Showing posts with label தெய்வ நம்பிக்கை. Show all posts
Showing posts with label தெய்வ நம்பிக்கை. Show all posts

Tuesday, April 19, 2011

ஈஸ்டர் முயல், முட்டை போடுதா?



நான் அமெரிக்கா வந்த புதிதில்,  ஈஸ்ட்டர் திருநாள் நெருங்கி கொண்டு இருந்த பொழுது, ஆலயத்தில் பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொண்டோம்.  அந்த சமயம் கடைகளுக்கோ அல்லது ஷாப்பிங்  மால் (mall ) சென்ற பொழுது, ஈஸ்ட்டர்க்கு பொருத்தமான இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள் வெளியே இல்லாமல்,  எங்கு பார்த்தாலும்  முயல் , கூடை நிறைய வண்ண நிற முட்டைகளை வைத்து இருப்பது போல படங்களும் chocolates மற்றும் அலங்காரங்களும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்  இருந்தன.  ஆண் முயல் - பெண் முயல் போன்று costumes அணிந்து கொண்டவர்களும் தென்பட்டார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  



இந்தியாவில் இருக்கும் வரை,  ஈஸ்டர் என்பது கிறிஸ்தவ திருநாளாகவும்,  ஈஸ்டர் கொண்டாட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புமே காரணமாக கேட்டு பழகியவளுக்கு , இது புது மாதிரியாக இருந்துச்சு.  



பொதுவாக உலக நாடுகளின் பார்வையில், அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடாகவே காணப்படுகிறது.  பெரும்பாலான அமெரிக்கர்கள்,  கிறிஸ்தவர்கள் தான்  என்பது உண்மையே.

ஆனால், ACLU என்ற ஒரு க்ரூப் பெரிய அளவில் வந்த உடன்,  எல்லா மதங்களின் (கிறிஸ்தவ மார்க்கம் உட்பட) திருவிழாக்களும் கொஞ்சம் பின் வாங்கி அவரவரின் ஆலயங்களிலும் ஆலயம் சார்ந்த இடங்களிலும் கோவில்களிலும் வீடுகளிலும் என்ற அளவுக்கு குறுக்கப் பட்டு விட்டன.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முன் உரிமை கொடுத்து சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வில் பொது இடங்களில், குறிப்பாக அரசாங்க பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான குறியீடுகளோ வழிபாடுகளோ இருக்க கூடாது என்று சட்டப் பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு ACLU முன்னேறி வந்து இருக்கின்றது.    


Majority   ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட,   இங்கு minority   ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின்  உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம்.  தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள்,  அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம். 

ACLU பற்றிய விவரங்களுக்கு: 


இது ஒரு புறம் இருக்க,  ஜெர்மனியில்,  கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பாக வசந்த காலத்தை கொண்டாடும் விதத்தில், செழுமை மற்றும் கருவுறுதிறன்க்கென்று இருந்த  தேவதையான (Goddess of Fertility)  Eostre   என்பவருக்காக கொண்டாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

  வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் என்பதால்,  முட்டை வளமையின் சின்னமாக கருதப்பட்டு வந்து இருக்கிறது.  முயல் இனம்,  குறுகிய நாட்களிலேயே பலுகி பெறுவதற்கு பேர் வாங்கியது.  அதனால் கருவுறுதிறன் சின்னமாக கருத்தப்பட்டு வந்து இருக்கிறது.  வசந்த கால திருவிழாக்களில் (Spring Festival)  இந்த சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யமென்ன?  இதன் பாதிப்பில்,   பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம்.  

Easter treats:  White Chocolate and Regular Chocolate bunnies and eggs: 
  


பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் சிலர், அமெரிக்க வந்து செட்டில் ஆன பொழுது, தங்களுடன் தங்கள் பாராம்பரிய பழக்க வழக்கங்களையும் கதைகளையும் சேர்த்து  அமெரிக்கா கொண்டு வந்து பரப்பி இருக்கிறார்கள்.  

ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளில்,  பின்னர்  missionaries வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பிய பொழுது,  வசந்த காலத்தை ஒட்டி வந்த ஈஸ்ட்டர் திருவிழாவோடு இந்த கதைகளும் ஒட்டி புது வடிவம் பெற்று விட்டன.  இத பார்றா!!!


கிறிஸ்தவ விழாக்களை வெளிப்படையாக பெரிய அளவில் கொண்டாட முறுமுறுத்த ACLU போன்ற அமைப்புகள் கூட, வசந்த காலத்துக்கென்று இருக்கும் - எந்த வித மதங்களின்  சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ -  அதன் அடையாளங்களாக  வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை.  

1970 s  இல் இருந்து, அமெரிக்காவில்  வியாபார நோக்கு (commercialism)  எல்லாவற்றிலும் தலையிட ஆரம்பித்த பின்,  முயல் , முட்டை போடும் கதைகள்  வியாபார திறன் சாயம் பூசப்பட்டு புது உரு பெற்று - ஜெர்மானிய பூர்வீகத்தை தொலைத்து - வீறு கொண்டு வந்து இன்று வரை உலா வந்து கொண்டு இருக்கிறது.




வரும் ஞாயிறு,  ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம்.  தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும்.   ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக   ஆங்கே ஆங்கே அவர்களுக்காக  வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து  சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ,  பூங்காக்களிலோ  இப்படி விளையாட்டுக்கள் நடக்கும்.  அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம். 

கீழ் உள்ள படத்தில்,  ஒபமா ஒரு சிறு குழந்தைக்கு முட்டை வேட்டையில் உதவுகிறார்: 



கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் என்று ஒரே வரியில் இந்தியாவில் கொண்டாடிவிட்டு வந்த எனக்கு - இப்படி ஜெர்மானிய பாரம்பரியம்  - நாத்திக பாதிப்பு - வசந்த காலம் -  குழந்தைகள் விளையாட்டு எல்லாம் கலந்து கட்டிய  வித்தியாசமான கிறிஸ்தவ திருவிழாவை கொண்டாடுவது  மலைப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

(கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும்  கிறிஸ்துமஸ் கூட,  கிறிஸ்துமஸ் தாத்தா என்று நம்ம ஊரில் அழைக்கப்படும் Santa Claus க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமெரிக்காவில்  கொண்டாடப் பட்டு வருவது, தனி கதை. )

கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும்   ஒரு நாட்டில்,  இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது.  இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து)  மற்றும் வீடுகளில் தவிர  பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல  மறைக்கப்பட்டு  (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. 


அனைவருக்கும்  ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!   

படங்கள்:  கூகுள் அக்காவுக்கு நன்றிகள். 

 

Sunday, November 21, 2010

முன்ன பின்ன செத்து இருந்தால் தானே?

எங்கள் சின்ன வயதில், பாக்கியம் என்ற பாட்டி, எங்கள் ஊரில் இருந்ததை மறக்க முடியாது.    வெள்ளந்தி மனம் கொண்டவர்.  சின்ன சின்ன விஷயங்கள் கூட தெரியாமல், மற்றவர்களிடம் கேட்பார்.  "என்ன பாட்டி, இது கூட தெரியாதா?" என்று யாராவது கேட்டால் போதும் - "தம்பி, முன்ன பின்ன செத்து இருந்தால் தானே,  சுடுகாடு தெரியும்? எனக்கு எப்படி தெரியும்?" என்று சொல்லி பொக்கை வாய் காட்டி சிரிப்பார்.

அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ? அந்த பழமொழிக்கு உண்மையில் என்ன அர்த்தமோ? எனக்கு  தெரியாது. ஆனால்,  கடந்த நவம்பர் 12 ந் தேதி மாலை ஐந்து மணியில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்கள்,  எனக்கு பல அர்த்தங்களை,   கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றன.

அர்ச்சனாவும் அர்ப்பணாவும்  பல கனவுகளுடன்,  மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்தவர்கள்.  இந்த டிசம்பர் மாதத்துடன்,  தங்களது இரண்டரை வருட படிப்பை முடித்து விட்டு,   ஜனவரியில் இருந்து வேலை தேடுவதில் மும்முரமாக இருக்க திட்டம்.

இந்த சூழ்நிலையில்,  எனது நெருங்கிய தோழிகளுள் ஒருத்தியான அர்ப்பணா,  நவம்பர் 12,   ஒரு பெரிய விபத்தில் சிக்கி சில மணி நேரங்களில் எங்களை விட்டு சென்றாள்.  அர்ச்சனா, பின் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு - Spinal Cord Injury - ஆகி  paralyzed ஆக மருத்துவமனையில் critical care இல் இருக்கிறாள்.  அர்ப்பணாவின் ஆன்மா சாந்தியடையவும், அர்ச்சனா விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வரவும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

இரட்டை பிறவிகள் - எனக்கு இரட்டை தோழிகள் - அர்ச்சனாவும் அர்ப்பணாவும் 

 விபத்து நடப்பது சகஜம்தான்.   அதில் மரணம் சம்பவிப்பது,  நியூஸ் ஐட்டம் என்று ஆகி விடுகிறது - அது நம் வீட்டிலேயே நடக்கும் வரை.  "முன்ன பின்ன செத்து இருந்தால் தானே, சுடுகாடு தெரியும்?"

எங்கள் ஊரில் இந்தியர்கள், மொத்தம் ஐம்பது பேர் தான் இருப்போம். அதிலும் 35 - 40 பேர்கள், இந்தியாவில் இருந்து மேற்படிப்புக்காக இங்கு வந்து செல்பவர்கள்.  இந்த சம்பவம் எங்களை, உலுக்கி எடுத்து இருக்கிறது.

நடந்தது நடந்து விட்டது. அழுதோமா - முடித்தோமா - போனாமா என்று இருக்கும் சராசரி உணர்வுகள் கூட வெளிநாடுகளுக்கு வரும் போது,  தொலைத்து விடுகிறோமோ? 

சிலர் அர்ச்சனாவை கவனித்து கொள்ள - வேறு சிலர்,  அர்ப்பணாவை இந்தியாவுக்கு அனுப்பவதில் உள்ள பேப்பர் வொர்க் செய்ய வேண்டியது இருந்தது.  Indian Embassy ,  இந்த மாதிரி இந்தியர்கள் பரிதவிக்கும் நேரங்களில்,  இன்னும் கொஞ்சம் ஆதரவாக பேசி -  விஷயங்களை நல்லபடியாக விளக்கி -  செய்ய வேண்டிய காரியங்களை, அவர்களது வேலையாக/கடமையாக  மட்டும் நினைக்காமல் (just an official work) ,  கலங்கி போய் இருக்கும் உள்ளங்களுக்கு கரிசனையாக செய்யும் உதவியாக - கொஞ்சம் passion உடன் செய்து இருக்கலாமோ?  Indian Embassy  நிலைமை, எண்ணம் தெரியாமல் எதுவும் நான் சொல்ல கூடாதோ?  

நான் கடந்த வாரத்தில், கொஞ்சம் சிரிக்க மறந்துதான் போனேன்.  அது மட்டும் அல்ல, என் உணர்ச்சிகளையும் ஒதுக்கி வைத்தேன். அர்ப்பணாவுக்காக  அழவா?  அர்ச்சனாவுக்காக கவலைப் படவா?  அழுது கொண்டு இருக்கும், மற்ற இந்திய மாணவர்களை ஆறுதல் படுத்தவா?  அர்ப்பணாவை  "பத்திரமாக" இறுதி சடங்குகளுக்காக ஊருக்கு அனுப்பும் வரை உள்ள வேலைகளை மற்றவர்களுடன் சேர்ந்து  கவனிக்கவா?  உடனே இங்கே கிளம்பி வர துடித்தும், வர முடியாமல் இருக்கும் அவர்களின் பெற்றோரின் மன நிலையை நினைத்து கலங்கி நிற்கவா? 

அர்ச்சனாவுக்கு இது வரையில் அர்ப்பணாவின்   மறைவு பற்றி தெரியாது.  பெற்றோர்கள் வந்த பின்,  அவர்களே  நேரம் பார்த்து சொல்லி கொள்ளட்டும் என்று காத்து இருக்கிறோம்.   ஆனால்,  இரட்டை பிறவிகளுக்கே உள்ள அமானுஷ்ய உணர்வு எதையோ அவளுக்கு எச்சரிக்கிறது  என்று நினைக்கிறோம்.  அர்ப்பணா பக்கத்து அறையில்,  இவளை போல்தான் எழுந்து வர முடியாத நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறாள் என்று சொல்லி இருக்கிறோம்.  நம்பாமல்,  போட்டோ வேண்டும் என்றாள்.  எங்கள் தோழி, வினு, அர்ச்சனா தூங்கி கொண்டு இருந்த போது, அவளையே லாங் ஷாட்டில் போட்டோ எடுத்து விட்டு, இதுதான் அர்ப்பணா என்று காட்டி விட்டாள்.  அந்த நேரத்தில், எங்கள் மனநிலை ..... ம்ம்ம்ம்..... எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பது? 

மஞ்சள் உடையில்:  அர்ப்பணா - மற்றவர், அர்ச்சனா  - இந்த புகைப்படத்தை,  "தனி மரங்களின்"  இந்த வருட தீபாவளி பார்ட்டி போது,  நவம்பர் ஐந்தாம் தேதி அன்று, நான் எடுத்தேன். 

எல்லாவற்றையும் கடந்து,  என்னை திணற அடித்தது எது தெரியுமா?  ஒரு நொடியில்,  அவசரப்பட்டு எடுத்த திருப்பத்தால், இந்த விபத்து ஏற்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கும், நிதின். இவரும் எங்கள் நண்பர்.  சமீபத்தில் தான், படிப்பு முடித்து விட்டு சிகாகோ ஏரியாவில் வேலையில் சேர்ந்தார். மே மாதம் தான் திருமணம் ஆகி உள்ளது. ஜூலை மாதம் தான், அவர் மனைவி அமெரிக்கா வர முடிந்தது.  தன் மனைவிக்கு  தான் படித்த University யையும் தனது நண்பர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக Kentucky வந்தார்கள். எங்கள் வீட்டில் தான் தங்க ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

மதியம், எங்கள் வீட்டில்,  ஒன்றாக நாங்கள்  சாப்பிட்டதும்,  நண்பர்களுடன் வெளியே செல்ல ஆசைப்பட்டார்கள். எனக்கு,  இரவு உணவு அனைவருக்கும் சமைக்கவும்,  இன்னும் பிற வேலைகளும் இருந்ததால், வரவில்லை என்று சொல்லி விட்டேன்.  அவர்கள் எங்கள்  வீட்டை விட்டு கிளம்பிய  இரண்டு மணி நேரத்தில், இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

நிதினுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் மனைவிக்கு சில காயங்கள்.  அவற்றிற்கு மருந்து இட்டு, வீட்டில் இருந்தே கவனித்து கொள்ள சொல்லி,  மருத்தவமனையில் இருந்து அனுப்பி விட்டார்கள்.   அவளை கவனிக்கும் பொறுப்பு எனக்கு.

எனது ஆருயிர் தோழியை, என்னை விட்டு பிரிந்து செல்ல வைத்தவன், வேறு யாராவது என்று இருந்து இருந்தால்,  மனதார திட்டி இருப்பேன்.  ஆனால்,  என் கவனிப்பில், என் பொறுப்பில், என் வீட்டில்,  guilty feelings உடன் கண் முன் நிற்கும் போது, என்ன செய்வது?  

இருவரும், என் வீட்டில் இருந்து கொண்டு  குற்ற உணர்வுடன் அழுது கொண்டு இருந்தார்கள்.  முதலில், அவன் மேல் எனக்கு கோபம் வராமல் இல்லை. நானும் சராசரி பொண்ணுதானே!  ஆனால்,  சில நிமிடங்களிலேயே பார்க்க பாவமாகவும் ஆகி விட்டது.  என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியாமல்,  எப்படி எனது உணர்வுகளை மறைப்பது என்றும் தெரியாமல், அர்ச்சனா - அர்ப்பணா பற்றிய வருத்தங்களையும் காட்ட  முடியாமல் .............. அப்பப்பா...... என்ன கொடுமையான தருணங்கள் தெரியுமா? என் எதிரி என்று யாராவது இருந்தால் கூட,  இப்படி ஒரு மன நிலையில் சிக்க கூடாது என்று வேண்டி கொள்கிறேன்.

மருத்துவமனையில், அர்ச்சனாவை பார்த்து விட்டும் வருத்தப் படுவேன் -  வீட்டில்,  நிதின் மற்றும் அவன் மனைவியின் மன நிலைகளை கண்டும் வருத்தப் படுவேன்.  நான் நல்லவளா? கெட்டவளா? 

 பி.கு.:   அர்ப்பணா, நவம்பர் 21 அதிகாலை, இந்திய நேரப்படி , இறுதி சடங்குக்காக ஊருக்கு வந்து விட்டாள்.  அவள் பெற்றோருக்கு விசா கிடைத்து இருக்கிறது. இந்த வார இறுதிக்குள், அர்ச்சனாவை கவனிக்க வந்து விடுவார்கள்.
நிதின்,  போலீஸ் ரிப்போர்ட்க்காக காத்து கொண்டு இருக்கிறான்.  அவன் மட்டுமே காரணமா? அவனது காரை இடித்த அடுத்த காரை ஓட்டியவருக்கும் பங்கு உண்டா என்று தெரிய வரும்.  லீகல் நடவடிக்கைகள், அதன் பின் எடுக்கப்படும்.

நாளை,  "அர்ப்பணாவுக்கு  அர்ப்பணம்" ......... எழுதலாம் என்று இருக்கிறேன்.

Sunday, May 9, 2010

தெய்வ நம்பிக்கை

எனக்குள்ள தெய்வ நம்பிக்கை பற்றி எழுத வேண்டும் என்று,  முகிலன் ஒரு தொடர் பதிவுக்கு,  அழைத்து இருந்தார்.
Here we go: 

முகிலன்:   தெய்வ நம்பிக்கை உண்டா?
சித்ரா:      கண்டிப்பாக. என் மேல ஏதாவது நம்பிக்கை இல்லாமாலா, நான் எத்தனை தடவை சொதப்புனாலும், மீண்டும் மீண்டும் , தெய்வம் எனக்கு சான்சு தருகிறார்?
முகிலன்:   தெய்வத்துக்கு, உங்கள் மேல்  நம்பிக்கை உண்டா என்று கேட்கவில்லை.  உங்களுக்கு, தெய்வ நம்பிக்கை உண்டா  என்று கேட்டேன். 
சித்ரா:       ஓ. உண்டு.

முகிலன்:   எப்பொழுது இருந்து என்று சொல்ல முடியுமா?
சித்ரா:     சின்ன வயதில்,  கோவிலுக்கு போகலைனா - பொய் சொன்னா -  சாமி,  தண்டனை கொடுத்திடுமோ  என்ற பயம் உண்டு. 

முகிலன்:   அப்புறம்?
சித்ரா:     நான்,  Loyola Convent ல படிக்கும் போது, ஒரு retired சிஸ்டர் வந்து, Catechism டீச் பண்ணுவாங்க.
சிஸ்டர் ஸ்ரிலா  (Cyrilla)  தான், எனக்கு முதலாக  "அன்பே கடவுள்" என்ற concept ல் கடவுளை பார்க்க வைத்தார்.  பரவாயில்லையே, இது கூட நல்லா இருக்கு என்று கேட்டு கொண்டு  இருந்தேன்.

முகிலன்:   அதை ஏற்று கொண்ட பின்,  கடவுள் மேல் இருந்த பயம் போய் விட்டதா?
சித்ரா:   ஆமாம்.    St.Ignatius Convent போக ஆரம்பித்ததும்,  விளையாட்டு அதிகம் ஆகி விட்டது.  நானும் நிமா என்ற தோழியும், religious வகுப்பு (catechism) நேரங்களில்,  லூட்டி நேரமாக மாற்றி கொள்ளும் அளவுக்கு போய் விட்டது.
முகிலன்: என்ன செய்வீர்கள்?
சித்ரா:  உடைந்த பலூன் பீஸில் பபுள் செய்து, உள்ளங்கையில் கீச்ச் கீச்ச் என்று தேய்ப்பதில் இருந்து,   பொட்டு வெடி வைக்கிற   வரை சகலமும்.

முகிலன்:   மாட்டிக்கலியா?
சித்ரா:   தெய்வம்,  எங்கள் மேல் வைத்து இருந்த அன்பினால்,  சிரிச்சிட்டு போய்ட்டார் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த அளவுக்கு எங்கள் மேல் அன்பு வைக்காத டீச்சர்ஸ்,  எங்களுக்கு தண்டனை கொடுத்துக்கிட்டு இருப்பாங்க......  அவ்வ்வ்வ்......
முகிலன்:     பாவம்.
சித்ரா:   ஆமாங்க,  எத்தனை முறை தான் பெஞ்ச் மேல - desk மேல ஏறி நின்னு மற்ற students தலைகள்  மட்டும் பாத்துக்கிட்டு,  யார் யார் நேர் உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க, யார் யார் கோண உச்சி எடுத்து தலை சீவி இருக்கிறாங்க -   எடுத்த வகிடில்,  அப்போ அப்போ சிலருக்கு கிராஸ் ஆகிற பேனை வேடிக்கை பாத்துக்கிட்டு - யார் எண்ணெய் வச்சுக்கிட்டு வந்துருக்காங்க - யார் ஷாம்பூ போட்டு குளிச்சிக்கிட்டு வந்திருக்காங்க -   டீச்சர் சொல்லி கொடுக்கிற மேட்டர் மத்தவங்களுக்கு தலைக்கு உள்ளே போகுதா,  மேல போகுதா என்று "அழகு" பார்ப்பது?
முகிலன்:   'பாவம் டீச்சர்ஸ்'  என்று சொன்னேன்.
சித்ரா:  ஓ.

முகிலன்:  அப்புறம் என்ன ஆச்சு?
சித்ரா:    அப்புறம், 11th படிக்கும் போது,  ரொமோலா (Romola)  மிஸ் வந்தாங்க. அவங்க சொல்லி கொடுக்கும் போது, என்னையும் அறியாமல்,  வாலை சுருட்டி வைச்சிக்கிட்டு கேட்க தோணுச்சு.

முகிலன்:  அவர்கள் சொல்லி கொடுத்ததில், இன்றும் நீங்கள் கடைப்பிடிக்கும் விஷயங்கள் என்ன?
சித்ரா:     1.   தெய்வம், மற்றும் தெய்வ நம்பிக்கை என்பது ஒரு பொருள் இல்லை. இந்தா இருக்கு, பாத்துக்க - புரிஞ்சிக்க என்று சொல்ல.  அது ஒரு abstract feeling. அறிவுக்கு எட்ட வேண்டிய விஷயம் இல்லை. மனதுக்கு பிடித்து, உணர்ந்து ஏற்று கொள்ள வேண்டிய விஷயம்.
                2.     It is a matter of   Personal relationship.
                 3.   தெய்வ நம்பிக்கை என்பது  பரிணாம வளர்ச்சிக்கு உரிய ஒரு நம்பிக்கை.  Belief in God, evolves. If it does not, then your faith is dead.  To keep your faith alive,  you  should keep it  growing - wider and deeper.
                 4.     Faith is not a destination; it is a journey.
                 5.   தெய்வ நம்பிக்கை இல்லை என்று சொல்லும் பலர்,   மத கோட்பாடுகள் - வழக்கங்கள் - மத தலைவர்கள், போதகர்கள்  பிடிக்காமல் தான் விலகி போய் விடுகிறார்கள்.   

Concept of God is one thing. Concept of Religion is another  thing. 
மத நம்பிக்கையையும்  தெய்வ நம்பிக்கையையும்  வேறு படுத்தி பார்க்க எனக்கு கற்று தந்தார்.   

இதற்கு மத்தியில்,  ஒரு குழப்பமும் இல்லாமல்,  தனியாக இயேசு கிறிஸ்து மேல் தீவிர பற்றுதல் வந்ததும் இந்த கால கட்டம்தான். 


முகிலன்:   சரி. அப்புறம், நீங்கள் நிமாவை சந்திக்கவே இல்லையா?  
சித்ரா:   சந்திச்சேன்.  

முகிலன்:    எப்பொழுது?
சித்ரா:  என் திருமண நாள் அன்று, மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் என்னை அழைத்து கொண்டு கோவிலுக்கு காரில்,  மெல்ல ஊர்வலமா அழைத்து  சென்று கொண்டு இருந்தபோது, என் மனதில் பல தயக்கங்களும் "பயங்களும்" டென்ஷனும்.  அப்போ, திடீர் என்று, "சித்ரா" என்ற பரிச்சயமான குரல் கேட்டு திரும்பி பார்த்தால், நிமா - சிரித்தபடி காருக்கு அருகில்  வந்து என் கையை பிடித்து கொண்டாள்.  
சாலமன் உறவினர் ஒருவர் தான் அவள் கணவர். மாப்பிள்ளை வீட்டார் உறவாக அவளும் இருக்கிறாள். 
நாங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பத்தில் வந்து சேர  வைத்த தெய்வம் - அவர்,  எவ்வளவு நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று காட்டியது. 
முகிலன்:  ஹா, ஹா,ஹா,ஹா,ஹா,........God bless those families.  ஹா,ஹா,ஹா,.....


சரி, உங்களுக்கு பிடித்த பைபிள்  வசனம் ஏதாவது?
சித்ரா:    எனக்கு பைபிள் வசனங்களில் மிகவும் பிடித்து, எனது தினசரி வாழ்க்கையின் ஆதாரமாகவும் வைத்திருக்கும் வசனம்,  இதுதான்:

 "This is the day the LORD has made;
       let us rejoice and be glad in it."   Psalm 118:24
"இது கர்த்தர் உண்டு பண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக் கடவோம்."  சங்கீதம் 118:24

    "கவலைப் படுவதனால், யார் தன் வாழ்நாளில் ஒரு மணி நேரத்தைக் கூட்டி கொள்ள முடியும்" என்று மத்தேயு 6:27 சொல்வதும் பிடிக்கும்.  நான் நினைத்தது நடக்கவில்லை என்றாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு போக முடிகிறது. 

முகிலன்:  "தெய்வம் இல்லை" என்று கூறுபவர்களிடம் தர்க்கம் செய்தது  உண்டா?
சித்ரா:  ஒரு முறை மட்டும்.

முகிலன்:  என்ன ஆச்சு?
சித்ரா:  எங்கள் நண்பர், ஸ்ரீ அதிகம் படித்தவர்.  கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பி பேசுபவர். ஒரு நாள், ஸ்ரீ, நான், அனில் மூவரும் பேசி கொண்டு இருந்தபோது, பேச்சு கடவுள் பற்றி திரும்பியது.

ஸ்ரீ,  "கடவுள் - தெய்வ நம்பிக்கை - எல்லாம் முட்டாள்களின் கண்டுபிடிப்பு. அறிவு பூர்வமான செயல் இல்லை.  There is no scientific proof.   'கடவுள் இல்லை' என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்,  intellectual மக்களுக்கு மட்டும் வருகிறது"  என்ற ரீதியில் பேசி கொண்டு போனார்.

எனக்கு, அப்பொழுது, இந்த மாதிரி யாராவது பேசினால், "அது அவர் கருத்து. அமைதியாக கேட்டு கொள்ள வேண்டும். அதை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.  அதே மாதிரி, நான் பேசி போதித்தால், அவர் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை," என்று பொறுமையாக கேட்க முடியாத குணம் இருந்தது.  அவர் என்னை முட்டாள் என்று சொல்லியது போல ஒரே பீலிங்க்ஸ்.    உடனே, ' எடுறா அருவாள'  ரேஞ்சுக்கு,   பலத்த வாக்குவாதம்.

சிறிது நேரம் கழித்துதான், நண்பர் அனில் அமைதியாக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரையும் ஒரு சப்போர்ட்க்காக இருவரும் அழைத்தோம்.
 அனில்:    " எனக்கு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று அறிவுப்பூர்வமாக விளக்கத் தெரியாது.  இன்னைக்கு நான் நல்லா இருக்க, கடவுள் பங்கு எவ்வளவு தூரம் இருக்குது என்றும் தெரியாது. ஒண்ணு மட்டும் தெரியும்.

 பிறக்கிற மனிதன் ஒவ்வொருவனும் இறக்க வேண்டும்.  இறந்த பின் என்ன நடக்கும் என்று, இறந்த யாரும் என்னிடம் வந்து சொல்லவில்லை. நான் இறந்த பின், ஒரு வேளை, கடவுள் என்று ஒருவர் நிஜமாகவே இருந்து, அவரை நான் நேரில் பார்த்து டீல் பண்ண வேண்டி வந்தால், என்ன செய்வது?

உயிரோட இருக்கும் போது, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று நான் முடிவு எடுத்துக்  கொள்ளாவிட்டாலும்,  life goes on.

கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு, நான் இறந்த பின், அவர் இல்லை என்று தெரிய வந்தால், எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. I would have been  dead and gone by then. ஆனால், இல்லை என்று சொல்லி விட்டு, இருக்கிறார் என்று தெரிய வந்தால்.......??? Almighty கூட எந்த வழக்கு செல்லும்? எதற்கு வம்பு?

எனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கு.  இன்னைக்கு தூங்கப் போனா நாளைக்கு காலையில்,  நல்ல சுகத்தோட எந்திரிச்சு வேலைக்கு  போவேன் என்று கூட நம்புறேன். அப்படி, நம்பிக்கையோட நம்பிக்கையா இதுவும் ஒண்ணு இருந்துட்டு போகட்டுமே, "  என்று அனில் சொல்லி முடித்தார்.

அதுவரை, scientific research என்ற ரிவால்வருடன்   ஸ்ரீயும், psychological search என்ற  ரிவால்வருடன்   நானும் போட்டுக் கொண்டு இருந்த கவ்பாய் சண்டைக்கு மத்தியில், அனில் ஒரு practical bomb தூக்கிப் போட்டதும் சிரித்து விட்டு, அமைதி ஆனோம்.

அடுத்த கட்டமாக, என் வாழ்க்கை   சிறக்க மட்டுமே -  என் சுயநலத்துக்காகவே தெய்வ நம்பிக்கையை பிடித்து கொண்டு இருக்க கூடாது என்பது எனக்கு புரிந்தது.     கிறிஸ்துவின் "மலை பிரசங்கம்"  வாயிலாக, மனித நேயம்  என்ற இன்னொரு dimensionல்  என் நம்பிக்கை திரும்பியது. இது இன்றைய நிலவரம். இன்னும் வளரும். வளர வேண்டும்.  உணர வேண்டும்.

இது எனது நம்பிக்கையின் தேடல், ஆழம், புரிதல் மட்டுமே.

முகிலன்:   நன்றி, சித்ரா.
சித்ரா:      நன்றி, முகிலன்.  அடேங்கப்பா, இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈள பதிவு. இதை யாரு ஒரு வார்த்தை விடாம படிக்க போறா?  சரி,  சரி, வாசிப்பாங்க  என்று ஒரு நம்பிக்கைதான்.  ஹி,ஹி,ஹி......

Tuesday, April 13, 2010

கதை கதையாம் காரணமாம்

 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

 சிநேகிதன் அக்பர்,  சின்ன வயசுல கேட்ட கதையை சொல்ல சொல்லி தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கார். அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.  (அவரிடமே இருந்து சுட்ட வரிகள்)
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html 

நான் பலரிடம் "விட்ட" கதைகளை விட்டு தள்ளுங்க. அந்த கதை எல்லாம் இப்போ வேணாம்!  உண்மையிலுமே, கதை சொல்ல போறேன்.   கதை வேண்டாம் என்று இருக்கிறவங்க,  இங்கேயே ....  s டைம்  இதுதான்  ...........
 
 பல கதை புத்தகங்கள் படித்து இருந்தாலும், பலரிடம் கதை கேட்டு இருந்தாலும், என் தந்தையிடம் கேட்ட கருத்துள்ள கதைகளில், என்னை மெருகேற்றி கொள்ளும் அம்சங்களும்  அமைந்து இருந்ததால், அவற்றை மறக்க முடியாது.
அவற்றில் ஒன்று: 

அன்பே கடவுள்: 

மார்டின் என்பவன், தினமும் ஜெபங்கள் செய்வதிலும் ஞாயிறு தவறாமல் ஆலயம் செல்வதிலும், ஜெப கூட்டங்களுக்கு  தவறாமல் செல்வதிலும் இருந்தான். நாட்கள் ஆக ஆக, எப்படியும் ஒரு நாளாவது இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை, பேராசையாய் வளர்ந்து கொண்டு வந்தது.
ஒரு நீண்ட ஜெபத்துக்குப் பின்,  தன்னை சந்திக்க இறைவன் எப்படியும் வர வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து விட்டு சென்றான்.

அன்று இரவு கனவில்,  ஒரு பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் நடுவில் இருந்து வந்த குரலில்: "நாளை நீ, என்னை காண்பாய்."

சந்தோஷத்துடன்,  மதிய விருந்து தயாரித்தான்.  இறைவனுக்கு பரிசாக கொடுக்க, ஒரு பெரிய சால்வை/போர்வை பரிசாக வாங்கி வந்து வைத்தான்.

மாலை நான்கு மணி ஆனது. இறைவன் வரவில்லை.

ஒரு வயதானவர், காலை நொண்டி கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். முதலில், அவருக்கு உணவு மறுத்து விட்டு உள்ளே சென்று விட்டான், மார்டின்.
மீண்டும் அந்த முதியவரின் குரல் கேட்டு, மனது கேட்காமல், உள்ளே இருந்த உணவில், தன் பங்கை எடுத்து முதியவருக்கு கொடுத்து உண்ணக் கொடுத்தான்.  முதியவர், சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

மாலை மணி ஐந்து ஆனது. இறைவன் வரவில்லை.

வெளியில் கடைத்தெரு வரை சென்று , இறைவன் வருகிறாரா என்று பார்த்தான். மெல்லிய மழைச்சாரலில், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்ணையும், குளிரில் வாடி கொண்டு இருந்த  அவளது கைக்குழந்தையும் கண்டான்.   கண்டும் காணாதது போல அவர்களை கடந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, மனதில் ஒரு நெருடல்.  இறைவனுக்கு வாங்கி வைத்து இருந்த அந்த சால்வையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான். அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு,  பால் வாங்க கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினான்.

மாலை ஏழு மணி ஆனது.   இறைவன் வரவில்லை.

அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. அவருடன் அவரது 14  வயது பேரன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, மார்டினை உதவிக்கு அழைத்தான்.
தான் அங்கு உதவ சென்று இருந்த நேரம், இறைவன் வந்து விட்டால்............... தயங்கிய மார்டின், சிறுவனின் முகம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டு, அவனுடன் சென்றான். பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு,  அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து விட்டு,  வேலைக்கு சென்று இருந்த அவரின் மகனுக்கும் தகவல் அனுப்பி விட்டு, அவர் வரும் வரை காத்து இருந்தான்.  பாட்டி, நன்றாக இருப்பதை அறிந்து கொண்டு,  இரவு, வீட்டுக்கு வந்தான்.

இரவு பத்து மணி ஆனது. இறைவன்   வரவில்லை.

இறைவன் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இறைவன் இல்லையோ? தன்னை ஏமாற்றி விட்டாரோ? என்ற குழப்பங்களுடன், பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்தான்.

மத்தேயு 25:  " பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்;
                       தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்;
                       அன்னியனாய் இருந்தேன், என்னை சேர்த்து கொண்டீர்கள்;
                      உடை இல்லாதிருந்தேன், எனக்கு உடை தந்தீர்கள்;
                      நோயுற்று இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
                      காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள் ....................
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்."

இரவு பத்தரை மணி ஆனது. இறைவன் வந்து விட்டு சென்றதை புரிந்து கொண்டான்.

நான் புரிந்து கொண்டது:   கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச்   செய்தால் -  மனித நேயத்துடன்  நன்மைகளை செய்தால், அவர்களின் சிரிப்பிலே கடவுளை காணலாம்.

ஆத்திகமோ நாத்திகமோ - - - அன்பே கடவுள் - கடவுளே அன்பு. 
 
             

Thursday, December 3, 2009

கடவுள நம்புறேன்னு சொல்வாங்க ஆனா நம்ப மாட்டாங்க

உங்கள் சிந்தனைக்கு:

என் தோழி ஒருத்தி, கோவிலில் இருந்து 1/2 மணி நேரம் ஜெபம் செய்து விட்டு வந்தாள். அவள் முகம் வாடி இருப்பதை கண்டு, என்ன ஆச்சு என்றேன். ஒரு மணி நேரத்திற்கு, தன் கவலைகளை பற்றி என்னிடம் புலம்பி விட்டு, அதான் கோவிலுக்கு வந்து, சாமி கிட்ட என் ப்ரிச்சனைகளை சொல்லிட்டு வரேன். இப்போ வீட்டுக்கு போறேன். ஒரே பயமாகவும் கவலையாகவும் இருக்கு என்றாள்.


ஆமாம்,  சாமியை நம்பினால், அவர் பாத்துப்பார் என்று நம்ப வேண்டாமா? அந்த நம்பிக்கை, ஒரு அமைதியை தர வேண்டாமா? இது எப்படி இருக்கு தெரியுமா? அழுக்கா இருக்கேன் என்று போய் சுத்தமா குளிச்சிட்டு வந்து, மீண்டும் சேத்துகுள்ளே புரண்டு அழுக்கு ஆகிவிடுவது போல.


ஒரு முறை, நான் மற்றுமொரு தோழி வீட்டில், அவள் தயாராகி வருவதற்காக காத்திருந்த வேளையில், அவளது மாமியார் பக்கத்து பூஜை அறையில் இருந்து சுலோகம் சொல்லி கொண்டிருந்ததது கேட்டது. ஆவலுடன் எட்டி பாத்தேன். அவர் என் பக்கமா திரும்பி, ஒரு சுலோகம் சொல்லி கொண்டே, என்ன என்று கேட்டார். நான் திரும்பி செல்ல எத்தனிக்கையில், "சித்ராவா, இன்னும் மருமக ரெடி ஆகலையா? நான் அப்பவே சொன்னேன். இங்க அங்கேனு காலை தேச்சுக்கிட்டே இருந்தாள். இப்ப பாரு, நாழி ஆயிட்டு." என்று ஒரு போடு போட்டார். நான் "பரவா இல்லை" என்று சொல்லி விட்டு ஹாலுக்குள் வந்தேன். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

kitchenil fridge கதவு மூடி திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்த என் தோழியின் மாமியார், "சித்ரா, என்னன்னு பாரு. வேலைக்காரிக்கு நான் எல்லாம் எடுத்து வச்சுட்டு தான் வந்தேன். இன்னும் எதுக்கு fridge உக்குள் குடையிரா? போய் என்னன்னு கேளு." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

ரெண்டு நிமிஷம் கூட ஆகியிருக்காது. "சித்ரா, வெளியிலே சைக்கிள் பெல் சத்தம் கேக்குது. பூ விக்குற ரவியானு பாரு. அவன் எனக்கு ஐஞ்சு ரூபா மீதி தரணும்" என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

நான் எழும்பி செல்லும்போது, விக்கல் எனக்கு வந்து விட, அவர், " உன்னை யாரோ நினைக்கிறா. கொஞ்சம் சீனி அள்ளி வாயில் போட்டுக்கோ. டேபிள் மேல இருக்கிற பெரிய டப்பாவில் இருந்து இல்லை. பக்கத்தில் ஒரு சின்ன கிண்ணத்தில் சீனி இருக்கும்." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

அடுத்த ரெண்டு நிமிஷத்தில், "சித்ரா, அந்த gas stove ஐ வேலைக்காரியிடம் அணைக்க சொன்னேன். அணைச்சிட்டாலா என்று பார்." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா,  மருமக இவ்வளவு நேரமா குளிக்கிராளா? போகும் போது geyser off பண்ணிட்டாளானு செக் பண்ணிக்க சொல்லிக்கோ."  மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, திரும்பி வரும்போது, நம்ம ஐயர் கடை திறந்து இருந்தா, coffee பொடி மறக்காமா வாங்கி வர மருமகளுக்கு ஞாபக படுத்திக்கோ." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, வேலைக்காரி ஏதோ பாத்திரத்தை கீழே போட்ட சத்தம் கேக்குது. என்னன்னு பாரு." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, உனக்கு ஜூஸ் வேணுமினா, fridge இல் இருக்கு. எடுத்துக்க." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, பூஜை பண்றதால உன்னை கவனிக்க முடியலை. உபசரிக்க முடியலை." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, நோக்கு சாமி பக்தி எல்லாம் உண்டா? இல்ல, அது எல்லாம் வேண்டாம்னு இருக்கியா?" மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

உள்ளிருந்து வந்த என் தோழி, " சாரி, சித்ரா. ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனா? எங்க மாமியார் பூஜையில் இருக்காங்க. இல்லனா அவங்களாவது உனக்கு பேச்சு துணைக்கு இருந்திருப்பாங்க. வா போகலாம்."

"ஆண்டவா, எனக்கே இந்த நிலமைனா, என் தோழியை காப்பாத்து." கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தன் முன்னால் கடவுள் உண்டு என்று ஆத்மார்த்தமாக நம்பியிருந்தால், அவரை மனப்பூர்வமாக ஆராதித்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடாமல் பூஜித்து இருப்பார். இன்று அவள் மாமியார் செய்த பூஜைக்கு பலன் தான் என்ன? அது அந்த கடவுளுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை.

"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.
"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று  இருப்பார்கள்.


"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம். இவர்களுக்கு, தன்னம்பிக்கையும் இல்லை; தெய்வ நம்பிக்கையும் இல்லை. "இறைவா, இவர்களை காப்பாற்று."