமோ?
நியூஸ்:
http://timesofindia.indiatimes.com/city/chennai/IAS-crusader-refuses-to-give-up-fight-against-corrupt-forces/articleshow/6238906.cms
அப்படியே, பழமொழிகள் பற்றி பேச்சு வந்தது. அவர், "அந்த காலத்தில, பல சமயங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல என்று தெளிவுபடுத்தி கொண்டு) , அறிவில் முதிர்ந்தவர் யோசித்ததை - புரிந்து கொண்டதை - அப்படியே பால பாடமாக மற்றவர்கள் மனதில் ஏற்றி விடுவார்கள். "ஏன்? எதற்கு?" என்று கேட்க விடாமல், " இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், சாமி கண்ணை குத்திரும்!" என்று சொல்லி பயமுறுத்தி அடக்கி விடுவார்கள். அதற்கும் அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு "கொள்ளி வாய் பிசாசு" மற்றும் "மல்லிகைப்பூ கேட்கும் மோகினி பேய்," என்றார்.
சில பழமொழிகள் மற்றும் "எதிர்" பழமொழிகள் சுட்டிக் காட்டி, எப்படியெல்லாம் குழப்பி உள்ளனர் என்று விளக்கினார்.
அவரவர் தங்கள் வசத்திக்கேற்ப - சூழ்நிலைக்கேற்ப - பொருள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
அஞ்சு வயசுல, அண்ணன் தம்பி; பத்து வயசுல, பங்காளி.
* தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேற.
* அகன்று இருந்தால் நீண்ட உறவு; கிட்ட இருந்தால் முட்ட பகை.
சொந்தம் உதவுற மாதிரி, பந்தம் இல்லாதவன் உதவுவானா?
* நாலடி என்றாலும் தனக்கு என்று ஒரு இருப்பிடம் இருக்கணும்.
அசை போட்டு விழுங்குவது, மாடு; அசையாமல் விழுங்குவது, வீடு.
* ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.
வாய்மையே வெல்லும். (Honesty is the best policy)
* அஞ்சினவனுக்கு யானை; அஞ்சாதவனுக்கு பூனை.
பூனைக்கு மணியை கட்டுவது யார்?
* புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.
பசி வந்தால், பத்தும் பறந்து போம்.
* வாய் உள்ள பிள்ளை, பிழைக்கும்.
நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும்.
* கடவுள் அமைத்த மேடை. நாம் அதில் ஆடுகிறோம்.
ஆடத் தெரியாதவள், மேடை கோணல் என்றாளாம்.
* கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
* நாய் வாலை நிமிர்த்த முடியாது.
அடிக்க அடிக்க, அம்மியும் நகரும்.
* ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.
* பெண்ணின் மனதையும் கடலின் ஆழத்தையும் கண்டது யார்?
ஆழம் தெரியாமல், காலை விடாதே!
* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.
பொறுத்தார், பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்."
பி.கு.: மாதவன் சார் அனுப்பியது: லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் -- முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மற."