Showing posts with label அமெரிக்கா ஓ அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா ஓ அமெரிக்கா. Show all posts

Saturday, October 22, 2011

அமெரிக்காவிலும் தீபாவளி திருநாள்



"தல" தீபாவளி பட்சணங்கள்:

திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின், அம்மா வீட்டில் கொண்டாட முடியாமல் வரும் தல தீபாவளியை மறப்பது பலருக்கு கடினமான வேலைதான்.

புது உடைகள் தயாராக இருக்கும். ஏதோ ஒரு தமிழ் சங்கமோ இந்திய சங்கமோ கலை நிகழ்ச்சிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும். குறிப்பாக, குழந்தை செல்வம் பெற்றவர்க்கு தீபாவளி நேரம் கோலாகலம் தான். குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு, ஊரு நினைப்பும், உறவினர்களின் பிரிவும் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்.

திருமணம் ஆகி அமெரிக்கா வந்த புதிதில், எனக்கு அமைந்த முதல் நட்பு வட்டம் - ஆந்திராவில் இருந்து வந்த புஷ்பா ; பெங்காலி பெண், மௌஷ்மி என்று சிறியதாக இருந்தது. மூவரும் முதல் தீபாவளி கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்த நேரம். ஊர் நினைவுகள் மனதில் பாரமாக அழுத்த ஒரு உற்சாகம் இல்லாமல் இருந்தோம். புஷ்பா ஒரு நாள், எங்களை அழைத்து, " முதல் தீபாவளிக்கு என்று ஸ்பெஷல் ஆக ஏதாவது செய்வோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதற்கு பதிலாக , நாமே பலகாரங்கள் எல்லாம் சேர்ந்து செய்தால் என்ன? நிச்சயமாக தீபாவளி களைகட்டிவிடும்," என்று பட்டாசாய் ஆங்கிலத்தில் படபடத்தாள்.

அந்த நேரம், எங்கள் மூவரில் புஷ்பாதான் கொஞ்சமாவது சமைக்கத் தெரிந்தவள். நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள். மௌஷ்மியோ எனக்கும் ஒரு படி மேல். living room (வரவேற்பு அறை) க்கும் கிச்சனுக்கும் (அடுக்களைக்கும்) வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிந்தாலே போதும் என்று திருமணம் செய்து கொண்டவள்.

அப்பொழுதெல்லாம் , தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)


மௌஷ்மி வீட்டுக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது வந்தது. புஷ்பாவிடம் கேட்டு தோசை செய்யப் பழகி விட்டதாக சொல்லி, என்னை அழைத்து இருந்தாள். அவளது சமையல் லேப் (lab)  நான் வெள்ளெலி. அடை, ஊத்தப்பம், சப்பாத்தி சேர்ந்த 3-in-1 ஐட்டம் ஒன்று முதலில் வந்தது. அதுதான் தோசையாம். தொட்டுக் கொள்ள பருப்பு ரசம் வந்தது. "சாம்பார் வைக்கவில்லையா?" என்றேன். "அதுதானே இது!" என்று அந்த ரசத்தை கை காட்டினாள். கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

"எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."

இப்படி இரண்டு கில்லாடி அடியாட்களை வைத்து கொண்டு, கிச்சனில்  சமையல் அடாவடிக்கு தயார் ஆகி விட்ட புஷ்பாவை இப்பொழுது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

"This Friday morning, come to my place. I asked my mom how to make " sweet laddus". Lets try it." மீண்டும் புஷ்பாவின் நுனி நாக்கு ஆங்கில அழைப்பு.

மௌஷ்மியும் நானும், "நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்.....நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்....... நாங்களும் சமையல் ரவுடிகள் தான்" என்று அவள் வீட்டுக்கு சென்றோம். புஷ்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்கள் சமையல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். அணுகுண்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு கூட இப்படி நுணுக்கமாக குறிப்பெடுக்கும் இரண்டு assistants கிடைத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடலை மாவை பக்குவமாக கலந்து வைத்தாள். சீனிபாகை தயார் செய்தாள். கண்ணு கரண்டியை எடுத்து பூந்திக்கு தயார் ஆனபோது, மௌஷ்மி ஒரு சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம். "புஷ்பா, எல்லாம் சரி. இந்த கடலை மாவில் எப்பொழுதுதான் lettuce சேர்க்கப் போறே?"

(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )

"lettuce???" புஷ்பா அதிர்ந்தாள்.
"நீதானே ..... ஸ்வீட் lettuce செய்யப்போவதாக சொல்லி போன் பண்ணியே," மௌஷ்மி வெள்ளந்தியாக ஆக பதிலளித்தாள்.
புஷ்பா, ஸ்வீட் laddus என்று ஸ்டைல் ஆக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது, மௌஷ்மிக்கு போனில் ஸ்வீட் lettuce என்று கேட்டு இருக்கிறது. ஆந்திராவில் அப்படி ஒரு தீபாவளி ஸ்வீட் ரொம்ப பாப்புலர் போல என்று நினைத்து வந்து இருக்கிறாள். அவள் விஷயத்தை சொல்லவும், நானும் புஷ்பாவும் புரையேறி கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.

அந்த சந்தோஷ சிரிப்பினாலோ என்னவோ, அன்னைக்கு லட்டுக்களில் இனிப்பு அதிகமாகி இருந்தது.

நான், முதலில் உளுந்து வடை செய்தபோது, உளுந்து போண்டாவாக வந்து கொண்டு இருந்தது. பின், உளுந்து அமீபாவாக shape மாறியது. நண்பர்கள் கையில் இருப்பது உளுந்து வடைதான் என்று நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது.

இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்.

இந்த தீபாவளி நேரத்தில், சமையல் ஆர்வ கோளாறு கொண்ட புது மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் - உள்ளே தள்ளியதை வெளியே துப்பவும் முடியாமல் - திருதிரு விழிகளுடன் வரும் புதிதாய் திருமணம் ஆன நண்பர்களுக்கு மறக்காமல் இனிய "தல(விதி) தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்ல மறக்காதீங்க. காரணம், முதல் தீபாவளி உள்ளவரை, சமையல் அலம்பல்கள் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்......



மற்ற அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: நன்றி கூகிள்வதி . ( இல்லை, ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ள ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)


(பின் குறிப்பு: அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )

Sunday, May 22, 2011

தம்பிக்கு எந்த ஊருங்கோ?

இந்த வார இறுதியில், கோடை   விடுமுறை ஆரம்பம் ஆகிறது.   

அதற்குள் முடிக்க வேண்டிய வேலைகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ....
பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியவில்லை. 

பதிவுகள் எழுத வந்து  ஒன்றரை வருடங்கள் ஆகி போச்சு.  ஆனால், எழுதி இருக்கும் பதிவுகள்:   இந்த பதிவோடு சேர்த்து 138 தான் ஆகுது....  அதிலேயும்  நான்கைந்து பதிவுகள்,  லீவு லெட்டர்களே பதிவுகளாய்...... ம்ம்ம்ம்.....    அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் பதிவுலக லீவு வேண்டும்ங்க ..... அநேகமாக இனி ஆகஸ்ட் மாதம் தான் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.  இந்த ரேட்ல போச்சுனா, நான் 150 வது பதிவு  போடுவதற்குள்  அடுத்த வருடம் வந்து விடும் போல  ...  ஹா, ஹா, ஹா , ஹா.....

சமீபத்தில்,   இங்கே உள்ள அமெரிக்க நண்பர்கள் சிலருடன் ஒரு சந்திப்பு:    சம்மர் லீவுக்கு எங்கே எங்கே போகிறோம் என்று செய்தி பரிமாற்றம் நடந்து கொண்டு இருந்தது.  நான் முகத்தில் ஒரு பிரகாசத்துடன் :  "இந்த வருடம்,  திருநெல்வேலிக்கு போகிறேன்," என்று சொன்னேன். 

உங்களுக்கு எப்படி என்று எனக்குத் தெரியாது.   ஆனால், எனக்கு:   ஒரு ஊருக்கு போயிட்டு வருவது ஒரு வகை சந்தோசம்.  ஆனால், அந்த ஊருக்கு போய் விட்டு வந்ததை டமாரம் அடித்து சொல்வது இன்னொரு வகை சந்தோசம்.    ஹி ,ஹி , ஹி, ஹி,..... 

ஆனால், எங்க  அமெரிக்க  நண்பர் ஒருவர் அவர்  செல்லப் போகிற இடத்தை எப்படி  டமாரம் அடித்து சொல்ல போகிறார் என்று தெரியல.  எனக்கு அவர் எழுதி காண்பித்ததை நான் இன்னும் சரியாக படித்து முடிக்கவில்லை.  நீங்க முயற்சி செய்ங்க:
அமெரிக்காவில் ,  மாசசூஷட்ஸ்  (Massachusetts ) என்ற மாநிலத்தில் உள்ள ஒரு ஏரி உள்ள ஊருக்கு செல்கிறார்.   விடுமுறையில்,  பொழுது போக்குக்காக (Fishing) மீன் பிடிக்க செல்பவர்கள் அங்கே அதிகம்.  

இருங்க ஒரு நிமிஷம், மூச்சு  வாங்கிக்கிறேன்.  அந்த  ஏரியின் பெயர்:


"Lake Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg"  
அதை  சுருக்கமாக :    Lake Chaubunagungamaug
என்று சொல்வார்களாம்.  இந்த பெயரை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்.  "கட் அண்ட் பேஸ்ட் " செய்தாலே ஏழெட்டு spelling mistake வரும் போல.  எங்கே இருந்து வார்த்தை சுத்தமாக வாசித்து காட்டுறது?  ம்ஹூம்......

 http://en.wikipedia.org/wiki/Lake_Chaubunagungamaug 

அர்த்தம் என்னவென்றால்,  "Englishmen at Manchaug at the Fishing Place at the Boundary" 
எளிதாக வெளியூரு மக்கள் சிலர்,   Webster lake என்று சொல்வாங்க என்றார். 

எனக்கு என்னமோ,   "சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா ....சிக்குமங்கு சிக்குமங்கு சச்சபப்பா...." என்றுதான்  வாசிக்க வருது.


எங்கள் நெருங்கிய நண்பர்  சேவியர், சில வருடங்களுக்கு முன் ஐரோப்பா டூர் சென்று விட்டு வந்தார்.  அங்கே அவர் சென்ற இடங்களிலேயே எங்கள் கவனத்தை அதிகம் பெற்ற இடமும் படங்களும்:  
Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch  என்ற ஊரில் எடுக்கப்பட்டவை. 
  
"லாலாக்குடோல்டப்பிமா" வுக்கும் இந்த ஊருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். 

உலகத்திலேயே நீண்ட பெயரை கொண்ட ஊரு அதுதான் என்றார்.  அவர் காட்டிய படங்களில், ஒன்று அந்த ஊரு ரயில்வே ஸ்டேஷன் பெயர் பலகை  படம். 



நாங்கள் சொல்வதை எல்லாம், அமைதியாக கேட்டு கொண்டு இருந்த ஒரு நண்பர் - இவர் பாங்காக் (தாய்லாந்து) இல் இருந்து இங்கே மேற்படிப்புக்காக வந்தவர் - "எங்கள் ஊரான பாங்காக்கின் முழுப்பெயர் என்னவென்று தெரியுமா?  இயற்பெயர் நீளமான பெயர்.  ஆனால், பாங்காக் என்றே அதிகாரப்பூர்வமாக மாறி விட்டது " என்று  ஆங்கிலத்தில் சொன்னார். 
கூகுள் உதவியுடன் அவர் வாசித்து காட்டியது: 


"   Krung Thep Mahanakhon Amon Rattanakosin Mahinthara Yuthaya Mahadilok Phop Noppharat Ratchathani Burirom Udomratchaniwet Mahasathan Amon Phiman Awatan Sathit Sakkathattiya Witsanukam Prasit

வீட்டுக்கு வந்து விக்கிபீடியாவில் செக் செய்து விட்டேன்.  பாலி மற்றும் sanskrit கலந்து உருவாக்கப்பட்ட பெயர் என்று விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. 


அப்படியே,  நண்பர் வட்ட பேச்சு, அமெரிக்காவில் இருக்கும் வேடிக்கையான ஊர் பெயர்கள் பற்றி திரும்பியது.  ஏற்கனவே பல ஊர் பெயர்களை:  


குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். 

வித்தியாசமான ஊர் பெயர்களை நாங்கள்  ஒவ்வொருவரும்  சொல்லி - அதிகம் சிரித்தோம்: 


Tarzan -  Texas

Goose Egg -  Wyoming

Buttermilk -  Arkansas

Coffee City -  Texas

Hot Coffee -  Mississippi

Yum Yum -  Tennessee

Ordinary - Virginia

Dead Women Crossing -  Oklahoma

Sweet Lips - Tennessee

Monkey Run - Missouri

Devils Den -  California

Seven Devils -  North Carolina

Pray  -  Montana

Burnt Factory -  West Virginia

Burnt Tree -  Virginia

Mosquitoville -  Vermont

Spider  -  Kentucky

Why -  Arizona

Whynot  - Mississippi

Big Rat Lake  -  Alaska

நல்லா சிரிங்க..... சிரிச்சிக்கிட்டே இருங்க..... அதற்குள் நான் இங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.  விடுமுறைக்கு போவதற்கு முன், உங்களிடம் எல்லாம் கண்டிப்பாக சொல்லி விட்டுத் தான் போவேன். சரியா?  




 நன்றி:  கூகுளூர் (Google images)  :-)






 

Thursday, May 5, 2011

அன்னையர் தின பெருமூச்சு

மீண்டும் வணக்கங்கள்:

என்னை குறித்து கடந்த சில நாட்களாக - ஈமெயில் வழியாகவும் - போன் மூலமாகவும் - facebook messages மூலமாகவும் நலம் விசாரித்த அனைத்து பதிவுலக நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்துச்சு.

கடந்த இரண்டு வாரங்கள் - எப்பப்பா....
புயல் அடிச்சுது......
பேய்மழை அடிச்சுது ......
மரங்கள் விழுந்துச்சு ......
வேலிகள் பறந்துச்சு......
வெள்ளம் வந்துச்சு.....
இன்டர்நெட் தொடர்பு போச்சு.....
தொலைபேசி தொடர்பு போச்சு....
கரண்ட் கட் ஆச்சு.....

எல்லாம் "old is gold" technology style தான்....

நோ டிவி - நோ ப்ளாக் - நோ facebook - நோ போன் - நோ ஸ்கூல் -
in fact , இவை இல்லாமல் இருந்தால் கூட, உலகம் எப்போவும் போல தான் இருக்குது. இவை எல்லாம் தாண்டி உலகம் எப்படி இருக்குது என்று தெரிஞ்சிக்க முடிஞ்சுது.
அதிசயம் என்னவென்றால், நோ கம்ப்ளைன் - நோ புலம்பல் - நோ அழுகை.

ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன். போதுமான அளவுக்கும் மேலே மழை பார்த்து விட்டோம். மெல்ல சாரல் அடிக்கும் மழையில், அழகு தெரிகிறது. ரசிக்க முடிகிறது. இப்படி புயல் மழை வந்தால், ஒதுங்கி இருக்கத்தான் செய்கிறது. பயமுறுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்துக்கு மழை மட்டும் இல்லை, மழை பற்றிய கவிதைகள் - மழையில் காதல் பழுத்துரிச்சு; கத்திரிக்காய் புழுத்துருச்சு என்றெல்லாம் வருகிற கவிதைகள் பக்கத்தில் கூட வருவதாக இல்லை. மழை கவிஞர்கள்: மன்னிக்கவும்!
போர்டு கேம்ஸ் எடுத்து வச்சு , குட்டீஸ் கூட விளையாடுறது. (வெளியில் அடிச்ச புயல் காத்திலேயும் மழையிலேயும் அங்கே போய் விளையாட அனுப்ப முடியல) -
சீக்கிரமே தூங்க போறது. ஒரே ஒரு பிரச்சனை - அதிகாலையில் சீக்கிரமே முழிப்பு தட்டிடும். திரும்பவும் அதிகால ஆதிகால வாழ்க்கை தொடர்ந்துச்சு.

மாறுதல்கள் - எப்படி இருந்தாலும் - வித்தியாசமா இருக்கிறது, ஒரு விதத்தில், நல்லாத்தான் இருந்துச்சு. பயந்த மாதிரி எதுவும் இல்லை.

சொல்ல மறந்துட்டேனே.... எங்க வீட்டில் கூடு கட்டி இருந்த பறவையின் கூடு, புயல் காற்றில் கீழே வந்து விழுந்து கிடந்தது. அது இருந்த இடத்தில், மீண்டும் எடுத்து வைத்தோம். கீழே புல் தரையில் விழுந்து கிடந்த இரண்டு பறவை குஞ்சுகளையும் தேடி கொண்டு வந்து வைத்தோம். ஒன்று மட்டும் கிடைக்கவே இல்லை. என்ன ஆச்சோ தெரியல. மற்ற இரண்டும் வளர்ந்து, பறந்து போக ஆரம்பிச்சிடுச்சு.

எங்கள் வீட்டுப் பகுதியில் தான் முதலில் எல்லாவற்றையும் சரி செய்தார்கள். ஏதாவது சொல்லணும் போல இருக்குது. ஆனால், தன்னடக்கம் தடுக்குது.

இன்டர்நெட் connection வந்ததும், பதிவு பக்கம் வரலாம் என்று நினைத்தேன். ரோம் நகரம் பத்தி எரிந்துகிட்டு இருந்த போது, நீரோ மன்னன் fiddle வாசித்து கொண்டு இருந்த மாதிரி, ஊரே நொந்து நூடுல்ஸ் ஆகிக்கிட்டு இருந்த போது, சித்ரா பதிவு வாசித்து கொண்டு இருந்தாளாம் என்று நாளை வரலாறு சொல்லாக்கூடாது பாருங்க...... ஹி, ஹி, ஹி, .....

விட்ட கதையை தொடர்ந்து சொல்றேன். கரண்ட் மற்றும் இன்டர்நெட் தொடர்பு எல்லாம் சரி பண்ணாங்களா...... அப்புறம், கரண்ட் - போன் - இன்டர்நெட் வராத ஒரு நண்பரின் குடும்பம் எங்க வீட்டில் வந்து தங்கி இருந்தாங்க. அவங்க ஏரியாவில் சரி செய்ததும் கிளம்பி போனாங்க. அதுவரை, நல்லா டைம் பாஸ் பண்ணோம். நாள் பூரா, சூப்பர் அரட்டை கச்சேரி தான்.

முதலில் புயல் ஏன்டா வந்துச்சுன்னு நினைச்சேன். ஆனால், அது வர வரைக்கும் - நான் உண்டு - என் குடும்பம் உண்டு - என் வலை உலக பொழுதுபோக்கு உண்டு என்று குறுகிய வட்டத்தில் இருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இருக்கிற வாழ்க்கையை - ஆசிர்வாதங்களை மதிக்கிறது - மற்றவர்களுக்கு உதவுறது - குடும்பத்தோட ஜாலியா டிவி தொல்லை இல்லாமல் லூட்டி அடிக்கிறது என்று புது பொலிவை அடையாளம் காட்டிவிட்டு சென்று இருக்கிறது.

ஒரே நிமிஷத்தில், இயற்கை நினைச்சா - - லோ லோ னு ஓடி சம்பாதிச்சு சேர்த்து வைக்கிற வாழ்க்கை - நாம பெருசா நினைச்சு, கட்டி காப்பாத்திக்கிட்டு நிற்கிற விஷயங்கள் எல்லாம் அழிஞ்சு போய்டும் என்று புரிஞ்சிக்கிட்டேன். நம்ம control ல ஒண்ணுமே இல்லை. ஆமாம்ப்பா.....

இந்த மாதிரி வெள்ள சமயங்களில் விளையாடுகிற காய்ச்சல் - வாந்தி - சரியா எங்க வீட்டிலேயும் கதவை தட்டி, குட்டி மகனிடம் ஆஜர் போட்டுட்டு போச்சு. இப்போதான் சரி ஆச்சு.

நேத்து, என் கணவர் கேட்டார். " வருகிற Sunday , "Mother's Day". இரண்டு வாரங்களாக tough and rough time. எல்லோரையும் நல்லா கவனிச்சிக்கிட்ட. சூப்பர் அம்மா என்று பெயர் எடுத்தாச்சு. உனக்கு என்ன வேண்டும்?"

"Right now, I am super tired. Mother's Day அன்று, நான் பொறுப்புள்ள அம்மா என்று நினைக்க விடாதீங்க..... நோ cooking - நோ caring - நோ mothering . அம்மா வேலைக்கு, அன்னைக்கு எனக்கு லீவு வேண்டும்," என்று சொல்லி விட்டேன். எப்பூடி!



அப்புறம், இந்த வார இறுதியில் Michigan பக்கம் யாராவது போனீங்க என்றால், இரண்டே வாரங்களுக்கு பூத்து குலுங்கும் Tulip மலர்களுக்கு என்று Festival ஒன்று Holland என்ற ஊரில் நடக்கும். அதை பார்க்க மறக்காதீங்க. சில வருடங்களுக்கு முன், "Mother's Day Sunday" அன்னைக்கு அங்கு சென்று இருந்தோம்.

பொதுவாக, மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் தான் கொண்டாட்டங்கள் நடைபெறும். வெள்ளை நிறத்தில் இருந்து deep purple வரை உள்ள பல வண்ணங்களில் - மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என்று - tulip மலர்கள் பூத்து குலுங்குகின்றன.


Holland, Michigan - Tulip Festival: http://www.tuliptime.com/



Dutch மக்கள் பலர் அங்கே வந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். ஊரில் கட்டடமைப்பு - பழக்க வழக்கங்கள் எல்லாம் டச் ஸ்டைல் தான். திருவிழா கொண்டாட்டங்களில், ஆயிரக்கணக்காக நடனக் கலைஞர்கள் ஊருக்கு நடுவில் உள்ள ஒரு பூங்காவில் கூடி டச் பாரம்பரிய நடனங்கள் ஆடி காட்டுவார்கள். சூப்பர்!


Clog எனப்படும் மர ஷூஸ் போட்டு கொண்டு ஆடியது அருமையாக இருந்துச்சு.




மனதை கொள்ளை கொண்ட அழகு மலர்கள் - நடனங்கள் கண்டு ரசித்து கொண்டாடிய அன்னையர் தினத்தை மறக்க முடியாது.



தென்றல் வருடுவதும் புயல் அடிப்பதும் வாழ்க்கையில் சகஜம் போல. எல்லாம், நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் வாழ்க்கை கடந்து போய் கொண்டு இருக்கிறது.

படங்கள்: நன்றி: கூகுள் புயல்.











Tuesday, April 19, 2011

ஈஸ்டர் முயல், முட்டை போடுதா?



நான் அமெரிக்கா வந்த புதிதில்,  ஈஸ்ட்டர் திருநாள் நெருங்கி கொண்டு இருந்த பொழுது, ஆலயத்தில் பல்வேறு வழிபாடுகளில் கலந்து கொண்டோம்.  அந்த சமயம் கடைகளுக்கோ அல்லது ஷாப்பிங்  மால் (mall ) சென்ற பொழுது, ஈஸ்ட்டர்க்கு பொருத்தமான இயேசு உயிர்த்தெழுந்த செய்திகள் வெளியே இல்லாமல்,  எங்கு பார்த்தாலும்  முயல் , கூடை நிறைய வண்ண நிற முட்டைகளை வைத்து இருப்பது போல படங்களும் chocolates மற்றும் அலங்காரங்களும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்  இருந்தன.  ஆண் முயல் - பெண் முயல் போன்று costumes அணிந்து கொண்டவர்களும் தென்பட்டார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  



இந்தியாவில் இருக்கும் வரை,  ஈஸ்டர் என்பது கிறிஸ்தவ திருநாளாகவும்,  ஈஸ்டர் கொண்டாட இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புமே காரணமாக கேட்டு பழகியவளுக்கு , இது புது மாதிரியாக இருந்துச்சு.  



பொதுவாக உலக நாடுகளின் பார்வையில், அமெரிக்கா ஒரு கிறிஸ்தவ நாடாகவே காணப்படுகிறது.  பெரும்பாலான அமெரிக்கர்கள்,  கிறிஸ்தவர்கள் தான்  என்பது உண்மையே.

ஆனால், ACLU என்ற ஒரு க்ரூப் பெரிய அளவில் வந்த உடன்,  எல்லா மதங்களின் (கிறிஸ்தவ மார்க்கம் உட்பட) திருவிழாக்களும் கொஞ்சம் பின் வாங்கி அவரவரின் ஆலயங்களிலும் ஆலயம் சார்ந்த இடங்களிலும் கோவில்களிலும் வீடுகளிலும் என்ற அளவுக்கு குறுக்கப் பட்டு விட்டன.  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முன் உரிமை கொடுத்து சமமாக மதிக்க வேண்டும் என்ற உணர்வில் பொது இடங்களில், குறிப்பாக அரசாங்க பள்ளிகளில் மற்றும் அலுவலகங்களில் எந்த மத சம்பந்தமான குறியீடுகளோ வழிபாடுகளோ இருக்க கூடாது என்று சட்டப் பூர்வமாக அறிவிக்கும் அளவுக்கு ACLU முன்னேறி வந்து இருக்கின்றது.    


Majority   ஆக உள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக காட்டுவதில் உள்ள உரிமையை விட,   இங்கு minority   ஆக உள்ள தெய்வ நம்பிக்கை அற்றவர்களின்  உரிமைக்கு முக்கியத்துவம் அதிகம்.  தெய்வ நம்பிக்கை அற்றவர்களின் குழந்தைகள்,  அவற்றை பார்த்தால் மனக்குழப்பம் ஏற்படுமாம். 

ACLU பற்றிய விவரங்களுக்கு: 


இது ஒரு புறம் இருக்க,  ஜெர்மனியில்,  கிறிஸ்தவம் பரவுவதற்கு முன்பாக வசந்த காலத்தை கொண்டாடும் விதத்தில், செழுமை மற்றும் கருவுறுதிறன்க்கென்று இருந்த  தேவதையான (Goddess of Fertility)  Eostre   என்பவருக்காக கொண்டாட்டங்கள் நடந்து இருக்கின்றன.

  வசந்த காலத்தில் தான்,  நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் என்பதால்,  முட்டை வளமையின் சின்னமாக கருதப்பட்டு வந்து இருக்கிறது.  முயல் இனம்,  குறுகிய நாட்களிலேயே பலுகி பெறுவதற்கு பேர் வாங்கியது.  அதனால் கருவுறுதிறன் சின்னமாக கருத்தப்பட்டு வந்து இருக்கிறது.  வசந்த கால திருவிழாக்களில் (Spring Festival)  இந்த சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் ஆச்சர்யமென்ன?  இதன் பாதிப்பில்,   பதினாறாவது நூற்றாண்டில் முயல் முட்டையிட்ட கதை ஒன்று முதல் முதலாக குழந்தைகளுக்காக சொல்லப்பட்டு வந்ததாக வரலாறு சொல்லுதாம்.  

Easter treats:  White Chocolate and Regular Chocolate bunnies and eggs: 
  


பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானியர்கள் சிலர், அமெரிக்க வந்து செட்டில் ஆன பொழுது, தங்களுடன் தங்கள் பாராம்பரிய பழக்க வழக்கங்களையும் கதைகளையும் சேர்த்து  அமெரிக்கா கொண்டு வந்து பரப்பி இருக்கிறார்கள்.  

ஜெர்மனி மற்றும் அமெரிக்க நாடுகளில்,  பின்னர்  missionaries வந்து கிறிஸ்தவ மதத்தை பரப்பிய பொழுது,  வசந்த காலத்தை ஒட்டி வந்த ஈஸ்ட்டர் திருவிழாவோடு இந்த கதைகளும் ஒட்டி புது வடிவம் பெற்று விட்டன.  இத பார்றா!!!


கிறிஸ்தவ விழாக்களை வெளிப்படையாக பெரிய அளவில் கொண்டாட முறுமுறுத்த ACLU போன்ற அமைப்புகள் கூட, வசந்த காலத்துக்கென்று இருக்கும் - எந்த வித மதங்களின்  சம்பந்தமும் இல்லாத பொதுவான விழாவுக்கோ -  அதன் அடையாளங்களாக  வரும் முயல் - முட்டை போன்ற சின்னங்களுக்கோ தடை சொல்ல முடியவில்லை.  

1970 s  இல் இருந்து, அமெரிக்காவில்  வியாபார நோக்கு (commercialism)  எல்லாவற்றிலும் தலையிட ஆரம்பித்த பின்,  முயல் , முட்டை போடும் கதைகள்  வியாபார திறன் சாயம் பூசப்பட்டு புது உரு பெற்று - ஜெர்மானிய பூர்வீகத்தை தொலைத்து - வீறு கொண்டு வந்து இன்று வரை உலா வந்து கொண்டு இருக்கிறது.




வரும் ஞாயிறு,  ஈஸ்டர் திருவிழா கொண்டாடுகிறோம்.  தெய்வ நம்பிக்கையுடன் இயேசுவை ஆராதித்து ஆலயங்களில் மட்டும் தான் வழிபாடு நடைபெறும்.   ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், குழந்தைகள் குதூகலமாக   ஆங்கே ஆங்கே அவர்களுக்காக  வைத்து இருக்கும் "ஈஸ்டர் முயல் போட்ட சாக்லேட் முட்டைகள்" மற்றும் சின்ன சின்ன விளையாட்டு பொருட்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் முட்டைகளை கண்டு பிடித்து  சேகரித்து மகிழ்வார்கள். வீடுகளிலோ,  பூங்காக்களிலோ  இப்படி விளையாட்டுக்கள் நடக்கும்.  அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையில் நடக்கும் " "Easter Bunny Egg Hunt" மிகவும் பிரசித்தம். 

கீழ் உள்ள படத்தில்,  ஒபமா ஒரு சிறு குழந்தைக்கு முட்டை வேட்டையில் உதவுகிறார்: 



கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள், ஈஸ்டர் என்று ஒரே வரியில் இந்தியாவில் கொண்டாடிவிட்டு வந்த எனக்கு - இப்படி ஜெர்மானிய பாரம்பரியம்  - நாத்திக பாதிப்பு - வசந்த காலம் -  குழந்தைகள் விளையாட்டு எல்லாம் கலந்து கட்டிய  வித்தியாசமான கிறிஸ்தவ திருவிழாவை கொண்டாடுவது  மலைப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.

(கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கொண்டாடப்படும்  கிறிஸ்துமஸ் கூட,  கிறிஸ்துமஸ் தாத்தா என்று நம்ம ஊரில் அழைக்கப்படும் Santa Claus க்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமெரிக்காவில்  கொண்டாடப் பட்டு வருவது, தனி கதை. )

கிறிஸ்தவ நாடு என்று உலகத்தாரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும்   ஒரு நாட்டில்,  இப்படித்தான் கிறிஸ்தவ திருவிழாவான ஈஸ்ட்டர் கொண்டாடப்படுகிறது.  இயேசு கிறிஸ்து என்ற பெயர், ஆலயம் (ஜெபக்கூட்டங்கள் சேர்த்து)  மற்றும் வீடுகளில் தவிர  பொது இடங்களில் வெளிப்படையாக சொல்ல  மறைக்கப்பட்டு  (விதிவிலக்குகள் உண்டு) , முயல் முட்டை இட்ட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. 


அனைவருக்கும்  ஈஸ்ட்டர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!   

படங்கள்:  கூகுள் அக்காவுக்கு நன்றிகள். 

 

Monday, April 18, 2011

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?



சென்ற வாரம்,   நாங்கள் வசிக்கும் ஊரில் இருக்கும் பல்கலைகழகத்துக்குச் செல்ல வேண்டியது வந்து இருந்தது. 

அப்பொழுது, அங்கே இருந்த பல்கலைகழக மாணவ மாணவியர்களிடம் இருந்த சில பொருட்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தன .    (பதிவர்  மூளை alert ஆயிடுச்சு.....ஹி,ஹி,ஹி,ஹி....) 
அங்கே நான் கண்ட  வித்தியாசமான  சில பொருட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  (கடமை....கடமை....பதிவர் குல  கடமை.....)

கேமரா எடுத்து செல்லாததால்  ( ம்க்கும்........ எடுத்துட்டு போய் இருந்தா மட்டும்???  போட்டோவை ஒழுங்கா எடுத்துட்டுதான் மறு வேலை பார்த்திருப்பேன் போல ஒரு பில்ட் அப்பு கொடுத்தால், நல்லாத்தான் இருக்குதுங்க.....)  இங்கே கூகுள் images மூலம் அவற்றை கண்டு பிடித்து,  இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.  கூகுள் அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்: 

1.  Vibram  Five Fingers Shoes: ($55 - $150)

இந்த விசேஷ  காலணிகளுக்கு  (Shoes)  ஐந்து விரல்கள் இருந்தன. 


2.  Laptops Carry bags:   ( $80 and above....) 

முதல் bag  - மெசேஜ் பார்த்தால்,  கலகலகலக்கல்! 
அடுத்தது:  Small Tent Laptop bag: (டென்ட் க்கு உள்ளே lap top வைத்து வொர்க் பண்ணலாம்.)



3.  பல்கலைகழக  மாணவர்கள் அணிந்து இருந்த Funny T-shirt messages:  

"தண்ணி அடிக்க கூடாது என்று சொன்னாங்க .... எந்த தண்ணி என்று சொல்லலியே":





"college student னா இலக்கணம் சுத்தமாக ஆங்கிலம் பேசணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன?"
"இதுல மட்டும் சில பொண்ணுங்க தெளிவா இருக்காங்க.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..."




T shirt message on Facebook:  

T shirt message on Blog: 



enjoy....... 

நன்றி. வணக்கம்!




Monday, April 11, 2011

வசந்த கால பறவைகளே.....

ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம்  குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது....   எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்! 


எங்க வீட்டு மரங்களில் குறிப்பாக இப்போ நிறைய பறவைகள் கூடு கட்ட ஆரம்பிச்சு இருக்குது.... 
கார்டினல் எனப்படும் சிவப்பு நிற பறவைகளும்,  Blue Jay எனப்படும் நீல நிற பறைவகளும் நிறைய பார்க்கிறேன்.  

 Red Cardinals: 





 Blue Jays: 



நம்ம ஊரு போகி பண்டிகையில் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று சொல்லி  வீட்டை   புது பொலிவுடன் தயார் படுத்துகிற மாதிரி,   வசந்தம் வரும் போது,  "Spring Cleaning" என்று சொல்லி வீட்டை தயார் படுத்துவாங்க....   ஒன்றரை ஆண்டுகள் முன்னால் தான்,   இங்கே ஒரு வீட்டை வாங்கி, எங்க கிராமத்து அத்தியாத்தை தொடங்கி விட்டோம்.  அதனால், நானும் இந்த வருடம்  வசந்த கால சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கியாச்சு.... 

வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய -  அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று. 

எங்கள் வீட்டு ஜன்னல்: 


 நல்லவேளை,  அவசரப்பட்டு கலைக்காமல் இருந்தேன்.   ஆர்வ கோளாறில்,  உள்ளே எட்டி பார்த்தேன்.  வெள்ளை அல்லது பிரவுன் நிறத்தில்,  கோழிமுட்டையே  பார்த்து பழகியவளுக்கு,  இது என்ன புதுசா ஒரு நிறத்துல முட்டை இருக்குதே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.  இது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று காத்து நின்று கண்டு பிடிச்சேன். 

இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!



நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க,  ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது.  சந்தோசம் தாங்கல..... அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

Robin Bird:  

சின்ன வயதில், எங்கள் தாத்தா பாட்டிம்மா வீட்டில் தான் இந்த மாதிரி குருவி கூடுகளை பார்த்த ஞாபகம்.  இப்போ, எங்க வீட்டிலேயும் ............ சூப்பரோ சூப்பர்!  எங்க குட்டீஸ்களும் நாங்களும்,  மாத்தி மாத்தி, ஜன்னலுக்கு உள்புறம் நின்று கொண்டு அந்த கூட்டை வேடிக்கை பார்ப்பது தான் நல்ல பொழுதுபோக்காக இருக்குது....  பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... ஹையா..... Beauty of nature!

தாய்பறவை இரை தேட சென்ற பொழுது, அவசரமாக நான் கிளிக்கியது: 



ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால்,   எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன -  குருவிகளும் இருக்கின்றன.   பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன.  அப்படின்னா,  எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ?  சரியா சாப்பாடு கிடைக்கலியோ?  போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? காகங்கள் மட்டும் எப்படி தப்பி பிழைக்கின்றன -  ஐந்து ரூபா "கோழி"  பிரியாணி வந்த பின்னும்?  ம்ம்ம்ம்ம்ம்.......

House Sparrow: 


இன்றைய தேதிக்கு, எங்க கிராமத்துல இன்னும்  வசந்தம் இருக்குது..... பறவைகளின் கூடுகள் இருக்கின்றன..... நான் எங்க வீட்டு ராபின் (Robin)  குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ! 

  நன்றி:  பறவைகளின் படங்கள்:  கூகிள் அக்கா. 

Sunday, April 3, 2011

அமெரிக்காவின் நஞ்சுபுரம்

எங்க நண்பர் ஒருவர், வேடிக்கையாக  கேட்டார்: 
"இந்தியர்களுக்கும் சீன மக்களுக்கும்   என்ன வித்தியாசம் தெரியுமா?" 
"உருவத்தில் இருந்து எத்தனையோ வித்தியாசங்கள் உண்டு. எதுன்னு நீங்களே சொல்லுங்க."
" இந்திய மக்கள், பாம்புக்கு படையல் வைப்பாங்க.... சீன மக்கள், பாம்பையே படையல் ஆக்கிடுவாங்க."

மற்றவர்கள் சிரிக்க, நானும் என் கணவரும் மட்டும் சிரிக்கவில்லை.  

காரணம்:   வித்தியாசமாக இருக்கும் இடங்கள், விழாக்கள் தேடி பிடித்து சென்று பார்க்கும் பழக்கம் உள்ள நானும் என் கணவரும்,  Texas மாநிலத்தில் இருந்த பொழுது,   தெரியாத்தனமாக ஒரு பாம்பு திருவிழாவுக்கு  சென்று விட்டு வந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.  அங்கே சென்ற பின் தான் கவனித்தேன். எத்தனையோ இந்தியர்கள் வாழும் அந்த மாநிலத்தில்,  எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த இந்தியரையும் அந்த திருவிழாவில் நான் பார்க்கவே இல்லை.  எல்லோரும் விவரமாக எஸ்கேப் ஆகிட்டாங்க போல... 

கொஞ்சம் வீக் இதயம் உள்ளவர்கள், இத்துடன் அபௌட் டர்ன், ப்ளீஸ்.... அப்புறம் கம்பெனி எதற்கும் பொறுப்பு எடுக்காது. 

வருடந்தோறும்,  Sweetwater என்ற சின்ன ஊரில்,  மார்ச் மாதத்தில் இரண்டாம்  வார இறுதியில் (வியாழன் முதல் ஞாயிறு வரை) நடக்கும் இந்த திருவிழாவுக்கு  அந்த ஏரியா மக்களிடம் வரவேற்பு அதிகம்.  Rotary Club - Lions Club மாதிரி உள்ள ஒரு சமூக அமைப்பான Jaycees குழுவினர்,  "World's Largest Rattlesnake Round-up" என்று நம்ம பக்கம் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாதிரி,  பாம்பு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துறாங்க. 


வரலாறு:  

ஒரு காலத்தில்,  அந்த பகுதிகளில்  விஷப்பாம்பு வகைகளில் ஒன்றான Diamondback  Rattlesnakes  அதிகமாக இருந்து இருக்கின்றன.  (இந்த பாம்புகளின் வால் பகுதிகளை, அந்த பாம்புகள்   கிலுகிலுப்பை - rattle - மாதிரி   ஆட்டி சத்தம் உண்டாக்கி எச்சரிக்கை செய்வதால், இந்த பெயர்.)   அதனால் கால்நடைகளும் பாதிக்கப் பட்டு வந்து இருக்கின்றன.  அந்த பாம்புகளின் வளர்ச்சியை குறைத்து, பாதுகாப்பு உள்ள இடமாக மாற்ற எண்ணி,   மக்களையே அந்த பாம்புகளை பிடித்து வரச் செய்து அழிக்க வகை செய்து இருக்கிறார்கள்.  
Diamondback Rattlesnake: 


வாலில் உள்ள கிலுகிலுப்பை (rattle) பகுதி:  


மக்களை உற்சாகப் படுத்தும் விதமாக,   "இருப்பதிலேயே அதிக நீள பாம்பை பிடித்து வந்தவர்" - அதிக எடை உள்ள பாம்பை பிடித்து வந்தவர்" என்று இன்னும் சில வகைகளாக பிரித்து பரிசுகள் வழங்கி இருக்கிறார்கள்.   ஆனால், இப்பொழுது அந்த அளவுக்கு பாம்புகள் தொல்லை  இல்லை என்றாலும் பழக்க தோஷம் யாரை விட்டது.   மக்களும் "ருசி" கண்ட பூனைகள் மாதிரி, பாம்பு பிடிக்க கை துருதுரு என இருக்குதுன்னு தொடர்ந்து சொல்ல,  52 வருடங்களாக தொடர்ந்து இந்த பாம்பு விழா நடக்குது.  

இதற்கெனவே பாம்பு பண்ணைகள் மூலமாக இந்த rattlesnakes வளர்க்கிறார்கள்.  விழா ஆரம்பிக்கும் நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் அந்த பாம்புகளை விட்டு விடுகிறார்கள்.  மக்கள் பாம்புகளை பிடித்து வர போட்டா போட்டி தான்.....  பரிசுகள் தொடர்ந்து கொடுக்கப்படுகின்றன. 



பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மற்றும் டிப்ஸ் கொடுக்கிறார்கள். 


இந்த விழா மூலமாக கிடைக்கும் நிறைய பணத்தில் தான்,  இந்த ஊரின் பல நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன் படுத்தப்படுகிறது.   அதை குறித்த விவரங்களுக்கு: 


விழா சிறப்பு நிகழ்ச்சிகள்:  
வியாழன் அன்று மதியம்,  அரை மணி நேர Parade ஒன்று ஊரின் முக்கிய பகுதியில் நடக்கும். 

வியாழன் மாலை,  Miss Snake Charmer Scholarship Beauty Pageant  நடைபெறுகிறது. தங்கள் கல்லூரி படிப்புக்காக, Jaycees  வழங்கும் Scholarship (கல்வி உதவி தொகை) க்காக அழகி போட்டிகள் நடக்கும்.  அதில் வெற்றி பெறும் அழகிக்குத்தான், Miss Snake Charmer என்ற பட்டம் வழங்கப் படுகிறது. 

2009 Miss Snake Charmer அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்: 

வியாழன் முதல் ஞாயிறு வரை,  இசை - நடனம் என்ற கலை நிகழ்ச்சிகளும் உண்டு. 
இப்படி எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.... அப்புறம் தான்  விஷமே ...சாரி, விஷயமே  என்னை கொட்டுச்சு..... சாரி, திக்கு முக்காட வச்சுது.....  ம் ..... ம்.......ம்...... ஸ் ...ஸ்......ஸ்.....

பிடிச்சுட்டு வந்த பாம்புகளை எல்லாம் என்ன  பண்றாங்க என்பதில் தான் விஷயமே அடங்கி இருக்குது.... 

 அந்த ஊரில் உள்ள பெரிய அரங்கில் உள்ளும் நடக்கும் நிகழ்ச்சிகளை காண நுழைந்தோம்.   ஒரே பேடு ஸ்மெல்லு ..... ஆமாம்ப்பா ..... துர் நாத்தம்  தாங்கல ..... ஒரு பெரிய குழிக்குள் பிடித்து வரப்பட்ட எல்லா பாம்புகளும் போட்டு வைத்து இருந்தார்கள்.  அந்த பாம்புகள்,  தங்கள் பாதுகாப்புக்காக, எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம்  இப்படி ஒரு ஸ்ட்ராங் வாடையை - ஒரு மஞ்சள் திரவம் போல வெளிப்படுத்தி விடுமாம்.   ஆனால், அங்கே மக்கள் ஏதோ ரோசாப்பூ வாசனையில் அன்ன நடை போட்டுக்கிட்டு போற மாதிரி நடந்தாங்க.... நான் விடுவிடுவென அந்த இடத்தை கடந்து போய் விட்டேன். 



 அந்த பாம்புகளிடம் இருந்து விஷம் எப்படி எடுக்கப்படுகிறது - அதை எப்படி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று மூன்று பேர்கள் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.  


அடுத்து பார்த்த காட்சியில், எனக்கு குடலை பிரட்டி, அதுவே பாம்பு மாதிரி வெளியே வந்துடும் போல இருந்துச்சு.... இரண்டு பேர்கள் ,  சில பாம்புகளை ஒரு பெரிய பெட்டிக்குள் வைத்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து,  கசாப்பு கடைக்காரர் போல, பாம்பு தலையை வெட்டி கொண்டு இருந்தார்கள்.  நம்ம ஊர் பக்கம்,  ஆடுகள் பலி கொடுத்துட்டு போற மாதிரி, இங்கே சர்வ சாதாரணமாக பாம்புகளை பலி கொடுத்த மாதிரி சிரச் சேதம் செய்தாங்க...  அந்த தலைகளை ஒன்று விடாமல் சுத்தம் செய்து ஒரு வாளியில் சேகரித்துக் கொண்டார்கள். 



அப்புறம்,    டீன் வயதில் உள்ள சின்ன பெண்களும் ஆண் பிள்ளைகளும்,  தலைகள் இல்லாத பாம்புகளை ஒரு பெரிய கொடியில், ஏதோ துணி காயப் போடுற மாதிரி காயப் போட்டு விட்டு,  கிளிப் மாட்டி,  அதன் தோலை, ஒரு வீச்சாக பிய்ந்து விடாமல், ஒரே பீசாக உரித்து கொண்டு இருந்தார்கள். யம்மா..... என்று ஓடி போய்ட்டேன்.  



அடுத்த பகுதியில் அப்படி உரிக்கப்படும் தோல்களை, எப்படி பதப்படுத்துகிறார்கள் (how to make them into snake skin  leather ) என்று ஒரு குட்டி வகுப்பு நடக்குது.   

அடுத்து ஒரு திருவிழா கடைகள்/சந்தை பரப்பி அந்த அரங்குக்குள்ளேயே வைத்து இருந்தார்கள்.   அந்த பாம்பின் தோல் மற்றும் பதப்படுத்தப்பட்ட தலைகள் வைத்து - குட்டி பாம்பு முதல் பெருசுகள் வரை - செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் விற்கப்பட்டுக் கொண்டு இருந்தன. 

கைத்தடி, கம்மல்கள்,  வளையல்கள்,  பெல்ட், ஜாக்கெட்,  பூட்ஸ், கைப்பைகள்,  பர்சுகள்,  மோதிரங்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என்று வகை வகையாக இருந்தன. ஏதோ கண்காட்சியகம் போல பார்த்து கொண்டு இருந்தேன்.  அந்த பாம்பு கொத்துனா,  மனுஷனுக்கு சங்குதான்.  அந்த பாம்பை,  இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு.... விற்பனை கோலகாலமாக நடந்து கொண்டு இருந்துச்சு.  
rattlesnake belt, purse, money-clip: 

 rattlesnake pen: 

 rattlesnake கத்தி உறை:

அந்த பையன் போட்டு இருக்கிற செயின் பாருங்க: 

 
 Rattlesnake Boots:  (most popular items) 

rattlesnake rattle ear rings:

rattlesnake real  bones necklace: 

நான் என் கணவரின் கையை பிடித்து கொண்டு, போதுண்டா சாமி..... என்னை பலி/பழி வாங்கியது போதும் ....வாங்க போகலாம் என்று இழுத்து கொண்டு வந்தால்,  அரங்கின் வெளியேறும் வாசல் பக்கம் - கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்துச்சு... வெளியே வர முடியல.  அப்புறம், மெல்ல வெளியே வந்தால் அந்த வாசல் பக்கம் தான் ஒரு கடை போட்டு,    french fries  உடன்  பாம்பு வறுவல் விற்றுக் கொண்டு இருந்தார்கள்.  ஏதோ மீன் வறுவல் மாதிரி மக்கள், என்ஜாய் பண்ணி சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்.  வயதானவர்கள் - சிறுவ சிறுமியர் - ஆண் பெண் - என்று எல்லோரும் ஜாலியா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.  

 corn dog என்பது நாய் கறி அல்ல,  சோள மாவில் முக்கி எடுத்து பொரிக்கப்பட்ட ஒரு வகை sausage ஆகும். 
Rattlesnake fry with french fries: 

 
நான் அங்கே பிடிச்ச ஓட்டத்தில் எங்க கார் பக்கம் வந்துதான் நிறுத்தினேன்.  நாங்க அப்போ இருந்த லபக் ஊருக்கு பத்திரமாக வந்து சேர்ந்திட்டோம்.  பசித்தாலும்,  ஏனோ எதையுமே சாப்பிடத் தோணல .....ரெண்டு நாளைக்கு.......  அப்புறம் தான் சகஜ நிலைமைக்குத் திரும்பினேன். 

படங்கள்:  நன்றி கூகிள் அக்கா (எனக்கு இருந்த பதட்டத்தில், நிறைய படங்கள் எடுக்கல.  நின்னு நிதானமாக எடுத்து கொண்டு இருந்தால்,  என்னையே படமா மாட்டி இருப்பாங்க.... என் நிலைமை நிச்சயமா அப்படி ஆகி இருந்து இருக்கும்.  அவ்வ்வ்வ்....) 

பதிவை  வாசிச்சிட்டு  உங்களுக்கே ஒரு மாதிரியா இருந்துச்சுனா,  நேரில் இதையெல்லாம் எடிட் பண்ணாமல் பார்த்த என் நிலைமையை யோசிச்சு பாருங்க....
நாட்டுக்கு நாடு நஞ்சுபுர சம்பவங்கள் உண்டு போல.... அதற்கு அமெரிக்கர்களும் விதிவிலக்கு அல்ல. நேரில் பார்த்திரா விட்டால், நான் கூட நம்பி இருந்து இருக்க மாட்டேன்.