Monday, January 31, 2011

படிக்க ஆசை... ஆனால், வேலை பார்க்க பேராசை.


நேற்று எங்களுக்கு வாழ்த்து சொல்லிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிங்க....


 இன்று, வேறு ஒரு பதிவு எழுத தயார் ஆகி கொண்டு இருந்த பொழுது,  ஒரு சீரியஸ் பதிவு எழுத வேண்டியதாகி விட்டது.
மன்னிக்கவும்.

இங்கு பரப்பரப்பு இல்லாத பெரிய நியூஸ்.... ஆனால்,  இந்தியாவில் பரபரப்பா பேசப்படுற நியூஸ் இது, என்று நண்பர் ஒருத்தர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார்.
http://timesofindia.indiatimes.com/world/us/Duped-Indian-students-ignored-red-flags/articleshow/7393658.cms

இதை விட தெளிவாக எழுத முடியாதே ...... உண்மையை சொல்லி இருக்காங்க....

உனக்கென்ன தெரியும்னு கேட்காதீங்க.....  இங்கே வெட்டியாக இருக்கிற நேரம் எல்லாம், சில  Indian Students' Association உடன் சேர்ந்து  ஏதாவது ப்ரோக்ராம் organize செய்வதில், ஒத்தாசையாய் இருப்பது எனது பொழுதுபோக்கு.  அவர்களின் மன நிலைகளும் எண்ண அலைகளும் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்புகளும் கிடைத்து இருக்கின்றன.


அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க, "லார்டு லபக் தாஸ்"  வீட்டாளுக மட்டும் தான் என்று இருந்தது தான் அந்த காலம்.  இப்போ, யார் வேண்டுமானாலும் படிக்க வரலாம் என்கிற அளவுக்கு வசதிகளும் வாய்ப்புகளும் வந்து இருக்கின்றன.
எல்லாம் செய்து கொடுத்தாலும், கடைசியிலே  மாங்கு மாங்குனு படிச்சு எழுதினால் தான் ஒழுங்கான டிகிரி கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். 

 மாணவர்களுக்குரிய F1 டைப் விசா பெற்று,  வருபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் பெருகி கொண்டு தான் வந்து இருக்கிறது. இதுவும் நல்ல விஷயம் தான்.

http://www.nriol.com/oisnet/usastudentstats.asp
 அந்த லிங்க்ல் உள்ளது படி,  2009 கணக்கு படி  அமெரிக்காவுக்கு அதிகமாக படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தில் வந்து இருக்கிறது.  அந்த வருடம்,   103,260 மாணவர்கள், இங்கே வந்து இருக்கிறார்கள்.  இதுவும் நல்ல விஷயம் தான்.

மேட்டர் என்னன்னா, இப்படி படிக்க வர எல்லோருமே,  "நல்லா படிச்சு, டிகிரி வாங்குறதுதான் என் உயிர் .... என் மூச்சு.... என் கடமை..... என் கட்டுப்பாடு......" என்று வருவது இல்லை.   பெயர் வாங்கி உள்ள பெரிய பல்கலைகழகங்கள்  எல்லாம் சேர்ந்தால்,  "rules and regulations" ரொம்ப பேசுறாங்கப்பு..... எனக்கு நோகாமல் நொங்கு எடுக்கணும்.  அதுக்கு என்னா வழி?" அப்படின்னு இந்தியாவில் இருந்து வருவதற்கு முன்னாலேயோ ..... இல்லை  வந்தவுடன்,  பிரத்யேக Forum ...காரம் மூலமாகவோ எங்கே  சீப்பா fees  இருக்கும்?  எங்கே  அமெரிக்க மண்ணுல காலை வச்ச உடனேயே ..... இந்த கையில ஒரு வேலையை கொடுத்து, அடுத்த கையில டாலர்ஸ் கொடுக்கிற மாதிரி இருக்கும் என்று பார்த்து கிட்டு ..... யோசிக்காமல் குதிச்சுடுறாங்க....

வாசித்து பார்த்தால்,  குறுக்கு வழியில கைலாசம் போக எப்படி ஆலோசனை கேக்குறாங்க..... அது தப்புன்னு சொல்றவங்க பேசுறதை, இந்த காதில் வாங்கி .... அந்த காதில் எப்படி விடுறாங்க என்று தெரியும்.

இந்த மாதிரி மாணவர்களை டார்கெட் செய்து, சில online universities  .... சட்டத்தில் இருக்கிற ஓட்டையை .... பெருசாக்கி, தங்களுக்கு சாதகமாக மாற்றி,  இந்த மாணவர்களுக்கு  வசதியாக்கி கொடுத்து இருக்காங்க.  ஒரு டிகிரி வாங்கி முடித்த பின் , அல்லது முடிக்கும் தருவாயில், தாங்கள் படித்து இருக்கும் துறை சம்பந்தமான வேலைகளில் - trainee - ஆக இருக்க மட்டுமே  பயன்பட  கொடுக்கப்படும் CPT மற்றும் OPT work permits ..... இவர்களுக்கு,  university il  சேர்ந்த  முதல்  வாரத்திலேயே  கிடைக்கும் படி செய்து விடுகிறார்கள்.   தங்களின் துறையில் மட்டும் இல்லாமல்,  பெட்ரோல் பங்க் வேலையில் இருந்து IT வேலை வரை, எல்லா வேலைகளையும் செய்ய இந்த வொர்க் பெர்மிட் கொண்டு கிளம்பி விடுகிறார்கள்.

இதனால், நியாயமாக அந்த வேலை கிடைக்க வேண்டிய இன்னொரு இந்தியருக்கு கூட அந்த வேலை கிடைக்காமல் போய் விடும் நிலை உள்ளது. 

இந்த பல்கலைகழகங்களில்,   ஆன்லைன் வகுப்புகள்  மட்டும் தான். அதுவும் கண் துடைப்புக்காக மட்டுமே.  அதை அமெரிக்காவில் எந்த மூலையில் இருந்து கொண்டும்,   இவர்கள்  படிப்பது போல, பாவ்லா கட்டிக் கொள்ளலாம்.  எப்படியும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில், கட்டிய  fees க்காக ஒரு diploma டிகிரியோ .... ஒரு வெத்து மாஸ்டர்ஸ் டிகிரியோ கொடுத்துடுவாங்க.
 
இந்த டிகிரியை வைத்து அமெரிக்காவில் எங்கும் வேலை வாங்க முடியாது என்பதை, இந்த மாணவர்கள் புரிந்து கொள்வதில்லை.  பெரும்பாலும் இந்த universities எல்லாம்,  blacklisted ஆக இருக்கும்.  அதை பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை. 

இப்படிப்பட்ட பல்கலைகழகங்களை தவிர்க்க சொல்லி, எத்தனையோ Forum மற்றும் பல்வேறு வழிகளில் தெரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு.  

இப்பொழுது பிடிபட்டு, இழுத்து மூடப்பட்டு இருக்கும் Tri-valley University - ஒரு சீனப் பெண்மணியின் கவனிப்பின் கீழ் இருந்து இருக்கிறது.  அந்த பல்கலைகழகத்தின் கட்டடத்தை பார்த்தாலே, அது போலி என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.

அப்படி இருந்தும் அதில் சேர்ந்தது - 90 % மேலாக இந்தியர்கள்தான்.    H 1 B வொர்க் விசா வாங்கி வந்து இங்கே வேலை பார்க்கும் சில இந்தியர்களின் கணவருக்கோ, மனைவிக்கோ H 4 விசா (Dependent visa) கொடுக்கப்படும்.  ஆனால், இந்த விசாவை வைத்து கொண்டு வேலைக்கு செல்ல முடியாது.  ஆனால், இப்படிப்பட்ட  பல்கலைகழகங்களில் சேர்ந்து கொண்டு, தங்கள் விசா status மாற்றி கொண்டு,  வேலைக்கு செல்பவர்களும் உண்டு.

இந்த மாய வலையில், தெரிந்தோ தெரியாமலோ விழும் சில மாணவர்கள்,  தாங்கள் படிக்க வந்த நல்ல பல்கலைகழகங்களில் இருந்து, மாற்றி கொண்டு  - டிகிரி பற்றி கவலைப்படாமல் உடனே பணம் சம்பாதிக்கும் ஆசையில்,  இங்கே சேர்ந்து விடுவதும் உண்டு. 

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால்,  Tri-Valley University இல், இது வரை மாட்டி இருக்கும் பெரும்பாலானோர்,  ஆந்திராவை சேர்ந்தவர்கள்.  இவர்களில் பலர்,   தாங்கள் எந்த மாதிரி பாதையில் செய்ய முடிவு எடுத்து இருக்கிறோம் என்பதை நன்கு தெரிந்து கொண்டவர்களே.

மாட்டாத வரை, செய்வது தவறல்ல என்ற மன நிலையை என்னவென்று சொல்வது?  

இந்த பல்கலைகழகம் பற்றிய சந்தேகம் வரவும், அரசாங்கம் விசாரணை ஆரம்பித்து விட்டது.   விசாரிக்கப்பட்ட மாணவர்களில் சிலர்,  வெளியே தகவல்கள் கொடுத்து அலெர்ட் செய்து இருக்கிறார்கள்.  அதை பலர் புறக்கணித்து இருப்பது, இப்பொழுது வெளியே வந்து இருக்கிறது.  வார்னிங் மெசேஜ்களை சீரியஸ் ஆக எடுத்துக் கொண்ட வெகு சிலரே,  உடனே வேறு  மாற்று ஏற்பாடுகள் செய்து கொண்டு விலகி விட்டார்கள். 

Tri-Valley University இல்  உள்ள மாணவர்களின் தகவல்கள் அத்தனையும் அரசாங்கத்தின் கையில் .....
இதில் வேடிக்கை என்னவென்றால்,  நானூறுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் முகவரியாக, ஒரே வீட்டின் முகவரியை தந்து இருக்கிறார்கள். 

இப்பொழுது, அந்த ஊரில் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருக்கும் அத்தனை மாணவர்களும் உடனே Immigration office,  தொடர்பு கொள்ள சொல்லி உத்தரவு வந்து இருக்கிறது.  இதில்,  H 4 விசாவை மாற்றி விட்டு,  "அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாய் இருக்கும்"  இந்தியர்களுக்கு வயிற்றில் புளி கரைத்து இருக்கிறது.  ஏனெனில், அவர்களது இந்த டம்மி வொர்க் பெர்மிட் விசா status ரத்து செய்யப்படும் போது, அவர்கள் "out of status" ஆக நேரிடலாம். அதனால், தன் கணவரையோ, மனைவியையோ விட்டு விட்டு இந்தியா திரும்பி செல்லும் நிலை நேரிடலாம்.

இதை போன்ற நிலைகளை தவிர்க்க,  இங்குள்ள Immigration lawyers மற்றும் Telugu Association of North America (TANA) வின் உதவிகளை நாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஊரிலேயும்,  sensation news ஆக்கி,  இந்திய அரசாங்கத்தை உதவிக்கு அழைக்கிறார்கள். 
 
நம்ம நாட்டில் இருக்கும் அரசாங்க விதிகளை மதித்து - அதற்கு உட்பட்டு இருப்பது, ஒவ்வொரு இந்தியரின் மனப்பக்குவத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது ஆக இருக்கலாம்.  ஆனால், தாய் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வரும் போது, அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை தெரிந்து, அதற்கேற்ப நடக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறதல்லவா? 

நம்ம ஊரில், "நம்ம நாட்டாமை வீட்டு பையானாம்.... கேஸ் போடாதே!" என்றோ, "நம்ம MLA வுக்கு வேண்டியவராம். கண்டுக்காதே!" என்றோ சொல்லி,  தவறுக்கு தண்டனை இல்லாமல் போவதை  சாதரணமாக எடுத்துக் கொள்ளப் பழகி விட்ட  பலருக்கு,  இது கஷ்டம் தான்.

  இருந்தாலும் இந்த மாணவர்களுக்கு,  எந்தவித discrimination ம் அமெரிக்க அராசங்கம் காட்டவில்லை.  சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அது மட்டுமே செய்யப்படுகிறது.   விசாரணைக்குப் பின், தெரிந்தே தவறு செய்தவர்களின் விசா - பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்கள்,  வேறு எங்கும் விதிகளை மீறி,  சென்று விடக்கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் முழுதும் எடுத்து முடிக்கும் வரை, அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க chip transmitters காலில்  பொருத்தப்பட்டு இருக்கின்றன.   இவர்களை,  சிறையில் அடைக்க வகை இருந்தும்  (giving fraudulent information, knowingly) அப்படி  செய்யாமல் , அவர்களை Voluntary deportation - தாங்களாகவே முன் வந்து இந்தியா திரும்ப செல்ல, அமெரிக்க அரசாங்கம் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், அந்த மாணவர்களில் பெரும்பாலானோர் அப்படி திரும்பி இந்தியா செல்ல விரும்பவில்லை. அமெரிக்க அரசாங்கம், இவர்களுக்கு உதவும் வண்ணம் மாற்று ஏற்பாடு செய்து, அமெரிக்காவிலேயே தங்கும் படி செய்ய எதிர்பார்க்கிறார்கள்.

அது எப்படி உனக்குத் தெரியும் அப்படின்னு கேட்கிறீங்களா?  TANA மூலமாக இந்த மாணவர்களுக்கு உதவியாக இருக்க முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் TANA Students' Chair  ஆக இருக்கும்  அஷோக் கொல்லாவுடன் (Ashok Kolla)  தொலைபேசியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  இவர் இந்த பல்கலைகழகத்தில் படிக்கவில்லை என்றும், இருந்தாலும் அமெரிக்காவில் உள்ள ஆந்திர மாணவர்களின்  பிரதிநிதியாக தான் இருப்பதால்,  TV 9 முதல் கொண்டு பேட்டி தந்து இருப்பதாக தெரிவித்தார்.  அந்த மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதாகவும் இந்திய அரசாங்கம் தலையிட்டு - ஆவன செய்ய வேண்டும் என்று மாணவர்கள்
விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும்,  அந்த பல்கலைகழகம் தான் தவறான தகவல்கள் தந்து மாணவர்களை ஏமாற்றி விட்டதாகவும் சொன்னார்.

அந்த மாணவர்களை, victims என்ற பொழுது மட்டும் வந்த சிரிப்பை, ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன்.  ஒரு பதிவுக்கு உள்ள கமென்ட் போடுவது போல இருந்தால்,  "ஹா, ஹா, ஹா, ஹா,  ஹி, ஹி, ஹி, ஹி,   ஹோ, ஹோ, ஹோ, ஹோ, ஹையோ ஹையோ ஹையோ ..... " என்று சிரித்து இருக்கலாம்.  ப்ச்.....



ஈஸியாக கிடைக்குதே என்று  தெரிந்தே சென்ற இந்த மாணவர்கள்,  victims என்றால்,   அங்கே தமிழ்  மீனவர்களை சுட்டு கொண்டு இருக்கிறாங்கப்பா..... அவங்களை என்னவென்று சொல்வது?  முதலில் அதை கவனிங்கப்பா... அப்புறம் இதை பற்றி கவலைப்படலாம். 

ஒழுங்காப் படிக்க வந்து,  நல்ல பல்கலைகழகங்களில் இருக்கும் எல்லா இந்திய மாணவர்களையும்,  Garnier Shampoo products சொல்ற மாதிரி, அமெரிக்காவில் பத்திரமாக பார்த்துக்கிறாங்க....  மரியாதையாகத்தான் நடத்துறாங்க.  அவர்களுக்கு, இந்த பிரச்சனை எதுவும்  இல்லை.

வேலியில் ஓடுவது ஓணான் என்று தெரிந்தும்,  எடுத்துக் கொண்டு, இப்பொழுது குத்துதே குடையுதே என்று சொன்னால்? ............   ம்ம்ம்ம்ம்ம்...........  
 
  இந்த சம்பவம் கேள்விப்பட்டதும்,  எங்கள் மாணவ குழுவில் ஒரு தமிழ் நண்பர், "இந்த ஆந்த்ரா பசங்களே இப்படித்தான், சித்ரா.... எப்படியாவது loophole பிடித்து அமெரிக்காவில் தங்க புளப்பை பாத்துக்கிடுவாங்க. இப்போ மாட்ட ஆரம்பிச்சிருக்காங்க!" என்று சொல்லிக் கொண்டு இருந்த பொழுது  - அவரை சந்தித்த ஒரு அமெரிக்க நண்பர்,  "Hey man!  Did you hear the news about those Indian students in California?" என்றதும் இவருக்கு முகம் வாடிப் போய் விட்டது.  "சித்ரா, எனக்குத்தான் அவங்க ஆந்த்ரா.... இவங்களுக்கு, இந்தியர்கள்.  என்னையும் அவர்களையும், இந்தியர்களாக பார்க்க மட்டும் தான் இந்த அமெரிக்கனுக்குத் தெரியும்.  ஆந்த்ரா, தமிழ்,  மலையாளம் என்று இல்லை.... அதை ஒரு நிமிஷம் மறந்துட்டேன்.  ஒரு இந்தியன், உலக சாதனை செய்தால், எல்லோருக்கும் பெருமை.  ஆனால், இப்படி நேரத்தில் மட்டும் பிரிச்சு பார்க்க நினைச்சிட்டேனே!" என்றார்.

என்னத்த சொல்ல......????   நான் அவர் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தேன்.  
 




 
 

Sunday, January 30, 2011

ஆயினும் காதல் செய்வேன்

உலகம் முழுவதும் February 14th தான் காதலர் தினம் கொண்டாடும்.  நானும் என் கணவரும்  மட்டும், January 31st அன்று கொண்டாடுவோம்.  அதை, எங்கள் திருமண நாள்னு சொல்லிக்கிறாங்க.
  ரைட்டு .... அப்படியே புல்லரிச்சு போனவங்க எல்லாம், அபௌட் டர்ன், ப்ளீஸ்! நன்றி....

"தை பிறந்தா - எத்தனை பேருக்கு வழி கிடைக்கும்  - எத்தனை பேருக்கு வலி கிடைக்கும் " என்று  நிச்சயிக்கப்படுகிறது,   அப்படின்னும் சொல்லிக்கிறாங்க.........

                                                    
நான் திருமணம் ஆனப்போ எப்படி இருந்தேன் என்று  ஏற்கனவே எழுதி இருக்கேனே.
link:

   திருமண நாள் ஸ்பெஷல் பதிவா, என் கணவர் உதித்த சில "பொன்மொழிகள்" பகிர்ந்து கொள்கிறேன்.  படிச்ச பிறகு,  தலைப்புக்கு அர்த்தம் தெரியும்.

நான்:  இன்னைக்கு friend,  கனி கிட்ட பேசினேன்.  ஊரில,  அவங்க பக்கத்து வீட்டுல ஒருத்தங்க,  குடிச்சு குடிச்சே சொத்தை எல்லாம் அழிச்சிட்டு குடும்பத்தை கஷ்டப்பட வச்சுட்டாராம். 
சாலமன்:   இப்படி இவங்க எல்லாம்  பண்றதுனால தான் , drinks எடுக்கிற  அத்தனை பேருக்கும் கெட்ட பேரு.....
நான்: என்ன சொன்னீங்க?
சாலமன்:  இல்லை,  தண்ணி அடிக்கிறது  எவ்வளவு கெடுதல்னு சொன்னேன். 

நான்:  கண்ணா,  J.C.Penney ல 60 % Savings  னு Sales  (நம்மூரு ஆடி தள்ளுபடி விற்பனை மாதிரி)  போட்டு இருக்காங்கடா.... இன்னைக்கு ஈவ்னிங், ஷாப்பிங் போகலாம்.
சாலமன்:  குட்டிம்மா,  இன்னைக்கு ஈவ்னிங், வீட்டிலேயே இருக்கலாமே. எனக்கு 100 % Savings.

நான்:  எங்க ஊரு பக்கம், பொங்கல் நேரம் எப்படி களை கட்டும் தெரியுமா?  அழகா கோலங்கள் போட்டு, நடுவில பொங்கப்பானை வச்சு ........... அசத்துவாங்க.  அன்னைக்கு செய்ற பொங்கலும் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கும். எல்லாம் மிஸ் பண்றேன்.
சாலமன்:  ஆமாம். பொங்கல் நேரம்,   பெண்கள் ஸ்பெஷல் ஆக இருக்கும். ரொம்ப மிஸ் பண்றேன்.
நான்:  என்னது? பெண்களா?
சாலமன்:  பொங்கல்னு தான் சொல்ல நினைச்சேன். சாரி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு.

நான்,   மியாமி பீச்சில்,  ஜொள்ளி கொண்டு இருந்த ஒரு வயதானவரை காட்டி, " இந்த கிழட்டு வயசிலேயும் குளுகுளுனு ஜொள்ளு விட கேக்குதே. கொடுமை!
சாலமன்:  A man is as old as he feels; a woman is as old as she looks.  அப்படின்னு நான் சொல்லல. வேறு யாரோ சொல்லி வச்சது, இப்போ ஞாபகம் வந்தது. 


நான்:  இந்த ஸ்வீட் நல்லா இருக்கா?
சாலமன்:  லாஸ்ட் டைம் செய்து இருந்தது இன்னும் நல்லா இருந்துச்சு.
நான்:  அப்போ,  இன்னைக்கு செய்தது  நல்லா இல்லையா?
சாலமன்:  சே, சே..... அப்படி நான் சொன்னா,  எனக்கு டைம் நல்லா இல்லைனு அர்த்தம்.

 As I always say, "there is never a dull moment in our married life."  எங்கள் இருவரையும் இணைத்து வைத்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்றேன்.  Praise the Lord!


படங்கள்:  கூகிள். நன்றி.

Sunday, January 23, 2011

வெள்ளை மணல் உருகி....

பொங்கல் வாரம், அமெரிக்காவில் உள்ள  நியூ மெக்ஸிகோ மாநிலம் பற்றி எழுதி இருந்தேன்.  இந்த மாநிலம், அமெரிக்காவின் மற்ற மாநிலங்களை  விட ரொம்ப வித்தியாசமாக இருக்கும். Santa Fe யில் உள்ள Adobe ஸ்டைல் வீடுகள் பற்றி சொல்லி இருந்தேன்.

 இன்று,  அந்த மாநிலத்தில் உள்ள "White Sands National Monument Park" பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறேன்.  பதிவு நீளமாக தெரிவதற்கு படங்கள் தான் காரணம்.  நான் எடுத்த படங்களை போடாமல், கூகிள் தலையில பாரத்தை போடுறேன். ஏன்னு நீங்களே அப்புறம் தெரிஞ்சுக்குவீங்க..... ;-)


275 சதுர மைல்களுக்கு,  வெள்ளை பாலைவனமாக அழகு மிளிர காட்சி அளிக்கும் இடம் இது.  பனி மாதிரி எங்கு பார்த்தாலும்  வெள்ளை மணல். .......  உலகத்திலேயே பெரிய ஜிப்சம்  மணல் மேடுகள் இதுதான் என்று சொல்லிக்கிறாங்க... (World's largest Gypsum Dune Field)


அங்கு அதிகமாக கிடைக்கும் சுத்தமான ஜிப்சம் (Hydrous Calcium Sulfate)  , காற்றினால்  கொண்டு வரப்பட்டு இப்படி மணல் மேடுகளாக டெபாசிட் ஆகி விடுகிறதாம்.  அதீத குளிரும் வெயிலும் உள்ள இந்த இடத்தில் கூட சில தாவரங்களும் மிருகங்களும் தங்களுக்கு ஏற்ற இடமாக adopt செய்து கொண்டு நிம்மதியாக இருக்குதுங்க...


 இப்படிப்பட்ட இடத்தை பற்றி மேலும் தகவல் வேணும்னு நினைக்கிறவங்க - அது எப்படி உருவாகியது?  என்ன என்ன இருக்குது? எதனால் இருக்கிறது?  லொட்டு லொசுக்குனு  - கேள்வி கணைகளை தொடுக்கிறவங்க :
http://www.nature.nps.gov/geology/parks/whsa/index.cfm 
அமெரிக்க govt .  கொடுத்து இருக்கிற மேல  உள்ள லிங்க் கிளிக் பண்ணி முழு விவரங்களும்  தெரிஞ்சிக்கோங்க.  
மற்றவங்க, மேற்கொண்டு வாசிங்க.....


மற்ற சமயங்களில் குடும்ப படத்தை பார்க்க வர்ற மாதிரி கூட்டம் வந்தாலும்,  இங்கே வெள்ளை மணல் மேடுகள் பின்னே,  பௌர்ணமி அன்று நிலா  உதிக்கும் நேரம் - அந்த கவித்துவமான அழகை காண romantic ஜோடிகள்  வருகை தருகிறார்கள்.  நம்ம தமிழ் படங்கள்ல வர மாதிரி,  chorus ஹம்மிங் உள்ள  background music தான் மிஸ்ஸிங் ஆக இருந்துச்சு....


சூரிய அஸ்தமனம் நேரத்தில்,  அங்கே வாக்கிங் போக வசதி பண்ணி வச்சுருக்காங்க.  அந்த நேரம், நாங்க நடந்து போய்க்கிட்டு இருந்தப்போ,  மாலை நேர சூரிய ஒளி பட்டு, வெள்ளை மணல் மேடுகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என்று பல நிறங்களில் நிறம் மாறி மாறி ,  இருளை தழுவி கொண்டது. சிறிது நேரத்தில்,  வெள்ளி மின்னல் வெளிச்சம் போல,  முழு நிலா எழும்பி பிரகாசிக்க வைத்தது ........ அதை பழமொழி மாதிரி ஆராயக் கூடாது.... அனுபவிக்கணும்.  சூப்பரோ சூப்பர்!


அப்படியே டூயட் பாடலாமானு நினைச்சா.... அடுத்து கேள்விப்பட்ட நியூஸ்  ஏதோ மணிரத்தினம் சார் படங்கள் "ரோஜா"  - "Dil Se" -   மாதிரி   சீனை மாத்திடுச்சு.   மென்மையான  காதல் கதை சொல்லிக்கிட்டு இருக்கிற போது, மிலிட்டரி என்ட்ரி ஆகிற  மாதிரி,   கதை  தீம் போய்டுச்சு ....  காதல் ரசம் போய் கார்கில் ரசம் ஊத்துச்சு...... வெள்ளை மணல் உருகி,    சிவப்பு தடம் பதிக்கிற  மாதிரி மாறிச்சு.   ..... (அப்பாடி, அர்த்தம் இருக்குதோ இல்லையோ,  ஒரு flow ல  பதிவுக்கு வச்ச டைட்டில் வந்துடுச்சு..... மேல சொல்றேன், கேளுங்க......)
 


 அங்கே பார்க் நடவடிக்கைகளை மேற்பார்வை பார்க்க வந்த ஒரு   Ranger இடம், பேசும் வாய்ப்பு கிடைத்தது.  அவர் சொன்ன தகவல் -  இங்கே எல்லா நேரமும் இப்படி அழகை ரசிக்க  முடியாது  என்று  ஒரு குண்டை தூக்கி போட்டார். இந்த பார்க், 40 % தான் பொது மக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டு இருக்கிறது.  60 % இடம்,  அமெரிக்க மிலிட்டரிக்கு  சொந்தமானது.  பொது மக்கள், அங்கே போக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


அது மட்டும் இல்லைப்பா, இந்த ஏரியாவில்  மக்கள் விசிட் அடிக்கிறாங்களே தவிர,  வீடு கட்டி வாழ்றது இல்லை.  ஏன் தெரியுமா?  .... ஷ்ஷ்ஷ்....... யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க..... குறிப்பாக தீவிரவாதிகள் யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க.... காதை கொடுங்க... உங்களை நம்பி ராணுவ ரகசியம் மாதிரி இருக்கிற மேட்டர் சொல்றேன். "இங்கேதான் மிலிடரி அப்போ அப்போ Missile Testing எல்லாம் பண்றாங்க..... புதுசா செய்ற பாம் எல்லாம் வெடிச்சு சோதிச்சு பார்க்கிறாங்க..... "  அந்த மாதிரி குண்டு வெடிப்பு சோதனை நேரங்களில், பார்க் ஏரியா மட்டும் இல்லை,  அந்த  ஊரு பக்கம்  முழுவதும் யாரும் போக விட மாட்டாங்க....  எல்லாம் ரோடுகளும் க்ளோஸ் பண்ணி - மிலிட்டரி  காவல் போட்டு விடுறாங்க.... சோதனைகள் முடிந்த பின் தான் திறந்து விடுவாங்க...

 ....  சமாதான வெள்ளை நிற  மணல் பக்கம்,   ஒரு  யுத்தத்துக்கு தேவையான ஆயுத ஆராய்ச்சி......என்னே ஒரு முரண்பாடு! 



டெஸ்டிங் இல்லாத நேரங்களில் கூட,  இந்த பார்க் பக்கம் போகும் போது,   திடீர்னு செக் போஸ்ட்  வச்சு நம்மை பற்றிய விவரங்கள் மற்றும் ஆவணங்கள் கேட்டு செக் பண்றாங்க.... முதல் வாட்டி, இப்படியெல்லாம் க்ளோஸ் அப்புல, ஆர்மி ஆட்கள் -  மெஷின்  கன்ஸ் பார்த்தேனா ...... கொஞ்சம் டென்ஷன் ஆகி போச்சு.... நல்ல வேளை,  கையில பாஸ்போர்ட்ல இருந்து  எல்லாம் ரெடி ஆக இருந்ததுனால திரும்பி வந்து இங்கே ப்லாக் எழுதி கிட்டு இருக்கேன்..... இல்லைனா, பிடிச்சுட்டு  போய் அடுத்த missile டார்கெட் ஆக வச்சு இருப்பாங்களோ என்னவோ?  எம்மாடி!  (பில்ட் அப் கொடுக்க வேண்டியதுதான் ...... அதுக்காக இப்படியா என்று யாரும் கேலி பண்ணாதீங்க. அப்புறம் உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் connection உண்டுன்னு ஒபமாகிட்ட சொல்லி கொடுத்துடுவேன். ஆமா.....!)



என்ன சொல்ல வரேன்னா - இந்த இடத்தை எத்தனை அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போய் பார்த்து இருப்பாங்க என்று தெரியல..... பார்க்காதவங்க, மிலிடரி குண்டு போட்டு டெஸ்ட் பண்ணி பார்க்காத நேரத்துல போய் பார்த்துட்டு பத்திரமாக வாங்க....  அப்புறம், நான் வார்னிங் கொடுக்கலைன்னு சொல்லாதீங்க.....

விரைவில்,  நியூ மெக்ஸிகோவில் உள்ள இன்னொரு சுவாரசியமான இடத்தை பற்றி சொல்றேன். சரியா?  




Tuesday, January 18, 2011

2010 - திருப்பி போடணும்.

 எனது சென்ற பதிவில் -  "நல்லா படிச்சீங்களா?"   -  நான் கேட்டு கொண்ட கேள்விக்கு - சிறப்பான பதிலை தந்து, எனக்கு உதவிய "அரசூரான்" அவர்களுக்கு நன்றி.

அவரின் பதில்:

"//இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?//
குழந்தை சும்மா கேட்காது, ஒற்றை விரலை (அப்பா மாதிரியே) நீட்டி கேட்கும், அப்படியே பதில் சொல்லாம ரிவர்ஸ்ல ஓடிப்போயிருங்க..."

ஹா,ஹா,ஹா,ஹா, ..... அந்த கமென்ட் வாசித்து விட்டு நல்லா சிரிச்சேன். 

 2011 ஆம் ஆண்டை  "வா வா...... வாத்தியாரே, வா...." என்று நான் அழைத்துக்கொண்டிருந்த நேரம்,  பதிவுலக நண்பர் பாலாஜி வந்து , நான் 2010 ஆம் ஆண்டை  திரும்பி பார்த்தே ஆகணும் என்று "தொடர் பதிவு" என்ற பெயரில் ஒரு கண்டிஷன் போட்டுக்கொண்டார்.


மக்கா,   நான் அப்படி என்னதான் (போன வருஷம் மட்டும் அல்ல  - இந்த வருஷமும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்)  "வெட்டி பேச்சு" பேசுகிறேன் என்று திருப்பி போடுறேன். சாரி, திரும்பி  பார்க்கிறேன்.  (எப்படி பார்த்தாலும்,  பானையில் இருக்கிறது தானே அகப்பையில் (கரண்டியில்) வருது.   அவ்வ்வ்....) என் பதிவுகள் வாசிக்கும் அனைவருக்கும்  தெரிந்து இருக்குமே - நான் எதை பத்தியும் உருப்படியா எழுதலனு  உடனே கண்டுபிடிக்க முடியாத மாதிரி, உருப்படியா எழுதிருவேன்னு.  ஹி,ஹி,ஹி,.....

வெட்டி டைம் இருந்தால்,  வெட்டி பேச்சுக்களின் பிறப்பிடமான "டீ கடை பெஞ்சு..." என்ற தலைப்பில் போன ஜூன் மாதம், நான் கிறுக்கியதை பார்த்து "வெட்டி  அறிவை" வளர்த்துக்கோங்க.

போன வருஷம்தான் எனக்கு பதிவுலகில் நல்லா  kick -off ஆச்சு. எனக்கு interesting  விஷயங்கள் நிறைய  நடந்துச்சு.
எல்லா புகழும் இறைவனுக்கே!  

காமெடி மட்டும் அல்ல ... வம்பு, தும்பு,  அப், டௌன்,  ட்ராஜெடி கூட   ......பார்த்தேன்.  ஆனாலும், அதன் சாயல் - வடுக்கள் - எனது பதிவுகளில் தொடர்ந்து  வராத வண்ணம் பார்த்துக் கொண்டு,  வழக்கம் போல எழுதி கொண்டு இருந்தேன்.   வெற்றி பெற்றேன் என்று நினைக்கிறேன்.


அப்புறம்,  13 வருடங்கள்,   நல்ல தோழியாய்  பழகிட்டு, பதிவுலகம் வந்து - அது தந்த போதையில்,  என்னை காயப்படுத்தி, எனது நட்பை தூக்கி எறிந்து விட்ட வேதனையான சம்பவத்தில் இருந்து  --------  முகம் தெரியாது இருந்தும் ,  எழுத்துக்கள் மூலமாகவே அறிமுகம் ஆகி,  சகோதர பாசத்துடன் பழகும் பல நல்ல உள்ளங்களின் அன்பும் நட்பும் கிடைத்த இனிமையான சம்பவங்கள் வரை எல்லாம் நடந்துச்சு.

எல்லாத்தையும் சொல்லி bore அடிக்கணுமா என்று யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ,  பதிவுலகில் ஏற்படும்  எனது   பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி,  ஒரு பாட்டு வந்து இருக்கிறது,  நினைப்புக்கு வந்துச்சு.  அதிலே "This is Africa" என்பதற்கு பதில், "This is வெட்டி பேச்சு" னு  போட்டு பார்த்தா - எல்லாமே  கரெக்ட் ஆக இருக்குதுப்பா... lyrics கவனிச்சு பாருங்க....  நான் சொல்றது பில்ட் அப் இல்லை, சரின்னு தெரியும்.



அந்த பாட்டில்,  ஷகிரா மற்றும் "waka ...waka...."  மட்டுமே கவனித்து விட்டு,  அதில் lyrics இருந்துச்சா ஆஆஆ...... என்று அப்படியே 'ஷாக்' ஆகி இருக்கும் நண்பர்களுக்காக, அந்த பாடலின் வரிகள் - Africa வுக்கு பதில், வெட்டி பேச்சு  - சேர்த்து இதோ:

You're a good soldier -
Choosing your battles.
Pick yourself up
And dust yourself off
And back in the saddle.
You're on the frontline
Everyone's watching -
You know it's serious
We're getting closer.
This isn't over.
The pressure is on
You feel it.
But you've got it all
Believe it.
When you fall get up
Oh oh...
And if you fall get up
Oh oh...
Tsamina mina
Zangalewa
Cuz this is வெட்டி பேச்சு.
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு.
This is our motto:
Your time to shine
Don't wait in line.
Y vamos por Todo
People are raising
Their Expectations.
Go on and feed them
This is your moment.
No hesitations.
Today's your day
I feel it.
You paved the way
Believe it.
If you get down
Get up Oh oh...
When you get down
Get up eh eh...
Tsamina mina zangalewa
Anawa aa
This time for வெட்டி பேச்சு .
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
Anawa aa
Tsamina mina eh eh
Waka Waka eh eh
Tsamina mina zangalewa
This time for வெட்டி பேச்சு.

எல்லாம் வல்ல இறைவன் அருளால், தொடர்ந்து இந்த வருடமும் "கொஞ்சம் வெட்டி பேச்சு" பேச ஆசை..............!

Sunday, January 16, 2011

நல்லா படிச்சீங்களா?

தமிழ்மண 2010 விருதுகளை  வென்ற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும்,   எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிக்கிறேன்ங்க! 


எனது கல்லூரி தோழி உமாவை, நான் சென்ற முறை திருச்சி சென்ற பொழுது, சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 

அப்பொழுது உமா, பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் தன் மகளை அறிமுகம் செய்து வைத்தாள்.
" நல்லா படிக்கிறியா?"
இப்படி ஒரு மெகா புளித்து போன  கேள்வி கேட்ட வாய்க்கு, அவள் எனக்கு உடனே ஒரு டம்ளர்  தண்ணியில "Eno fruit Salt" போட்டு கலக்கி கொடுத்துருக்கணும்.   செய்யல..... நல்ல பொண்ணு!

"நல்லா படிக்கிறேன். கிளாஸ்ல first .  நீங்க என் அம்மா கிளாஸ் மேட் தானே?  எங்க அம்மா எப்படி படிப்பாங்க?", என்று கேட்டாளே பார்க்கலாம்.
"உங்கள் அம்மாவும் கிளாஸ் first ஆகத்தான் இருந்தாங்க," என்று உண்மையைத்தான் சொன்னேன்.
இருந்தாலும், நம்பாத மாதிரி ஒரு லுக் விட்டாள்.
"அம்மாவோட friend ல. அப்படித்தான் சொல்வீங்க."

நல்ல வேளை,  "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை.  ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! 

அவர்கள் வீட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டு இருந்தபொழுது....  மனதில்  "flashback....." ஓடாமல் இருக்குமா?

நான் படித்த கான்வென்ட்டில் டென்த் வரை, இங்கிலீஷ் மீடியம் ஒரே ஒரு  செக் ஷன் மட்டும் தான். அதனால்,  என்னுடன் முதல் வகுப்பில் இருந்து டென்த் வரை படித்தவர்கள் - ஒரு சிலரை தவிர - மற்றவர்கள்  மாறவே இல்லை. அதே குரூப் தான்.

நிஜமாவே  தங்கள் படிப்பில், கருமமே  கண்ணாய் இருந்தவர்கள் - புத்தகத்தை படிச்சு - தவளையை கிழிக்கிற  first குரூப் எல்லாம் எடுத்துட்டு - நான் டாக்டர் ஆகப் போறேன் - engineer ஆகப் போறேன் - குப்பை கொட்டுனாலும், அதை கம்ப்யூட்டர்ல தான் கொட்டப் போறேன் -   என்று  + 1   இல் தான்  பிரிந்து சென்றார்கள். 

மற்றவர்கள்,  புத்தகத்தை படிச்சுட்டு அதையே கிழிக்கிற (பிட்டுக்குதான், ஹி  ஹி ஹி ஹி ..... )   குரூப்ஸ்  தேடி பார்த்து எடுத்து படித்தோம்.  அப்புறம்,  ஆர்ட்ஸ் காலேஜ் கூட சேர்ந்து ஒரே படையாக - வேறு வேறு டிகிரி வாங்க சென்றோம்.  மதிய உணவு நேரம்,  பலர்  பெரும்பாலும் சந்தித்து கொள்வோம்.

இதில்,   B.Com சேர்ந்த நானும் இன்னொரு தோழியும்  - B.A. History சேர்ந்த ஒருத்தியை சும்மா கலாய்த்து கொண்டே இருப்போம்.
ஒரு நாளு  அவளும் "பொறுத்தது போதும்.  பொங்கி எழு, மனோகரி!" மாதிரி பொங்கப் பானையாய் பொங்கிட்டா!

"படிக்கிறது Bachelor of Commerce தானே?  Bachelor of C(k)ombus (கொம்புஸ்) இல்லையே....  என்னமா அலட்டிக்கிறீங்க ...... நான் B.A. முடிச்சிட்டு,  அடுத்து உங்களுக்காகவே லா காலேஜ்ல  சேர்ந்துட்டு லாயர் ஆகிட்டு  - உங்க  மேல மான நஷ்டம் - மனக் கஷ்டம்னு எல்லாம் சொல்லி - நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போட்டு - நீங்க வேலை பார்க்க போற பேங்க்லேயே,  நீங்க கொள்ளை அடிச்சாத்தான் அதை கட்ட முடியும்ங்கற நிலைமைக்கு உங்களைத் தள்ளி - உங்களுக்கு எதிரா நானே வாதாடி,  உங்களை ஒரு வழி பண்றேன்," என்று சொல்லிவிட்டு, தன் முன்னால் இருந்த புத்தக கட்டின் மேல  சத்தியம் செய்தாள்.

ஐயோ...... விளையாட்டுக்கு என்றாலும், இப்படி படிக்கிற புக் மேல சத்தியம் பண்ணிட்டாளே என்று  எட்டி பார்த்தோம்.  "Women's Era" பத்திரிகை ஒன்று அவளது History course books மேல இருந்தது.  அட்டைப் படத்தில்,  ஏதோ ஒரு  பொண்ணு சிரித்து கொண்டு இருந்தாள்.  அய்யோ.... பாவம்.... யார் பெத்த பொண்ணோ?


அருகில் இருந்த  B.Com. கிளாஸ் மேட் தோழி , "சரி, விடுமா.  எனக்கு  Reserve Bank Governor வேலை கொடுத்துட்டு , என் signature காகத்தான் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி   பேசாதே.   நானே அகப்பை (கரண்டி)  பிடிக்கப் போற  கைக்கு, Accountancy எதுக்குன்னு  உள்ளூர புலம்பிக்கிட்டு இருக்கேன். நீ வேற மிரட்டாதே."


அன்று சிரிப்போசை அடங்க ரொம்ப நேரம் ஆச்சு.....  இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.   இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் ...... அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட,  இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள்.   History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள்,   Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள்.   அதற்குள், படிக்கும் போது மட்டும் என்ன அலப்பறை பண்றோம் என்று சிரித்து கொண்டேன்.

மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை.  அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... 

இந்த நினைப்பு ஒரு பக்கம் திடீர்னு வந்தப்போ,   ஒரு நண்பரின் பர்த்டே  பார்ட்டிக்கு போக வேண்டியது வந்தது .  வந்து இருந்த எல்லோருமே, ஆந்த்ராவில் இருந்து அமெரிக்காவுல  மாஸ்டர்ஸ் டிகிரி படிக்க வந்தவர்கள்.  அதில் ஒருவன்,  பயங்கர பாலையா காரு fan .........

அவன் வீட்டில் இருந்து வரும் போதே, நல்லா "தண்ணி"  அடிச்சிட்டு  வந்தாச்சு .... சிறிது நேரத்தில்,   தன்னையே பாலையாவாக நினைத்து தெலுங்கில் ஆக்ரோஷமாக வசனம் பேச ஆரம்பித்து விட்டான்.  எனக்கோ, தெலுங்கு - ஹிந்தி எல்லாமே ஒண்ணுதான்..... விளங்காத போது, அது என்ன பாஷையாக இருந்தால் என்ன?  இருந்தாலும், அவனது பாலையா சேட்டைகளை கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பாலையா, விரலைத் தூக்க - ஒரு காட்சியில் ட்ரைன் ஒன்று பின்னோக்கி செல்லும்.  அந்த காட்சியை வைத்து மற்றவர்கள்,  அவனை கலாய்க்க ஆரம்பித்தார்கள்.  அவனுக்கு எல்லோர் மேலும் கோபம் அதிகமாகியது.  திட்ட ஆரம்பித்தான்..... மற்றவர்கள் முகத்தை பார்த்தேன்.  அவங்க  லுக் விட்ட விதம்  சரியா இல்லை.....  தெலுங்கு புரியாமல் இருந்ததை பாக்கியமாக கருதினேன்.  என்ன சொல்லி திட்டி இருப்பான்  என்று புரியாமலே புரிந்த மாதிரி இருந்துச்சு.....

அடுத்த பில்டிங்கில்  இருந்த  அவனது  வீட்டுக்கு (apartment) அழைத்து சென்று விட,  இரண்டு பேர்  முனைந்தார்கள்.

பார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான்.  வீர வசனம் பேசினான் -  "இருக்கா?  இல்லையா?"  என்பதற்கே ஸ்பெஷல் பொங்கல் திருநாள் பட்டிமன்றம்,  டிவியில  நடத்தி முடிவெடுக்க வேண்டி  இருந்த தன் மீசையை தட்டி விட்டு கொண்டான் - தன் தொடையை தட்டி கொண்டு, ஒத்தை விரலை தூக்கி விட்டு என்னவென்னவோ சொல்லி விட்டு,  அப்படியே ஒரு விரலை நீட்டிக்கொண்டு நின்றான்.



என்ன ஆச்சு என்று கேட்ட போது,   கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒருவர்  " இல்லை,  அவனை கிண்டல் செய்ததற்கு, அவனது கோபத்தை தூண்டி விட்டுட்டோமாம்.    இப்போ, அங்கே நின்னுக்கிட்டு இருக்கிற நம்ம கிஷோர்  ஓட காரு பின்னோக்கி  போகுமாம்.  சபதம் போடுறான்.  அந்த கார்,  அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும்,  நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"
 
டைம் பார்த்தோம்.  இரவு மணி, ஒன்று.  குளிர் - zero டிகிரிக்கும் கீழே.....  நீட்டிய விரலை மடக்காமல்,  நிற்கிறான் .... நிற்கிறான்..... சிலையாட்டம் நிற்கிறான் ......  அப்படியே  கடுங்குளிர்ல விறைச்சு போய்த்தான் நின்னானோ என்னவோ......

வேறு வழி இல்லாமல்,  அவன் அசந்த  சமயம்  கிஷோர்,  தன் காரில் ஏறி,  கார் ஸ்டார்ட் செய்து காரை reverse செய்து "பின்னுக்கு" போகச் செய்தான்.  பாலையா ரசிகருக்கு பரம சந்தோஷம்.... மீண்டும் ஒற்றை விரல் தூக்கி, எங்கள் அனைவருக்கும் ஒரு வார்னிங்..... பின், ஒரு வெற்றி புன்னகை.... சந்தோஷமாக தன் வீட்டுக்கு சென்று விட்டான்.

அவன் போவதையே சிறிது நேரம்,  வெறித்து பார்த்து கொண்டு இருந்த எங்களின் சிரிப்போசை அடங்கவும் ரொம்ப நேரம் ஆச்சு......

இன்னும் சில வருடங்களில்,  இவனும் பெரிய வேலையில் இருக்கலாம்.   இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?

Monday, January 10, 2011

மண் வீடுகளும், பின்னே அமெரிக்காவும்

பொங்கல் ஸ்பெஷல் பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்த பொழுது,  நாங்கள் சில வருடங்கள் முன், பொங்கல் சமயம்,  அமெரிக்காவில்,  New Mexico மாநிலத்தின் தலைநகரம் - Santa Fe க்கு சென்ற அனுபவம் ஞாபகம் வந்தது..... கிராமிய சூழ்நிலையில், பொங்கல் கொண்டாடுவது தனி அழகு என்று சொல்லி கொண்டு இருந்த நேரம், என் கணவர் சாலமன், அந்த வருடம் என்னை  ஒரு ஸ்பெஷல் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி, அங்கே அழைத்து சென்றார்.  அமெரிக்காவிலேயே  மிகப் பழமையான தலைநகரம், இதுதான். (The oldest Capital City in USA)     Santa என்றால் புனித - Holy என்று அர்த்தம்;  Fe என்றால் Faith - நம்பிக்கை  என்று அர்த்தம் என்று விளக்கம் தந்தார்.

சரி,  வழக்கம் போல ஊர் சுத்தல் என்று சாதரணமாக கிளம்பி சென்ற எனக்கு ஆச்சர்யம் காத்து இருந்தது.

அமெரிக்காவில் உள்ள மற்ற தலைநகரங்கள் போல அல்லாது, குறைந்த மக்கள் தொகையுடனும்  நிறைய கலை அம்சங்களுடனும் இந்த நகரம் இருப்பது,  இதன் தனி சிறப்பாகும்.  இங்கே ஸ்பெஷல் என்னங்கறீங்க?  அந்த நகரத்தின் கட்டட அமைப்புதான். அப்படியே ஆ ...... னு வாய் பாத்து கிட்டே வந்தேன்.  நம்ம ஊரில், மண் வீடு ஏழ்மையின் சின்னமாக கருதப்பட்டு கொண்டு வரும் வேளையில்,  பெரிய பெரிய ஹோட்டல், மாளிகைகள் எல்லாம் மண் வீடு அமைப்பிலேயே கட்டி, அசத்தி கொண்டு இருக்கிறார்கள்.  வாவ்!

மெக்ஸிகோ மற்றும் ஸ்பெயின் கலாச்சாரமும், அந்த பகுதிகளில் இன்னும் வாழ்ந்து கொண்டு வரும் செவ்விந்தியர்கள் எனப்பட்ட Native Americans பழக்க வழக்கங்களும் இணைந்து  நகரம் முழுவதும் முத்திரை பதித்து  உள்ளன.
இவர்கள் செய்யும் கை வினைப்பொருட்கள் - ஓவியங்கள் - கலை அம்சங்கள் ஒரு பக்கம் நேரடி விற்பனைக்கு கிடைக்கும் வண்ணம்,  நகரம் முழுவதும் கலைக்கூடமாக காட்சி அளித்தது.   இங்கே பாருங்க... மண் குடங்களை அழகாக வரிசைப்படுத்தி வைத்து இருந்தாங்க.....

நியூ மெக்ஸிகோவில் கோடை காலம் - உச்சி வெயில் மண்டையை புளக்கிற மாதிரி இருக்கும்.  Dry Heat வேறு அனல் காத்தடிக்க மிரட்டும்.  குளிர் காலம், அதிக குளிரில் வெடவெடக்க வைக்கும்.  இந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற வீடுகள், மண்வீடுகள் தான் (Adobe style - அடோபி)  என்று Native Americans கண்டு பிடித்து கொண்டு,  அதிலேயே பெரும்பாலான வீடுகளையும் கடைகளையும் கட்டி வைக்க, அதையே இன்னும் - "பெரியவா சொல்லிட்டா..... சரியாத்தான் இருக்கும்...." என்று கடைபிடிக்கிறாங்க மக்கா.

 இவர்களது பாரம்பரியத்தை மதிக்கும் பொருட்டு, Old Santa Fe பகுதி முழுவதும் மண்ணின் நிறம் (Earth Tone) கொண்டு பிரதானமாக கட்டப்பட்டு இருக்கும் கட்டடங்கள் தான் இருக்க வேண்டும் என்ற அரசாங்க  விதி உண்டு. அதனால், இந்த பகுதியில் உள்ள உணவு விடுதிகளும், கடைகளும்,   வீடுகளும் ,  பெரிய 5 Stars Hotels கூட Adobe Style கொண்டு தான் கட்டப்பட்டு இருக்கின்றன.  நம்ப முடியலியா?  அமெரிக்கா என்றாலே நியூ யார்க் மட்டும் இல்லைப்பா.....

 கீழே உள்ள படங்கள், 5 Star  Hotel Santa Fe மற்றும் Loretta Inn and Spa Resort :  நம்ப முடிகிறதா?


கிறிஸ்தவ ஆலயம் ஒன்று.  மிகப் பழமையான ஆலயம் என்ற பெயர் பெற்ற San Miguel Chapel:


 மண் வீட்டு பங்களா:


இதுவும் அமெரிக்காவில் இருக்கும் வீடுதான்:
 
நிச்சயமா இது அந்த ஊரு நாட்டாமை வீடு இல்லை:






அங்கே விற்பனைக்கு இருந்த ஒரு வீட்டை வேடிக்கை பார்த்தோம்.  முன்னாலே அந்த கொடி இல்லைனா, இது அமெரிக்காவில் இருக்கும் வீடுதான் என்று, அங்கே இருந்த நானே நம்பியிருப்பது கஷ்டம் தான்.





ஒரு வீட்டின் உள்ளே இருந்த வரவேற்பறை:

மேல தாங்கு கட்டையுடன் அப்படியே ஒரு கிராமிய மணம் கமழும் அறை:

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் ரூம் ஒன்றின் அறை:
அரிக்கேன் விளக்கு - வண்டி - எதையும் விடல. .....






மேல உள்ள படம், அங்கே இருந்த கடை வீதி: 
ஒரு Native American கடையில் இருந்த ஜமுக்காள போர்வைகள்:

கைத்தறி தொழில் - குயவர்கள்,  மண் பாத்திரங்கள் - மண் வீடுகள்  என்று இந்த தலைநகரம் - கிராம நெடியுடன் அசத்தியது.  அது மட்டும் இல்லைங்க - முத்தாய்ப்பாக -
இங்கு உணவு வகைகளில்,  அதிகம் காரம் சேர்த்து கொள்கிறார்கள்.  வீடுகளின் முன்னும் கடைகளின் முன்னும்,  சிவந்த மிளகாய்களையும் பூண்டுகளையும் மாலைகளாக தொடுத்து காயப் போட்டு இருப்பதை பார்த்து நிஜமா - ஊரு நினப்புல கண்ணுல தண்ணி வந்துட்டுது. 



இப்படியாக ஒரு தலைநகரமே, மண் வீடு - மண் குடம் - என்று  நம்ம ஊரு பொங்கலுக்கு தயாராக இருக்க - - -   நான்தான், அரிசி - வெல்லம் - பருப்பு - கரும்பு - எடுத்துட்டு போகாம போயிட்டேன்.  முதலிலேயே தெரிந்து இருந்தால், அங்கேயே பொங்கல் வச்சு கொண்டாடி இருந்து இருக்கலாம். 
இனி என்ன - வருஷா வருஷம் பொட்டியை கட்டிக்கிட்டு, Santa Fe போய்தான் பொங்கல் கொண்டாடிட்டு  வரணும் போல..... 

ஒரு டவுட்டு:  இந்த Native Americans செய்றது எல்லாமே நம்ம ஊரு சரக்கு மாதிரி இருக்கே..... இவங்க எல்லாருமே,   அந்த காலத்திலேயே நம்ம ஊரு விட்டுட்டு வந்து,  அமெரிக்காவில் முதன்  முதலா டெண்ட்டு போட்டவங்களாக இருப்பாங்களோ?  

அந்த தலைநகரத்தை பத்தி நிறைய எழுதலாம் - அப்புறமா ஒரு நாளு சொல்றேன். ....... இப்போ எல்லோரும் பொங்கல் கொண்டாட போங்க......பட்டணத்தில் தான் இருக்கோமே என்று,   கிராமத்தை மறந்துராதீங்க, மக்கா....... 
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
 


Tuesday, January 4, 2011

ஆண்களின் டிரஸ் ?



 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.......  அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும் கூட போனஸ் ஆக இப்போவே வெட்டி பேச்சில் இருந்து  வருகிறது.......


எல்லோருக்கும் இந்த ஆண்டு புது பொலிவுடன் - நம்பிக்கையுடன் ஆரம்பித்து இருக்கும் என்று நம்புகிறேன்..... ஒரு வழியாக - வெற்றிகரமாக - இரண்டு வாரங்களுக்கு மேலாக - ஈமெயில்,  பதிவுலகம்,  Facebook பக்கம் வராமல் இருந்து விட்டேன்.  இதெல்லாம் இல்லாமல் கூட,  உலகம் எப்போவும் போல தான் சுத்துதுங்க..... நிஜமா......

இப்போதான் பெட்டி படுக்கையோட ஊரில் இருந்து இறங்கியாச்சு.....  கொடுத்த வாக்குப் படி,  ஜனவரி ஐந்தாம் தேதி வந்து ஆஜர் போடணும் என்ற கடமை உணர்ச்சியில் இங்கே வந்து எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்.
கருத்து - சிந்திக்க - சிரிக்க - எல்லாம் இன்னும் அந்த பெட்டிக்குள்ளேயே இருக்குதோ என்னவோ.....  ம்ம்ம் ....
பெட்டியை திறக்கணும்  என்று கூட தோணவில்லை..... அதற்குள் வெள்ளி கிழமை வரும் பயணம் கண் முன் வந்து நிக்குது.....  ஆஆ......

சரி, அதை விடுங்க மக்காஸ் .......

எங்கள் பயணத்தின் போது,  இந்தியாவில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா  வந்து இருக்கும் சிலரை சந்திக்கும்  வாய்ப்பு கிடைத்தது.  புது வருட திருநாளை குறித்து , ஒரு அமெரிக்க நண்பர்,  எட்வர்ட் உடன் சேர்ந்து அவர்களுடன் பேசி கொண்டு இருந்த பொழுது,  மகேஷ் என்பவர்,  "புது வருடத்துக்கு எனக்கு டிரஸ் ஊரில் இருந்து கொண்டு வந்து விட்டேன்," என்று ஆங்கிலத்தில் சொல்ல எட்வர்ட்  விழித்தார்.
"You wear a women's dress for New Year?"
"No, only Men's dress."
"In India, you have dress for men too?"
ஐயா, சாமி..... இதுக்கு மேல ஏதாவது சொன்னால் - கிழிஞ்சுடும் லம்பாடி லுங்கி என்று ..... மகேஷிடம் இங்கே டிரஸ் என்றால் பெண்கள் அணியும் உடைக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், ஆண்களுக்கு "outfit" அல்லது " clothes" என்றுதான் சொல்வார்கள் என்று  விளக்கினேன்.


சுப்பு என்ற தமிழர் அசடு  வழிய ஒரு blonde பெண்ணிடம் கடலை போட,  மரியாதையுடன் உளறியதையும் மறக்க முடியாது.... ஏதோ  இங்கிலீஷ்ல இலக்கணம் சுத்தமாக ....."As I am suffering from fever னு ஆரம்பிச்சு .... Yours sincerely னு முடிக்கிற " ரேஞ்சுல அவளுடைய பேரு கேட்டார்.
"May I kindly know your good name, please?" என -
அந்த பெண் சத்தமாக சிரித்தபடி,  "I never knew I had a bad name too..." என்றாள்.
 



அப்புறம், சுந்தரம் என்ற நண்பர் புதிதாக வந்த சமயம்,   சாரா என்ற அமெரிக்க பெண் அவருக்கு முதன் முதலாக கடைக்கு சென்று வர உதவ முன் வந்தாள் .....  அவர் வாங்கிய பொருட்களை காரில் வைக்க அவர் காத்து இருப்பது தெரியாமல், சாரா இன்னொரு தோழியிடம் பேசி கொண்டு இருந்தாள்.  சுந்தரம்  பவ்யமாக அவளிடம்,
"I want to open the dicky, please" என்று கேட்க, அவள் கோபத்தில் திட்ட ஆரம்பிக்க .... விவரம் புரியாமல் இவர் முழிக்க.....
அருகில் வந்த இன்னொரு இந்திய மாணவர்,  சுந்தரத்திடம், " இங்கே கார் பின்பக்கத்தை  ட்ரன்க் (trunk) என்றுதான் சொல்வார்கள். நீ சொல்லியது வேற "பொருள்" படும், " என்ற பின் - சுந்தரம் முகத்தில் அசடு வழிய - விஷயம் தெளிந்து சாரா சிரிக்க.....
அட, அட, அட......


ஊருக்கு ஏத்த மாதிரி எதை மாத்துறீங்களோ இல்லையோ...... பேச்சை மாத்த வேண்டியது இருக்கே.....
நெல்லை சீமையில,   பிரிட்டிஷ் இங்கிலீஷ் படிச்சுட்டு வந்து, இங்கே அமெரிக்க இங்கிலீஷ்ல குப்பை கொட்டுரோமே..... யம்மா.....சாரி..... மம்மி டோய்..... ஆச்சி டோய்..... டமில் வால்க டோய் !!!
American English vs British English: 

அமெரிக்காவுக்கு இந்த வருடம் புதிதாக வருபவர்கள், நோட் தீஸ் பாயிண்ட்ஸ் ப்ளீஸ்...... தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்..... இருக்கட்டும்....  வேறு ஏதாவது டவுட்டு இருந்தா சொல்லுங்க.... சுந்தரம் அல்லது மகேஷ் வந்து தெளிவு படுத்துவாங்க..... இது போல, நிறைய ஆப்பு வாங்கி கஷ்டப்பட்டு அமெரிக்காவுல அமெரிக்க இங்கலிபீசு படிச்சவுக ஆச்சே......

ஆமா..... உனக்கு எதுவும் இப்படி "மாட்டல்" கதை இல்லையா? என்று கேக்காதீங்க..... நாங்க எல்லாம் உஷார் பார்ட்டிக..... அடுத்தவுக விட்ட தப்புல இருந்தே கப்புன்னு பாடத்தை பிடிச்சிக்கிட்டோம்ல .......