"சின்ன புள்ளைக்கு என்ன தெரியும்? நல்லது கெட்டது நாமதான் சொல்லி தரணும்," என்று என் தோழியின் அம்மா, என் தோழியை சத்தம் போட்டு கொண்டிருந்த "நல்ல" நேரத்தில், அவள் வீட்டினுள் அடி எடுத்து வைத்தேன்.
அவள் அம்மாவை சமாதானப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு "ஆமாம்" போட்டு ஏதோ பேசிக் கொண்டு இருந்தேன். நான் வரும் போது, அம்மாவின் அர்ச்சனையில் உர் என்று இருந்த என் தோழி, கொஞ்ச நேரத்தில்,
முகத்தை திருப்பி கொண்டு சிரிப்பதை பார்த்த பின் தான், நான் என்னையும் அறியாமல் விளாயாட்டுத்தனமாக பேசி கொண்டிருக்கிறேன் என்று புரிந்து கொண்டேன். ஆனாலும், என் தோழியை சிரிக்க வைத்து விட்டோமே என்ற சந்தோஷம் எனக்கு.
அதன் பின், என் மனதில் தோன்றிய கேள்விகள்....
குழந்தைகளுக்கு நல்லது கெட்டது சொல்லி கொடுக்கிற வயது என்ன?
குழந்தைகளுக்குரிய innocence, எப்பொழுது தொலைகிறது?
அல்லது, தொலைக்க வைக்கப்படுகிறது?
குழந்தை மனதில், உலகத்தை குறித்த பார்வை என்ன வென்று தெரிந்து கொள்கிறோமா?
உலகத்தை குறித்த நம் பார்வை என்னவென்பதைத்தான் குழந்தைகளின் மனதில் விதைக்கிறோமா?
குழந்தையின் வெள்ளை மனதுக்கும் (child-like), சின்ன புள்ளத்தனத்துக்கும் (childish) உள்ள வித்தியாசம் எப்பொழுது பிள்ளைகளிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது?
இது நடந்து, இரண்டு வருடங்கள் ஆயிற்று.
என் மகளுக்கு, பிறந்த நாள் பரிசாக, ஒரு நண்பர், "தீயதை பார்க்காதே; தீயதை பேசாதே; தீயதை கேட்காதே" என்ற பொம்மையை (figurine) கொடுத்தார்.
அவளிடமும் அதை பற்றி சிறிது விளக்கினார். நன்றி சொல்லி பெற்று கொண்ட அவள், பக்கத்தில் விளையாடி கொண்டிருந்த தன் தம்பியிடம் காட்டினாள்.
"தம்பி, இந்த மங்கி என்ன செய்யுது?"
"(flying) kiss தா"
"இந்த மங்கி?"
"peek-a-boo" (கண்ணா மூச்சி விளையாட்டு)
"இந்த மங்கி?"
"எட் போன் பாட்டு" (head phones ல பாட்டு)
கேட்டு கொண்டிருந்த அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் மகன் சொல்வதை திருத்த யாருக்கும் மனம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு, அவன் விளையாட்டு பார்வையில் உலகத்தை பார்க்கட்டுமே......
ஒரு நாள், நல்லது கெட்டது அவனுக்கும் தெரியும். அன்று அவனும், "தீயதை பேசாதே; தீயதை பார்க்காதே; தீயதை கேட்காதே" என்று சொல்லி கொண்டு இருப்பான்.
ம்ம்ம்ம்ம்ம்.......... ..... Once innocence is lost, நல்லது கெட்டது புரிந்து விடுகிறது. இல்லை, நல்லது கெட்டது தெரிவதற்காக, innocence தொலைத்து விடுகிறோமா? ம்ம்ம்ம்ம்ம்ம்.......
இந்த வாரம், என் மகன் செல்வம், தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான். :-)
(படங்கள்: கூகிள்)