Showing posts with label home sweet home. Show all posts
Showing posts with label home sweet home. Show all posts

Monday, April 11, 2011

வசந்த கால பறவைகளே.....

ஒரு வழியாக, கிடுகிடு ......வெடவெட..... குளிர் - வெண்பனி எல்லாம்  குறைந்து, வசந்த காலம் எங்க கிரமாத்தில எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டுது....   எங்கே பார்த்தாலும் அழகு அழகா மலர்களும், பறவைகளும் ....... சூப்பரோ சூப்பர்! 


எங்க வீட்டு மரங்களில் குறிப்பாக இப்போ நிறைய பறவைகள் கூடு கட்ட ஆரம்பிச்சு இருக்குது.... 
கார்டினல் எனப்படும் சிவப்பு நிற பறவைகளும்,  Blue Jay எனப்படும் நீல நிற பறைவகளும் நிறைய பார்க்கிறேன்.  

 Red Cardinals: 





 Blue Jays: 



நம்ம ஊரு போகி பண்டிகையில் "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று சொல்லி  வீட்டை   புது பொலிவுடன் தயார் படுத்துகிற மாதிரி,   வசந்தம் வரும் போது,  "Spring Cleaning" என்று சொல்லி வீட்டை தயார் படுத்துவாங்க....   ஒன்றரை ஆண்டுகள் முன்னால் தான்,   இங்கே ஒரு வீட்டை வாங்கி, எங்க கிராமத்து அத்தியாத்தை தொடங்கி விட்டோம்.  அதனால், நானும் இந்த வருடம்  வசந்த கால சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கியாச்சு.... 

வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலில், ஏதோ குப்பை மாதிரி தெரிய -  அதை சுத்தப் படுத்த அருகில் சென்ற பொழுதுதான் தெரிந்தது, அது குப்பை அல்ல - பறவையின் கூடு என்று. 

எங்கள் வீட்டு ஜன்னல்: 


 நல்லவேளை,  அவசரப்பட்டு கலைக்காமல் இருந்தேன்.   ஆர்வ கோளாறில்,  உள்ளே எட்டி பார்த்தேன்.  வெள்ளை அல்லது பிரவுன் நிறத்தில்,  கோழிமுட்டையே  பார்த்து பழகியவளுக்கு,  இது என்ன புதுசா ஒரு நிறத்துல முட்டை இருக்குதே என்று பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.  இது எந்த பறவையின் முட்டையாக இருக்கும் என்று காத்து நின்று கண்டு பிடிச்சேன். 

இந்த புகைப்படத்தை எடுத்தது நானே: சூப்பர் என்று சொல்லுங்கப்பா....!



நான் எதிர்பார்த்த அழகு பறவைகள் எல்லாம் மரங்களில் கூடுகள் கட்டி இருக்க,  ஒரு சாதாரண ராபின் என்ற பறவை எங்க வீட்டு ஜன்னலை அழகு படுத்தி இருக்கிறது.  சந்தோசம் தாங்கல..... அந்த மகிழ்ச்சியைத்தான் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.   

Robin Bird:  

சின்ன வயதில், எங்கள் தாத்தா பாட்டிம்மா வீட்டில் தான் இந்த மாதிரி குருவி கூடுகளை பார்த்த ஞாபகம்.  இப்போ, எங்க வீட்டிலேயும் ............ சூப்பரோ சூப்பர்!  எங்க குட்டீஸ்களும் நாங்களும்,  மாத்தி மாத்தி, ஜன்னலுக்கு உள்புறம் நின்று கொண்டு அந்த கூட்டை வேடிக்கை பார்ப்பது தான் நல்ல பொழுதுபோக்காக இருக்குது....  பிரவுன் பறவைக்கு ப்ளூ முட்டைகள்..... ஹையா..... Beauty of nature!

தாய்பறவை இரை தேட சென்ற பொழுது, அவசரமாக நான் கிளிக்கியது: 



ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..... ஆனால்,   எங்க ஊரில செல் போன் டவர்ஸ் இருக்கின்றன -  குருவிகளும் இருக்கின்றன.   பல நிற பறவைகளும் அழகு படுத்துகின்றன.  அப்படின்னா,  எங்கேயோ லாஜிக் இடிக்குதே.... ஒருவேளை.... கூடு கட்ட இடம் - வீட்டமைப்பு மற்றும் மரங்கள் - இல்லாமல் நகரங்களில் மட்டும் காணாமல் போச்சோ?  சரியா சாப்பாடு கிடைக்கலியோ?  போக்குவரத்து சப்தங்களிலும் நெரிசல்களிலும் பயந்து தொலைந்து போச்சோ? காகங்கள் மட்டும் எப்படி தப்பி பிழைக்கின்றன -  ஐந்து ரூபா "கோழி"  பிரியாணி வந்த பின்னும்?  ம்ம்ம்ம்ம்ம்.......

House Sparrow: 


இன்றைய தேதிக்கு, எங்க கிராமத்துல இன்னும்  வசந்தம் இருக்குது..... பறவைகளின் கூடுகள் இருக்கின்றன..... நான் எங்க வீட்டு ராபின் (Robin)  குருவி கூட்டை ரசிக்க போறேங்கோ! 

  நன்றி:  பறவைகளின் படங்கள்:  கூகிள் அக்கா. 

Sunday, January 30, 2011

ஆயினும் காதல் செய்வேன்

உலகம் முழுவதும் February 14th தான் காதலர் தினம் கொண்டாடும்.  நானும் என் கணவரும்  மட்டும், January 31st அன்று கொண்டாடுவோம்.  அதை, எங்கள் திருமண நாள்னு சொல்லிக்கிறாங்க.
  ரைட்டு .... அப்படியே புல்லரிச்சு போனவங்க எல்லாம், அபௌட் டர்ன், ப்ளீஸ்! நன்றி....

"தை பிறந்தா - எத்தனை பேருக்கு வழி கிடைக்கும்  - எத்தனை பேருக்கு வலி கிடைக்கும் " என்று  நிச்சயிக்கப்படுகிறது,   அப்படின்னும் சொல்லிக்கிறாங்க.........

                                                    
நான் திருமணம் ஆனப்போ எப்படி இருந்தேன் என்று  ஏற்கனவே எழுதி இருக்கேனே.
link:

   திருமண நாள் ஸ்பெஷல் பதிவா, என் கணவர் உதித்த சில "பொன்மொழிகள்" பகிர்ந்து கொள்கிறேன்.  படிச்ச பிறகு,  தலைப்புக்கு அர்த்தம் தெரியும்.

நான்:  இன்னைக்கு friend,  கனி கிட்ட பேசினேன்.  ஊரில,  அவங்க பக்கத்து வீட்டுல ஒருத்தங்க,  குடிச்சு குடிச்சே சொத்தை எல்லாம் அழிச்சிட்டு குடும்பத்தை கஷ்டப்பட வச்சுட்டாராம். 
சாலமன்:   இப்படி இவங்க எல்லாம்  பண்றதுனால தான் , drinks எடுக்கிற  அத்தனை பேருக்கும் கெட்ட பேரு.....
நான்: என்ன சொன்னீங்க?
சாலமன்:  இல்லை,  தண்ணி அடிக்கிறது  எவ்வளவு கெடுதல்னு சொன்னேன். 

நான்:  கண்ணா,  J.C.Penney ல 60 % Savings  னு Sales  (நம்மூரு ஆடி தள்ளுபடி விற்பனை மாதிரி)  போட்டு இருக்காங்கடா.... இன்னைக்கு ஈவ்னிங், ஷாப்பிங் போகலாம்.
சாலமன்:  குட்டிம்மா,  இன்னைக்கு ஈவ்னிங், வீட்டிலேயே இருக்கலாமே. எனக்கு 100 % Savings.

நான்:  எங்க ஊரு பக்கம், பொங்கல் நேரம் எப்படி களை கட்டும் தெரியுமா?  அழகா கோலங்கள் போட்டு, நடுவில பொங்கப்பானை வச்சு ........... அசத்துவாங்க.  அன்னைக்கு செய்ற பொங்கலும் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கும். எல்லாம் மிஸ் பண்றேன்.
சாலமன்:  ஆமாம். பொங்கல் நேரம்,   பெண்கள் ஸ்பெஷல் ஆக இருக்கும். ரொம்ப மிஸ் பண்றேன்.
நான்:  என்னது? பெண்களா?
சாலமன்:  பொங்கல்னு தான் சொல்ல நினைச்சேன். சாரி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு.

நான்,   மியாமி பீச்சில்,  ஜொள்ளி கொண்டு இருந்த ஒரு வயதானவரை காட்டி, " இந்த கிழட்டு வயசிலேயும் குளுகுளுனு ஜொள்ளு விட கேக்குதே. கொடுமை!
சாலமன்:  A man is as old as he feels; a woman is as old as she looks.  அப்படின்னு நான் சொல்லல. வேறு யாரோ சொல்லி வச்சது, இப்போ ஞாபகம் வந்தது. 


நான்:  இந்த ஸ்வீட் நல்லா இருக்கா?
சாலமன்:  லாஸ்ட் டைம் செய்து இருந்தது இன்னும் நல்லா இருந்துச்சு.
நான்:  அப்போ,  இன்னைக்கு செய்தது  நல்லா இல்லையா?
சாலமன்:  சே, சே..... அப்படி நான் சொன்னா,  எனக்கு டைம் நல்லா இல்லைனு அர்த்தம்.

 As I always say, "there is never a dull moment in our married life."  எங்கள் இருவரையும் இணைத்து வைத்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்றேன்.  Praise the Lord!


படங்கள்:  கூகிள். நன்றி.

Wednesday, April 7, 2010

"cell"லாதே யாரும் கேட்டால்!

 கடந்த ஒரு வருடத்தில்,  எனக்கென்று வாங்கி கொடுக்கப்பட்ட  நான்காவது செல் போன் மீண்டும் பணால்........ யாராவது திருடி இருந்தால், சப்பை மேட்டர் என்று தள்ளி இருக்கலாம். ஆனால்...... வீட்டுக்குள்ளேயே....... என்ன ஆச்சு? எங்கே போச்சு? யாம் அறியோம்  பராபரமே!   தொலைந்து போய் விட்டது. சரி, சரி...... "கொசு வலை" தத்துவம் நினைவு படுத்தி விட்டீர்கள். நான் தொலைத்து விட்டேன்.  

இரண்டு வாரங்களாக வீட்டில் தேடி பார்க்கிறேன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.  அடிக்கடி, காணாமல் போகும் ஒற்றை sock(s),  பேனா, பென்சில்,  ஷாப்பிங் லிஸ்ட்,  சாவி கொத்து,  நண்பர்களின் முகவரிகள் அடங்கிய டைரி , இன்னும் பிற ஐட்டம்ஸ்  கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்று சென்று விட்டதோ  என்னவோ?


என் முந்தைய செல் போன்  என்ன ஆச்சு என்று ஆர்வம் தாங்கமால் கேட்கும் அன்பர்களுக்கு: 
மாவு கிரைண்டர்   சுத்துது:  (வெட்டி பேச்சில், வழக்கமாக வரும் flashback தான். வேற என்ன?)
ஒரு நாள் குளிருக்கு இதமாக, சூடாக மசாலா டீ குடித்து கொண்டே,   என் தோழர்  பூபாவிடம்  செல்லில் பேசிக்கொண்டு இருந்தேன். பூபா  என் மொக்கை கடியை, நண்பர் என்ற முறையில் பொறுத்து கொண்டாலும், அந்த sleek ஆன செல் போன் தாங்க முடியாது, என் கையில் இருந்து வழுக்கி , அடுத்த கையில் பிடித்து கொண்டிருந்த  டீ கப்புக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. அருமை நண்பரிடம் விஷயத்தை சொல்ல,  land line போன் எடுத்து கூப்பிட்டேன்.

நான் பதட்டத்துடன் சொல்லியதை பொறுமையுடன் கேட்ட நண்பர்: 
                                     "சித்ரா, cell  battery யை கழற்றி உடனே dry பண்ணுங்க."
நான் துடுக்காக பேசுவதாக நினைத்து கொண்டு: 
                                    "உடனேனா,  எப்படி?  microwave oven க்குள் தான் வைக்கணும்."
பூபா சளைக்காமல்:   "வைங்க. ஆனால்,  சரியாக ஏழாவது நொடியில்  வெளியே எடுத்துடுங்க."
நான்:                         "அது என்ன ஏழு வினாடிகள் கணக்கு?"
பூபா:                   "எனக்கும் ஒரு வாட்டி,  செல் போன்ல  தண்ணி பட்டுருச்சு. microwave oven க்குள் பத்து வினாடிகள்  வைத்து on பண்ணி விட்டேன்.  சரியாக  எட்டாவது நொடியில்  டப்புன்னு ஒரு சத்தத்தோட செல் போன்  வெடிச்சு தீ பொறிவந்து விட்டது. அவ்வளவுதான்.  என் செல் போன் கதை முடிஞ்சது." 

இந்த அனுபவத்தை கேட்டதும்,  மைக்ரோவேவ் பக்கம் திரும்பாமல்,  என் பார்வை துணி காய வைக்கும் டிரையர் பக்கம் ஒரு நொடி போகாமல் இல்லை.  செல் போன் எடுத்து ஒரு முறை பார்த்தேன். எந்த emergency care செய்தும் காப்பாற்ற முடியாதபடி, கதை முடிந்து இருந்தது. 
 

"ஆமாம், இப்பொழுது மறுபடியும் புது போன் தொலைச்சிட்டியே. வீட்டுக்காரர் என்ன சொன்னார்," என்று ஆர்வத்துடன் நீங்கள் கேட்டீர்கள் என்றால் - கேட்கணும் - கேட்பீங்க........
இரண்டு நாட்களாக  வீடு பூரா இண்டு இடுக்கு விடாமால் தேடிய போது, கிடைத்தது என் செல் போன் அல்ல. என் கணவர், ஒன்றரை வருடங்களுக்கு முன் தொலைத்த ipod.  ipod தொலைத்த விஷயத்தை, அது வரை  என்கிட்டே மனுஷன் சொல்லவே இல்லை.   ஆக,  அவர் கப்சிப்.   என்ன பொருத்தம்? ஜாடி கேத்த மூடி நாங்கள் தான்.

கிடைக்கும் -  அடுத்து வேற எதையாவது தொலைத்து விட்டு தேடும் போது, நிச்சயம் இந்த செல் போன் கிடைக்கும். ஆனால்,  அப்பொழுது தேடப்படும் அந்த பொருள் கிடைக்காது. அதற்கு, நான் வேற எதையாவது தொலைக்க வேண்டும். 
வாழ்க்கை தத்துவம் # 9,327.  இதற்கு பின்னாலும் ஏதாவது கர்மம் இருக்குமோ?


Wednesday, March 31, 2010

கண்கள் இரண்டால்...

இப்பொழுது தான், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்து விட்டு, எனக்கு வந்த தொடர் பதிவு அழைப்புகளுக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து பார்த்தால், அதற்குள்  முகுந்த் அம்மா, இன்னொரு அழைப்புக்கு பத்திரிகை வைத்து விட்டார்கள்.

http://mukundamma.blogspot.com/2010/03/love-in-heathrow.html
பெண் பார்த்த / போன அனுபவத்தை பத்தி எழுதணுமாம்.
பெண் பார்க்கும் படலம் இல்லை. ஆனால். சந்தித்த விதம்:  

நெல்லை மண்ணின் மகளாகிய  சித்ரா தேவியை   எனது  மாமன் மகன்,  பிரவீன்   மணப்பதாக பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு இருந்தது.  நான் பிரவீனை  காதலிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை.
பிரவீனின்  தாயின் வெடுக் பேச்சுக்களும் தீராத வம்புகளும் என் உள்ளத்தை நெருடாமல் இல்லை. பயம் என்று இல்லை -  என்றாலும் விருப்பமில்லை.
நம்புங்க.  அப்பொழுது, அதிகம் பேசாமலும், அதிர்ந்து பேசாமலும் இருக்க பழகி விட்ட எனக்கு , துணிந்து பேச பக்குவம் இல்லாததால், மனதுக்குள் புழுக்கம்.  பிரவீனின்  நல்ல மனதையும் காயப் படுத்த தோன்றாத என் மனதில், குழப்பங்களுக்கு பஞ்சமில்லை.

உறவினர் ஒருவரின் திருமணம் செல்ல, நெல்லை எக்ஸ்பிரஸ் ஏறி அமர்ந்த அந்த நல்ல நாளில்,  பிரவீனும் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.   அடுத்து நடக்கவிருக்கும் திருமணமாக, எங்கள் இருவரையும் முன் நிறுத்தி பெரியவர்களின் பேச்சு ஆரம்பித்தது.  தமிழ் வார இதழை கையில் வைத்து கொண்டு, படிப்பது போல வெறித்த பார்வையுடன் ஒதுங்கி அமர்ந்தேன்.  பிரவீன், இதை கவனிக்காமல் இல்லை.  எப்பொழுதும் நான்  பிடி கொடுக்காமல் பேசுவதில் தயங்கி போய் இருந்தவன்,  இன்று புரிந்தோ புரியாமலோ அவனும் அமைதியாக ஒதுங்கி அமர்ந்தான்.  ரயில், கோவில்பட்டி ரயில்  நிலையத்தை தாண்டும் போது, தண்ணீர் தருவது போல அருகில் வந்து, "கட்டிக்குவ இல்லியா?" என்றதும்,  காதில் விழாதது போல தண்ணீர் குடித்து விட்டு முகத்தை திருப்பி கொண்டேன்.

ரயில், சாத்தூர் நிலையத்தில் நின்ற இரண்டு நிமிடங்களில், பரபரப்புடன் இருவர் ஏறி கொண்டனர்.  தோழமையாய்  பிரவீன் அருகில் அமர்ந்து விட்டு, ரயில் சிநேக பார்வையுடன் அறிமுகம் செய்து கொண்டனர்.  தற்செயலாக,  வார இதழில் இருந்து பார்வை விலக்கி, புதிதாக வந்திருந்த இருவர் பக்கமும்  செலுத்திய அந்த தருணத்தில் - இருவரில் ஒருவர் , தன் பார்வையை என் பக்கம் எதேச்சையாக திருப்ப --------- சிலிர்த்தது  தேகம் மட்டும் இல்லை,  உள்ளமும்.  அருகில் அப்பாவியாய் இருந்த பிரவீனை  பார்த்ததும், ஏதோ தவறு செய்வது போல மனம் குறுகுறுத்தது. குனிந்து கொண்டேன்.


கண்களால்  தூண்டிலை  போட்டவரிடம், என் கயல் விழிகள் மாட்டிகொண்டன.  மீண்டும்  மீண்டும் சிக்கினேன் - தப்பினேன்.  இனி அந்த பக்கம் திரும்பவே கூடாது என்று அறிவு உத்தரவிட்டதும், என் மனம் ஏக்கத்துடன் போராடி கொண்டிருந்தது.   என் கையில் வைத்து இருந்த வார இதழை,  பிரவீன்  கேட்க, கொடுக்க நிமிர்ந்தவள், மெல்லிய புன்னகையுடன் அருகில் அமர்ந்து இருந்தவரை நோக்கினேன். "ஹலோ" என்ற ஒலி காதில் விழுந்து,  இதய பூட்டுக்களை உடைத்து எறிந்தது.   சந்தோஷப் புயல் சூறாவளியாய் உருவெடுக்க,  முத்தாய்ப்பாய் பதில் "ஹலோ" சொன்னேன். அதன் பின், இருவரும் பேசவில்லை.  தேவையும் இல்லை.  ஆனால், நான்கு விழிகளில் நவரச உணர்வுகளும் காதல் மொழியும் வழிந்த வண்ணம் இருந்தன.

அறிந்த வயது முதல் பழகிய ப்ரவீனுடன் எனக்கு  இல்லாத தேடல் ஒன்று, ஐந்தே நிமிடங்களில் அறிமுகமான ஒருவரிடம் இருப்பதை கண்டு, என்னை நானே திட்டி கொண்டேன்.  ஒரு வழியாக, என்னை என் மாமாவே அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.   இறைவன் எனக்கென்று வைத்திருந்த வரமாய், சாலமன்.   திடீர் என்று கலகலப்பாக மாறினேன். அனைவரிடமும் பேசினேன், சிரித்தேன்.  எனக்குள் வந்த மாறுதலை பிரவீன்  கவனித்து இருக்க வேண்டும்.
 "சித்ரா, இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாள்" என்று உரக்க சொன்னான். வெட்க சிரிப்புதான், என் பதில்.
 அந்த வெட்கத்தையும், முதல் முதலாய் அடையாளம் கண்டு கொண்டான்.

இரவு உணவுக்கு பின், வாசல் அருகே நின்று கொண்டு, வேகமாக முகத்தில் அடித்து கொண்டிருந்த காற்றில், என் பயங்களை தொலைத்து கொண்டு, சந்தோஷ வானில் சிறகடித்து -  கனவுகள் காண நின்றேன்.  பிறருக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அந்த உணர்வுகளை,  அனுபவித்து  பார்த்தவர்களுக்கு மட்டுமே, அதன் வீரியம் புலப்படும்.


பிரவீன்  அருகில் வந்தான். "சித்ரா, உனக்கு சாலமனை ரொம்ப பிடித்து இருக்கிறது. அவருக்கும் உன்னை ரொம்ப பிடித்து இருக்கிறது போல. அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார்." என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.
இப்பொழுது, எனக்கு குற்ற உணர்வு மேலோங்க, "பிரவீன், என்ன சொல்லவென்றே தெரியவில்லை. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. உளறாதே" என்றேன்.
"இல்லை சித்ரா.  எனக்கு, உன் மேல் வைத்து இருக்கும் அன்பை வெளிக்காட்ட தெரியவில்லை. ஆனால், உன் உணர்வுகள் ஒவ்வொன்றையும் எனக்கு புரிந்து கொண்டே இருக்கும்.  இன்று உன் முகத்தில் இருக்கும் சந்தோஷம், எனக்கு புதிது. இன்னும் அழகாக தெரிகிறாய். "
என் கண்களில் நீர்த்துளிகள்.  பிரவீனின்  இந்த நல்ல உள்ளத்தையும் அன்பையும் நான் ஏன் இன்று வரை புரிந்து கொள்ள முயலவில்லை? இந்த நொடியில் புரிந்த பின்னும்,  அவன் மேல் காதல் உணர்வு ஏன் என்னுள் துளிர்க்கவில்லை?
பருவத்தை குறை சொல்வதா?  காரணம் தெரியவில்லை.

பிரவீனின்  பெரு முயற்சியால்,   எதிர்த்து கொண்டிருந்த  வீட்டு பெரியவர்களின் சம்மதத்துடன்,  ஆறு மாதங்களுக்கு பின், சாலமன் + சித்ரா திருமணம் நடந்தேறியது.   வெறும் ரயில் சிநேகம் என்று இருக்க வேண்டியது,  காதல் பயணங்கள் முடிவதில்லை என்று தொடர வருகிறது.  பிரவீன், இரண்டு வருடங்களுக்கு பிறகு, தூரத்து உறவான இன்னொரு அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு நெல்லையிலேயே வளமையுடன் இருக்கிறார்.

பிரவீனை கணவனாக  கண்டு கொண்டு  நேசிக்க போராடி தோற்று இருக்கிறேன். ஆனால், இன்று ஒரு அண்ணனாய் அடையாளம் கண்டு கொண்டு, பாசத்தால் அவனுடன் உரிமையுடன், இப்பொழுதும் பழக முடிகிறது.  பிரவீனை  திருமணம் செய்து இருந்தால் கூட, இந்த மரியாதையும் மதிப்பு மிக்க அன்பும்  பாசமும் அவர் மேல் வைத்து இருப்பேனா என்பது சந்தேகமே.    சில சமயங்களில், உறவு மாறி வரும் போது, ஆழமான அன்பு, அழுத்தமாய் இதயத்தில் கோவில் கட்டி விடுகிறது.

பின் குறிப்பு:  இந்த பதிவில் வரும் சித்ரா தேவி நான் தான் என்றும் - சாலமன் , எனது கணவர் சாலமன் தான் என்றும், பிரவீன்  எனது மாமன் மகன் தான் என்றும்  - நீங்கள்  நினைத்து  கொண்டு வாசித்து இருந்தால் கம்பெனி பொறுப்பு எடுக்காது.  நிச்சயமாக இது எங்கள் காதல் கதை அல்ல.  ஏப்ரல் முதல் தேதி என்று நினைவு படுத்தி கொள்கிறேன்.
ஆட்டோ அனுப்புகிறவர்கள், என்னை தொடர் பதிவுக்கு  அழைத்தவருக்கு  அனுப்புமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள். 
(நன்றி: stills - சுப்ரமணியபுரம் படம்)

Sunday, January 10, 2010

கண்ணா... Happy Birthday, Kanna!

சாலமன் ........... கண்ணா என்று நான் அன்பாய் அழைப்பவர்................என் ஆருயிர் கணவர் ............ ஜனவரி 12, பிறந்த நாள் கொண்டாடுபவர்.
 HAPPY BIRTHDAY,  கண்ணா!

"சாலமன்  பாவம்" என்றும், "சாலமனுக்கு  கண்டம் திருநெல்வேலியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்திருக்கு. தெரியாமா போய் மாட்டிகிட்டார் " என்றும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் சிலர்.. ................

நம்பினா நம்புங்க ........ பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம், கல்யாணத்துக்கு முன் சரியான கட்டுப்பெட்டி சித்திரமாக தான் இருந்தது. (எனக்கே இதை இப்போ நம்ப முடியலை. நீங்க நம்பவா போறீங்க?)

அம்மாவின் கரிசனையுள்ள கண்டிப்புக்கும் ஊராரின் பொல்லாப்புக்கும் மதிப்பு கொடுத்து, பயம் கலந்த அடக்க சுந்தரியாக வளர்ந்தேன்.  (யாரது அங்கே? "அப்போ அடக்கம் கிலோ ஒரு ரூவாக்கு கிடச்சுதோ என்னவோனு கேட்டது?"  அப்படியெல்லாம் கேக்கப்படாது......)

ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசிட்டாலே, உலகம் பூரா நம்ம விஷயம் நாறி போச்சுன்னு நினைச்ச கூட்டத்தில் இருந்தவ நான்.  (அவங்க மனதில் இருக்கும் துர்நாற்றம் அவங்க வாயில் வீசுது. அது நம்ம கவலை இல்லன்னு ஒதுக்கிட்டு  போக இப்போ புரியுது.)

அந்த பக்கம் மதுரை, இந்த பக்கம் கன்னியாகுமரி, ஒரு பக்கம் தூத்துக்குடி, மறு பக்கம் குற்றாலம்  - தாண்டாத "உலக" வரைபடத்துக்குள் இருந்தேன். (இப்போ profile photo பின்னால் இருக்கும் மேப் என்ன சொல்லுது என்று யாரும் தலையை சொரிய வேண்டாம். இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை.)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரம்  சாலமன் உடன்  பார்த்து பேசி பழகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். திருமணத்துக்கு முன் தினம் தான்,  ஹலோ சொன்னதோடு சரி. (அதனால்தான் கல்யாணம் நடந்ததோ? நியாமான கேள்வி.)

கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள்,  Eric Clapton பற்றியும் Martin Scorsese பற்றியும் இன்டர்நேஷனல் அரசியல் பற்றியும் சாலமன் பேச ஆரம்பித்தார். ரஜினியையும் தமிழ் நாட்டு அரசியலையும் நம்மூரு மசாலா பட டைரெக்டர்களையும்   தாண்டி பார்த்திராத நான், அமைதியாய் இருந்தேன்.
தெளிந்த நீரோடையாய் சலனமின்றி என் முகம் - அறியாமையில் .
தமிழ் படத்தில் வருமே: முக்கிய கதா பாத்திரத்தின் முகத்தில் எரி மலை வெடிக்கும், கடல் கொந்தளிக்கும். அப்படி அவர் முகம், அதிர்ச்சியில் - அப்படித்தான் எனக்கு தோன்றியது.
ஒரு ஆப்ப சோப்பையை கட்டிகிட்டோமேனு  அவர் உள்ளுக்குள்ள feel பண்ற மாதிரி இருந்துச்சு.  அழுகுணி நடிகை மாதிரி அழ தோணுச்சி.
(டொயெங் டொயெங் ..... வீணை மூசிக் கேட்டுச்சு. சோக பாட்டு  டைம்.)

ஆனால் அவர், ஒரு புன்முறுவலுடன், என்னை பாத்து - ஆமாங்க, இந்த அசடை பாத்து:
"I love you" என்று சொல்லிவிட்டு நெத்தியில் முத்தம் இட்டார்.
ரொம்பவும் பொறுமையாக, "எனக்கு தெரிந்ததை பிடிச்சதை சொல்றதை விட, உனக்கு பிடிச்சதை சொல்லு. கேக்குறேன்." என்றார். இப்போ நிஜமாவே என் கண்ணில் தண்ணீர்.
(ஸ்டாப் த  டொயெங் டொயெங் வீணை மூசிக். இது,  டூயட் டைம் .... டூயட் டைம்..... டூயட் டைம்......)

கொஞ்சம் கொஞ்சமாக என் ஆர்வத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்டு, என் குறுகிய உலகத்தின் எல்லை கோடுகளை பெரிதாக்கினார். அடடா, உலகம்னா பாளையங்கோட்டையில் எனக்கு  தெரிந்த நாலு தெருக்கள் மட்டும் இல்ல, தமிழ் சினிமா உலகம் மட்டும் அல்ல, அதையும் தாண்டி  ரசிக்க தெரிஞ்சுக்க இவ்வளவு விஷயங்கள் இருக்கானு ஆச்சர்யப்பட்டேன்.

அவருக்கு, நான் இதயம் என்றால், நண்பர்களும் புத்தகங்களும் இரண்டு கண்கள் என்பதை சில நாட்களிலேயே புரிந்து கொண்டேன். (என் மூளை அப்போ அப்போ  வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சிரும் போல.....நல்ல வேளை - நான் அவர் மூளை இல்லை.)

 தன் நண்பர்களை அறிமுகப் படுத்தி வைத்தார். ஒரு இள வயது ஆண் மகனை பார்த்து புன்னகைத்தாலே, அது காதல்தான் - ஒரு ஆணுடன் தோழமையாய் பழகுவதால், ஒரு பெண் தனக்கு இன்னலை தான் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து கொள்கிறாள் என்ற நான் அப்போ வச்சிருந்த  இலக்கணங்கள் படி, ஆண்களிடம்  என்ன பேசுவது, எப்படி பழகுவது, எல்லை கோட்டை எங்கு வரைவது, என்று சுத்தமாக புரியாமல், அரண்டு போய் ஒளிந்து கொள்வேன்.  (இதான் girls only school - girls only college மட்டும் போய்  (படிச்சி?!) வந்ததில் உள்ள பாதிப்போ?  சும்மா சொல்லிக்க வேண்டியதுதான்.)

அப்படியும் மீறி பேச வர வேண்டிய வேளையில், மூச்சுக்கு மூச்சு அண்ணா  போட்டு கொள்வேன். தங்கச்சி செண்டிமெண்ட் எத்தனை படத்தில் வொர்க் அவுட் ஆகியிருக்கு. தங்கச்சி என்ற போர்வையில் பாதுகாப்பு வளையம். ("Do not cross the line" என்று எழுதி ஒரு போர்டு மாட்டியிருக்கலாமோ?)
நோட் டு செல்வா அண்ணா:
செல்வா அண்ணா, உங்களை நான்  பாசமலர் மற்றும் கிழக்கு சீமையிலே  பாசத்துல தான் அண்ணான்னு இன்னும் கூப்பிடுறேன்.  கிண்டல் ஆரம்பிச்சுடாதீங்க.

நண்பர்களை நண்பர்களாக பார்க்காமல் அண்ணன்களாக பார்ப்பது என் மனதின் பயங்களை காட்டியது.

எனக்குள் ஒரு மிருகம் தூங்கி கிட்டு இருப்பதாக நம்பி அதை எழுப்பி  விஸ்வரூபம் எடுக்க பெரும் பாடு பட்டார், சாலமன். இந்த  அவிஞ்ச  முட்டையை  பெரிய ஆம்லட் ஆக்க பாக்குராறேனு   தோணிச்சி.  எனக்குள்ளேயே  ஒளிந்து கொண்டிருந்த என்னை தேடி, எனக்கே அடையாளம் காட்டி கொடுத்தார். புதிய பிறவியாக நான் -------------- (ஐ.... இந்த இடைவேளைக்கு அப்புறம் வர சாட்டை ராணி ரோல்  நல்லா தான் இருக்கு.)

உறிச்சாத்தான் கோழி, குழம்புக்கு ஆகும்; புரிஞ்சாத்தான் தோழி, கதைக்கு ஆகும் என்று தெரிஞ்சிகிட்டேன்.
I came out of my shell.

நட்பின் உன்னதமே, "ப(இ)ச்சை" உணர்வுகளையும் தாண்டி உயர்ந்த இடத்தில் இருப்பது - நம் மனதும் எண்ணமும் தூய்மையாய் இருந்தால் போதும்.
வேண்டா நட்பிடம் விலகி நிற்பதில் தப்பில்லை.
நட்பு ஆணிடம் ஒரு விதம் பெண்ணிடம் ஒரு விதம் என்று பிரிந்து திரிந்து வருவதில்லை - A good friend is a good friend, always. மற்றவர்கள் தெரிந்தவர்கள் - வெறும் acquaintances.
வாழ்க்கையில் உற்சாகமாக நாம் இருக்க, வாழ்க்கை கலகலக்க நண்பர்கள் வருகிறார்கள் -
ஆதாயம் இருந்து வருவது நட்பே அல்ல . நெருங்கிய நண்பர் என்றால்  உதவி என்பது கேக்காமலே வரும்.

அவர் நண்பர்களில் சிலர், அவரை விட எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். புதிய நண்பர்களையும், ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் கடவுள் தந்தார். பெருமித சிரிப்புடன் , "I have created a monster" என்று ஒரு நாள், சாலமன்  சொன்னார்.

ஒரு முறை, எனது இ-மெயில் id யை எப்படியோ நடராஜ் என்பவர் கைக்கு கிடைக்க,  தொடர்ந்து மின்-அஞ்சல்கள் அனுப்பி, "தொல்லை" கொடுக்க ஆரம்பித்தார். என்னை சிட்டு என்று குறிப்பிட்டு, தன்னை நட்டு என்று நான் குறிப்பிடும் படியும் எழுதி தள்ளுவார். என்ன என்னவோ "கிறுக்கி" தள்ளியிருப்பார். நானும் பதில் அனுப்பாமல், delete செய்தாலும், நிறுத்தவில்லை. நான் சாலமன் இடம் புலம்ப, " என்னை விட எவ்வளவு அழகாக ரசிச்சு கடிதம் எழுதுறான். உனக்கு போர் அடிக்குதுனு சொன்னியே. பதில் எழுது. உனக்கு வேடிக்கையா டைம் பாஸ் ஆகும். வேணா முதல் பதிலுக்கு நானும் உதவி செய்யவா?" என்று  சளைக்காமல் கிண்டல் செய்தார். அவரை முறைத்து கொண்டே, "Spam" என்று நடராஜாவின்  மெயில் id யை ரிப்போர்ட்  செய்த பின், அந்த தொல்லை விட்டது. நான் எதை பற்றியும் யாரை பற்றியும் மனம் விட்டு பேச முடியும், என் தோழர் கண்ணாவிடம்.

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா வந்த புதிதில்,  அடுத்தாத்து அம்புஜங்கள் சிலர் (வேற யாருங்க, நம்ம இந்திய பெண்மணிகள் சிலர்தான் - எல்லோரையும் குறை சொல்ல மாட்டேன். சிலரே சிலர்தான்.) , என்னை பற்றி தவறாக பேசுவது என் காதுக்கு வந்த போது, என்னை புரிந்திருக்க வேண்டிய தோழிகள் சிலரே இப்படி பேசுகிறார்களே   என்று வருத்தப்பட்டேன். "குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் பேச்சுக்கு நீ ஏன் வருத்தப் பட வேண்டும்?      I trust your love for me. நீ அவங்க பேசுறதை பத்தி  கவலை படாதே. சந்தோஷமா இரு." என்றார்.    போங்கடி நீங்களும் உங்க நட்பும் என்று ஊதி தள்ளி விட்டேன். அவர், அப்படி என்னை சரியாக direct பண்ணாமல் இருந்திருந்தால், எத்தனை நல்ல நண்பர்களை, இந்த உள்ளூர வயித்தெரிச்சல் கோஷ்டிகளுக்காக,  நான் இழந்திருப்பேன்.

2006 - 2007 இல், Blog concept, வந்த புதிது.  எனக்கு blogging  என்றால் என்ன என்றும் தெரியவில்லை, புரியவில்லை. அதனால் interest உம் இல்லை. இருந்தும் என் பெயரில், அவரே ஜனவரி 2007 இல், blog create செய்து வைத்தார். கிட்ட தட்ட மூன்று வருடங்கள் கழித்து (சரி, சரி, ரெண்டே முக்கால் வருடங்கள்) 2009 October இறுதியில், நான் ப்ளாக் எழுத ஆரம்பிக்கும் வரை, என் மீதும் என் வெட்டி பேச்சு திறமை  மீதும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். blog உலகில் எனக்கு புதிய நண்பர்கள் கிடைக்க, என்னை விட அதிக சந்தோஷத்தில் இருக்கிறார், என் ஆருயிர் நண்பர், சாலமன்.

பின் குறிப்பு:

என் நண்பருக்குள் இருக்கும் என்  கணவர் சாலமன்: இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றா? நம்ம கணவர் அலாரம் அடிக்குதே.....ஓ. ..... இந்த மாதம் நம்ம திருமண நாளும் வருது.  ......... gift ..... gift ......
எனக்குள் இருக்கும் அவரின் மனைவி: இப்படி இப்படி நீங்க ரியாக்ட் பண்ணிதான் மொத்த அனுதாப ஓட்டும் உங்களுக்கு கிடைக்குது. கண்ணாஆஆஆஆஆஆஆ  .................



Saturday, November 14, 2009

revolver rita தான் என் சகோதரியா?



துணிவு, தைரியம், மன பலம் என்கிறோமே அந்த ஆயுதங்கள்,  சிலரிடம் இருக்கும்வரை அவர்களை பொல்லாதவர்கள் ஆக்குகின்றன.  அவர்களை  எதிர்ப்பவனி (ளி) டம் இருந்தால், எதிர்ப்பவனை (ளை)  வல்லவன் (ள்) ஆக்குகின்றன.  இந்த வாழ்க்கை தத்துவம் 10876 ஐ என் சகோதரி, மூலமாக அறிந்து கொண்டேன். 

அவளுடன் சென்ற பஸ் பயணங்களை மறக்க முடியாது. ஒரு முறை,  மிகவும் நெரிசலான கூட்டமுள்ள பஸ் ஒன்றில் போக நேர்ந்தது. இடி மன்னர்களின் சொர்க்க பூமியாக பஸ் மாறியிருந்தது. என்னை மாதிரி சில  பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்து கொண்டு, எப்பொழுதடா நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியாது நின்று கொண்டு பயணித்தோம். ரொம்பவும் அநியாயத்திற்கு ஒருவன், எங்களிடமும் எங்கள் அருகில் இருந்த மற்ற பெண்களிடமும் தன் லீலைகளை தொடர்ந்து கொண்டிருந்தான். 
ரிவால்வர் ரீட்டா, சத்தமாக: "ஏன் இவ்வளவு கஷ்டப் படுறீங்க? நாங்க அந்த டிரைவர் அண்ணாச்சி பக்கம் உள்ள இடத்தில் வரிசையாக நின்று கொள்கிறோம். நீங்க ஆசை தீர, மொத்தமாக  இடிச்சுட்டு  போய்டீங்கன்னா, மீதி தூரமாவது  நாங்க நிம்மதியாய் இருப்போம்" என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டார்கள். டிரைவர் அண்ணாச்சியும் தனக்கு கொடுக்கப்பட்ட புது பொறுப்பில் உச்சி குளிர்ந்து, பெண்களை காப்பற்ற வந்த ஹீரோவாய்,  அந்த இடிராசாவை திட்ட,  அவமானத்தில் தலை குனிந்தவன் அடுத்த நிறுத்தத்தில் முதல் ஆளாய் இறங்கி காணாமல் போனான்.

மற்றொரு முறை, இரவு பயணத்தில், பின் சீட்டுக்காரன்,  அந்த  பஸ்ஸில் போடப்பட்ட குப்பை படத்தின் கனவு கன்னியை நினைத்து கொண்டோ என்னவோ,   எங்கள் இடுப்புகளில் கிடார் வாசித்துக்  கொண்டு இருந்தான். ரிவால்வர் ரீட்டா, தன்  கையில் இருந்த safety pinனை நேராக வளைத்து அவன் கையில் ஆழமாக குத்தி அழுத்தமாக கோடு கிழித்தாள். தூண்டிலில் மாட்டி கொண்ட மீனை போல், இவன் கை, இவள் pin தூண்டிலில் மாட்டி கொண்டது. கையை சட்டென்று எடுக்கவும் முடியவில்லை. ரத்தமும் கொட்ட ஆரம்பித்தாலும், படு பாவிக்கு கத்த முடியாத சூழ்நிலை. இவள் பின்னை எடுத்த பிறகு, கையை தன் அருகில் இழுத்து கொண்டவன், தேள் கொட்டிய திருடனாக இருக்க, நாங்கள் நிம்மதியாக பயணித்தோம். காலையில் அவள் காட்டிய பின்னை வெளிச்சத்தில் பார்த்தோம், அப்படி ஒரு துரு பிடித்த பழைய  பின். ரொம்ப கூலாக, "பின்ன இவனுக்காக நான் கடையில் இருந்து புது பின்னா வாங்கி வர முடியும்?" என்றாள். அதில் இருந்த துருவுக்கு, அவன் tetanus injection, உடனே எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இதை படிக்க நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டான். 

இரண்டு வருடங்களுக்கு முன் கூட இவள் என்னை ஆச்சரியப் படுத்துவதை நிறுத்தவில்லை.  இன்சூரன்ஸ் agent ஆகவும் இருந்த ஸ்கூல் ஆட்டோ டிரைவர், இவள் கொடுத்த இரண்டு மாத premium amount ஐ ஒழுங்காக கட்டாமல் தானே வைத்து கொண்டு, இவள் receipt கேட்கும் போதெல்லாம் வெவ்வேறு காரணங்கள் சொல்லி இழுத்து அடித்தான்.  இவள் கணவரும் திடீரென வேறு ஊருக்கு மாற்றலாகி  போய்விட,  அவன் கேட்க ஆளில்லை என்று தெனாவெட்டாக பதில் சொல்ல ஆரம்பித்தான். இவள் வேறு ஆட்டோவில் ஏறி இன்சூரன்ஸ் ஆபீஸ் போய் விவரம் அறிந்தாள். வந்த ஆட்டோக்காரனிடம் அவன் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஏதோ காரணம் சொல்லி, பணத்தை ஏமாற்றிய அட்டோக்காரனின் வீட்டுக்கு தனியாக சென்று விட்டாள். இவள் போன நேரம், அவனின் மனைவி மட்டும் இருக்க, அவளிடம்: " போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன் பண்ணிட்டு தான் வரேன். அவங்க உடனே arrest பண்ண வறேன்னாங்க. நாந்தான் ஒரு முறை நேரில் கேட்டு பாத்துட்டு சொல்றேன்னு வந்திருக்கேன். அவன் வீட்டில் இல்லையா? நாளை மாலைக்குள் அவன் பணத்தை என்னிடம் கொடுத்து விட்டால், நான் போலீசில் கொடுத்த complain ஐ வாபஸ் வாங்கிக்கறேன்" என்று பீலா விட்டு இருக்கிறாள். பயந்து போன மனைவி, கணவன் வந்ததும் அனுப்பி வைப்பதாக சொல்லிய பின்தான் ரிவால்வர் ரீட்டா வந்திருக்கிறாள். 

மறு நாள் மாலை, வந்த ஆட்டோ டிரைவர், இவளிடம் பணத்தை இன்னும் ரெண்டு வாரத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீஸ் complain அவள் உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்றும் சொன்னான். இவள் அவனிடம், " உன் பேச்சை நான் எப்படி நம்பறது? ரெண்டு வாரத்தில் அந்த அமௌன்டை எழுதி திருப்பி தரேன்னு நான் சொல்ற மாதிரி எழுதி கொடு. நாளைக்கே போய் வாபஸ் வாங்குறேன்" என்றாள். அப்போது தப்பிக்கும் விதமாக அவனும் இவள் சொல்லியபடி எழுதி கொடுத்து விட்டான். இரண்டு வாரமாக இவள் காத்திருக்க, அவன் ஆள் எஸ்கேப். இவள் இன்னொரு ஆட்டோ டிரைவர் மூலமாக, தான் மீண்டும் போலீஸ் போக போவதாக சொல்லி தகவல் அனுப்பி இருக்கிறாள். கடுப்பாகி போன டிரைவர் cum agent, மறு நாளே அவள் வீட்டுக்கு வந்து உதார் விட்டு இருக்கிறான். 

 ஆனாலும், கலவரப் படாமல், ரிவால்வர் ரீட்டா அமைதியாக, "அட முட்டாள் அண்ணே, முதலில் நான் சொன்னப்போ நீ யோசிக்கவில்லை. நான் உன்னிடம் கொடுத்த premium பணத்திற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இப்போ நீ எழுதி கொடுத்த பேப்பர் இருக்கிறது. அதை ஏற்கனவே ஒரு வக்கீல் கிட்ட பத்திரமாக கொடுத்து வச்சிருக்கேன். நீ ஏமாற்றினாலோ என்னை காயப் படுத்தினாலோ போலீசுக்கு evidence இருக்கும்" என்று அவுத்து விட்டு இருக்கிறாள். வாயடைத்து போனவன், மறு நாளே பணத்தை திருப்பி கொடுத்து விட்டான். செல்லும் முன், "சின்ன பொண்ணு, ஒண்ணும் தெரியாத பொண்ணுன்னு நினைச்சி ஏமாத்த பாத்தேன். நீ விவரமா என்னை மடக்கிட்டீயே!" என்றான். 

அத்தோட விட்டாளா? இல்லாத பானையில் மோரு என்ன வெண்ணையே எடுத்து காட்டுறேன் என்ற மாதிரி, அவன் எழுதி கொடுத்த தாளை வைத்து, அந்த இன்சூரன்ஸ் company இல் முறை படி action எடுக்க வைத்து அந்த ஆட்டோ டிரைவர் இன் agent அந்தஸ்த்தை cancel பண்ண வைத்து விட்டாள். 
சொல்லுங்க, இவளுக்கு நான் ரிவால்வர் ரீட்டா என்று பட்ட பெயர் வைத்தது சரிதானே?
பயந்து ஒடுங்கும் போது, வாழ்க்கை நம்மை அழ வைக்கிறது. துணிந்து எதிர்த்து நின்றாலோ, வாழ்க்கை நம்மை சிரிக்க வைக்கிறது.  (தத்துவம் # 10877)


Saturday, November 7, 2009

தையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை?

சமையல் கலையை பத்தி எழுதியாச்சு. இன்னைக்கு எந்த கலையில் கைய வைக்கிறது? ஆஹ்ஹ் ..... தையல் கலை.
தையல் -  அது ஒரு கலை.  நேர்த்தியாய் செய்யப்படும் ஒரு அழகு வேலைப்பாடு. 
அது என்னவோ தெரியலை - sewing என்று சொல்லும்போது, அது ஒரு கலையா தெரிய மாட்டேங்குது. ஏதோ கிழிஞ்ச துணி தைக்கிற மாதிரி தான் இருக்கு. 


நான் 9th படிக்கும்போது, Sr.Henrietta உம்  ஒரு தையல் டீச்சரும் மாத்தி மாத்தி வந்து தையல் class எடுப்பாங்க. முதல் நாள் classil introduction for embroidery நடந்தது. "தையல் என்பதற்கு பெண் என்றும் அர்த்தம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கலை, இது. ............" 


அந்த வருடத்திற்கு class project,  ஒரு tablecloth க்கு எல்லா corner லேயும் embroidery இல் பூக்கள் போட வேண்டும்.
அதை  நான் போட்டிருக்க மாட்டேன் என்று என்னை நன்கு தெரிந்த எல்லோரும் correctaa guess பண்ணியிருப்பாங்க. மற்ற மாணவிகள்  embroidery போட கற்றுக் கொண்டிருந்த போது, நான் அந்த table clothai வாங்கி என் அம்மாவையும்  என் தங்கை, இந்திராவையும் முடித்து தரும்படி சொல்லி வீட்டில் கொடுத்து விட்டேன். punishment il இருந்து தப்பிக்க, classil என் அருகில் இருந்த தோழியின் tablecloth தின் ஒரு corneril அவள் வேலைப்பாடு செய்து கொண்டிருக்க, மறு முனையை desk க்கு அடியில் விட்டு மேலே என் பக்கமாக இழுத்து அது வேறு table cloth மாதிரி  நான் சும்மா பிடித்து கொண்டிருப்பேன். ஊசியில் நூல் கோர்த்து, நூலின் இறுதியில் முடிச்சு போடாமலே சும்மா ஊசியை வைத்து  குத்தி இழுத்து தைப்பது போல் பாவனை செய்தேன். 
அதனால்தானோ என்னவோ, இன்றுவரை embroidery னு  spelling தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ளவில்லை. 


தையலில் பல வேலைப்பாடுகளை கற்று தையல் ராணிகளாய் இருப்பவர்களை கண்டு அதிசயப் பட்டிருக்கேன். எங்க ஊரிலே நான்கே இந்தியன் குடும்பங்கள். அதில் பெல்லா, தையல் கலையில் கை தேர்ந்த  தையல். 
நூலை நெருக்கமா வச்சு தையல் போடுறாங்க - அதுதான் embroidery.
நூலை ஒரு  துணியில்  ஷேப்பா வெட்டி தைக்கிறாங்க - 
அதுதான் dress.
நூலை வைச்சு ஒரு  துணியை பல துணிகளோடு ஒட்டு போட்டு 
தைக்கிறாங்க - அதுதான் quilt.
நூலை வச்சு ரெண்டு மெலிஞ்சு போன கில்லி குச்சி வச்சு லூசா ஆட்டுறாங்க  - அதுதான் crochet. 
நூலை ரெண்டு பெரிய குத்தூசி மாதிரி இருக்கிற - நம்ம ஊரில் வெள்ளிகிழமையோ சனிகிழமையோ மட்டும் சில பெண்கள்,  தலைக்கு குளிச்சிட்டு, அது அந்த தெருவுக்கே தெரிய மாதிரி நின்னுகிட்டு,  ஒரு சிணுக்குவாரியோ சிணுக்கொலியோ வச்சிக்கிட்டு சிடுக்கு சிக்கு எல்லாம் எடுப்பாங்களே - அந்த மாதிரி ரெண்டை வச்சிக்கிட்டு - கோலாட்டம் அடிக்கிற மாதிரி பண்றாங்க - அதுதான் knitting. 
இப்படி பல வித்தைகளை நூல் கண்டில் செஞ்சு காட்டுறாங்க. 


எனக்கு வீட்டில் ஊசி நூல் வச்சுக்கவே யோசனையாய் இருக்கு. நம்ம வெட்டி பேச்சு தொல்லை தாங்க முடியாம யாராவது என் வாயை சேத்து வச்சு தைச்சிட்டுங்கன்னா? எதுக்கு வம்பு? வேணாம், அப்பு - வேணவே வேணாம்.


அது போகட்டும். இப்ப என் மூளை ஏன் எங்க தையல் டீச்சர் சொன்ன முதல் நாள் introduction வார்த்தைகளை மட்டும் இன்னும்  நினைவு வச்சிருக்கு. ஆனால் அவங்க கத்து கொடுத்த embroidery யை நினைவு வச்சுக்கலை? 
அந்த topic இல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுது. அதுக்கு மேல போய் தையல் கலையை கத்துக்க மட்டும் மாட்டேங்குது.  பெண்ணை ஏன் தையல் என்று சொல்கிறார்கள்?  தையல் என்ற வார்த்தை பெண் என்றும் அர்த்தம் கொள்ளும் என்றால்,  தையல்காரன் என்ற வார்த்தை யாரை குறிக்கும் - என்ன அர்த்தம் கொள்ளும்?  பெண்ணுக்கு தையல் மாதிரி, ஒரு ஆணுக்கு கலைகளில் எந்த பெயர் பொருந்தும்? ஏன் தையல் என்ற தமிழ் வார்த்தையை நிறைய பேர் இப்ப use பண்ண மாட்டேங்குறாங்க? தையல் என்று சொன்னாலே என் மூளை,  நூல் கண்டில் சிக்கல் விழுந்தது போல் ஆகிறது.


அன்னைக்கும் இன்னைக்கும் எனக்கும்  தையலுக்கும் ஒரே போராட்டம்தான்.
தையல்னு  சொன்னியே எந்த தையல்னு சொன்னியானு கேட்காதீங்க. நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து - முடிச்சு போட்டு - இப்படி சுத்தி - அப்படி சுத்தி - கிட்டிபுல் விளையாண்டு - சிக்கு எடுத்து - சிடுக்கு போட்டு - கும்மி அடிச்சு - கோலாட்டம் ஆடி -  நேர்த்தியா பண்றாங்களே - அந்த தையல்தான்.

Monday, November 2, 2009

தம்பி, தங்க கம்பி.....(paasakiligal)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.............

மத்தவங்களை பத்தி தெரியலை. எந்த படைக்கும் நான் அஞ்சேன். Saibol இல்லைனாலும் இன்னொரு prescription strength medicine கொடுத்து என்னை காப்பாத்திடுவான். தம்பியே டாக்டரா இருந்தா அப்படி ஒரு வசதி.

என் ஒவ்வொரு இந்தியா trip பையும் கலகலப்பாக மாற்றி அடுத்து எப்போடா போவோம்னு எதிர் பார்க்க வைப்பதில் என் தம்பிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.  இன்று என் தம்பியின் companyai ரொம்ப தேடுகிறது.

நான் தமிழ் பாடங்களில் செய்யுளை படிக்க திணறிக் கொண்டிருந்த போது, செய்யுளின் இலக்கணம் அறிந்து, வெண்பா உட்பட சில செய்யுட்களை அவனே உருவாக்குவான். அவனுடைய கவிதைகள், நாடகங்கள். நடிப்புக்கு நான் முதல் விசிறி. He is a performer.

மூன்று வருடங்கள் முன்பு வரை நானும் அவனும் சேர்ந்து போனால், சகோதரி சகோதரன் போகிறார்கள் என்று சொல்லியவர்களை விட குண்டோதரியும் குண்டோதரனும் போகிறார்கள் என்று சொல்லியவர்கள்தான் அதிகம். யார் கண் பட்டதோ - இப்போ அவன் diet, exercise, healthy measure என்று சொல்லி அவன் மட்டும் மெலிந்து - - - comedy piece மாதிரி இருந்தவன், சூப்பர் ஹீரோ மாதிரி மாறிட்டான். நல்லா இருக்கட்டும்.

மூளையே தனியா முட்டை போட்டு அறிவு குஞ்சுகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு examsukku படிப்பான். ஆனால் exams எழுதி முடித்த கையோடு அன்று இரவே நைட் ஷோ ஒரு படத்துக்கு போவான் பாருங்க ...... தியேட்டரில் ரிலீஸ் ஆகி    மூன்றே நாட்கள் ஓடிய - தியேட்டரின் projector operator உட்பட பத்தே பேர் ஒரு காட்சி வீதம் பாத்த படங்கள் லிஸ்டில் உள்ள - படமாக இருக்கும். "ஏண்டா? அப்படி ஒரு படம் பாக்க போன?" என்று கேட்டால், "மூளை இப்பதான் balanced levelukku வந்திருக்கு. ஓவரா படிச்சிட்டேன். இந்த படம் பார்த்த பிறகு சரியா இருக்கு" என்பான்.

எந்த exams எழுதினாலும் first rank or gold medal  வாங்கும்படி கடவுள் அவனுக்கு ஆசிர்வாதம் தந்திருக்கிறார். ஆனால் நான் அவனிடம், அப்பா அம்மாவிடம் இருந்து intelligence genes,  எனக்கு  அதிகம் எடுத்து கொள்ளாமல், என் share ஐயும் சேர்த்து அவனுக்கு கொடுத்து விட்டாதாக சொன்னாலும் எனக்கு நன்றி சொல்லுவான்.

அவனுக்கு உள்ள கிரிக்கெட் பைத்தியத்திற்கு treat செய்ய  அவனே psychiatrist ஆயிட்டான்னு கேலி பண்ணி கொண்டிருந்ததை, இன்னொரு ஆத்மா என்னை தட்டி, உன்னை அக்காவை வச்சிக்கிட்டு அவன் வேற என்னவா ஆவான் என்றதும், நிறுத்தி விட்டேன்.

நாங்கள் சண்டை போட்டு கொண்ட நாட்களை விட ஒருவரை ஒருவர் மொக்கை  - கடி - போட்டு "காயப்" படுத்தி கொண்ட நாட்கள் அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசும் போது,  வயசு, சைசு, படிப்பு, பொறுப்பு, வித்தியாசம் எல்லாம் மறைந்து உள்ளே தூங்கி கொண்டிருக்கும் குழந்தை தனம் விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறது. என் தம்பிக்குள் ஒரு நண்பனை காண்கிறேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்க கூடாதா என்று ஏங்குவதை விட, நம்முள் இருக்கும் குழைந்த தனமான குறும்பு உணர்வுகளை வெளியே கொண்டு வரும் உறவுகளை அடையாளம் கண்டு கொண்டால் என்ன? அவர்களோடு இருக்கும் போது பெரியவர்களின் கோப தாப - ஈகோ - மரியாதை - எதிர்ப்பார்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டால் என்ன?

என் தம்பியை அடுத்த  முறை சந்திக்கும் போது கண்டிப்பாக ஒரு தேங்காய் மாங்காய் பட்டாணி  சுண்டல் பொட்டலம் வாங்கி பங்கு போட்டு சாப்பிட வேண்டும் - பங்கு பிரிக்கும் போது சண்டை போட வேண்டும் - சண்டையில் சுண்டல் கீழே விழ வேண்டும் - கோபத்தில் அவனை திட்ட வேண்டும் - அம்மாவிடம் தம்பியை பற்றி குறை சொல்ல வேண்டும் - வேறு பொட்டலம் வாங்க வேண்டும் - அவனுக்கு கொடுக்காமல், "வெவெவ்வே..." சொல்ல வேண்டும் - சுண்டல் சாப்பிட்டு விட்டு அவன் சட்டையில் கைய துடைக்க வேண்டும் - அவன் அடிக்க வரும் போது ஓட வேண்டும் - அவன் மனைவியிடம் நானும் என் கணவரிடம் அவனும் முறையிட வேண்டும் ...................